விக்கிரமாதித்தியனின் இறுதி ரகசியம்.

252

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(30) விக்கிரமாதித்தியனின் இறுதி ரகசியம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஶ்ரீ வல்லபரும், வேதியர் வேணுநாதரும் காளிவனத்தில் குணவதி ஆற்றின் கரை அருகே பரந்த மணல் திட்டில் அமர்ந்து இருந்தனர். அன்று பௌர்ணமி.நிலவின் பூரணத் தண்ணொளி வசனகிரி மலை மீது வீசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர். இயற்கையின் செயலாம் இனிய நிகழ்வை உணர்ந்த ஞானியர்கள், மற்றவர்கள் காணாததை இவ்வுலகில் கண்டு மகிழ்ந்து இறைசக்திக்கு நன்றி கூறுவார்கள். குற்றம் குறையாகப் பிறர் கண்களுக்குத் தோன்றுவதிலும் இயற்கை அழகைக் காண்பான் ஞானி. வயோதியர்களில் முதிர்ந்த அழகைக் காணும் அவர்களின் கண்களுக்கு இளமை மிகுந்த யௌவனப் பருவத்தினரைக் கண்ணுற்ற போது குற்றமற்ற பார்வையை செலுத்தி காணும் அழகில் இறையருளைப் போற்றுவான். உண்மை ஞானியர்கள் பிரபஞ்சத்தின் அழகை உள்ளத்தில் அனுபவித்துப் போற்றுகின்றனர். இந்த அனுபவத்தைத்தான் போகம் என உரைத்தன தமிழ் மறைகள்.மணற்பரப்பில் அமர்ந்திருந்த இரண்டு பண்டிதர்களின் முன்பாக வேதாளரிஷி தோன்றினார். அவரை இருவரும் வரவேற்று அவரிடம் ஏடுகளை ஒப்படைத்தனர். நன்றி கூறிய வேதாள ரிஷி கழிவிரக்கம் நிறைந்த பார்வையை வேதியர் வேணுநாதர் மீது செலுத்திவிட்டு அவர்களின் எதிரில் தானும் அமர்ந்து கொண்டார்.

ஶ்ரீ வல்லபர் வேதாள ரிஷியிடம், “ஓ ரிஷியே நமது வேதியர் திரும்பவும் காலச் சக்கரப் பிரயாணத்திற்குத் தயாராகி வருகிறார். நாகராஜன் என்ற நாமகரணம் பெற்று இதே ரேவதியம்மை மீனாம்பாள் நாச்சியார் என்று இவருடன் வாழ்ந்து வருகின்றார். காட்டுக் கள்வன் காலன் என்கின்ற தம்பனவசியனால் இவர் மீண்டும் பழைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியது கிடையாது. இவரை ஆசீர்வதித்து அனுப்புவது உங்கள் கடமையுமாகும். தங்களிடம் ஏதோ முக்கிய செய்தியை அறிந்து கொள்ள விருப்பம் உற்றுள்ளார் ” என்றார். வேதாள ரிஷி ஆசி அருளிவிட்டு, “எம்மிடம் தந்த இந்த ஏடுகள் சக்தியம்மைக்கு ஈஸ்வரர் உபதேசித்தது. ஒன்று உலக நீதி ரகசியங்களை ஞானியர் அறிந்து கொள்ள எடுத்து இயம்புகின்றது. மற்றொன்று தீய சக்திகளை விலக்கக் கூறும் பரிகாரங்களாகும். இது ராஜன் விக்கிரமாதித்தியன் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய உண்மைகளாகும். மூன்றாவது வான் ஊர்திகளை உருவாக்கும் இயந்திர சாதனங்களை உருவாக்குதல் மற்றும் அதனை இயக்குதல் போன்ற அறிவியல் பாடங்களாகும். வேதியரே நாடாளும் ராஜனுக்கு நீர் செய்திருக்கும் இந்த உதவிக்கு ஏதும் ஈடாகாது. இனி நீர் காலச் சக்கரப் பிரயாணத்தை ஶ்ரீ வல்லபருடன் நீ தொடங்கலாம். எனது ஆசிகள் எப்போதும் உமக்கு உண்டு. இந்த ஜென்மத்தில் இருந்தது போன்றே, உறவினர்கள் யாருடனும் சேராமல் உமது குடும்பத்தினர் தனித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து வேதநாயகி உடனுரை சங்கமேஸ்வரர் அரசு புரியும் ஷேத்திரம் அருகே உள்ள வேதாள வனத்தில் உம்மை சந்திப்போம். தேவதைகள் உடனிருந்து காத்து வருவார்கள், அஞ்சற்க! ” என்றார்.

வேதியர் வேணுநாதர், ” ஓ வேதாள மகரிஷியே எமது பிரயாணம் தொடங்கும் முன் விக்கிரமாதித்திய மன்னனின் இறுதி வாழ்க்கை பற்றிய உண்மையை அறிந்து கொண்டு நிம்மதியுடன் சொல்கின்றேன். இந்த ஏடுகளின் ரகசிய உண்மைகளில் எமக்குத் தேவையானதை மட்டும் போதிக்க வேண்டுகிறேன் ” அடக்கத்துடனும் பணிவன்புடனும் கேட்டுக் கொண்டார். வேதாள ரிஷியும், ஶ்ரீ வல்லபரும் இதனை புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டனர். வேதாள ரிஷி, ” ஓ வேதியனே உமது சிந்தனை மற்றவர்களைப் பற்றியதாக இருக்கின்றது. உமது காலத்தை வீணாக ஆக்குவதினால் யாது பயன்? பிறரைப் பற்றிய வீணான கவலைகளினால் உம்மை மறந்து, உமது ஆத்ம சுத்தியை மறந்து விடும் அபாயத்தை உணரவில்லையா? மற்றவர்களது எண்ணங்களின் எதிர்மறை தாக்குதலுக்கு ஆளாவதோடு காலம் விரையமும் ஆகின்றது. மனதின் தூய்மை மிகவும் அவசியம். எதேட்சையாக மனம் அப்படிச் செல்லாமல் தடுத்துக் கொள்ள முயல வேண்டும். ராஜனுடன் பழகிய உமது அன்பு எல்லையற்றதால் அந்த இறுதி ரகசிய உண்மைகளைக் கூறுகிறோம்” என்றார். தமது சகோதரனின் இறுதிக் காலத்தை அறிய ஶ்ரீ வல்லபரும் எண்ணம் கொண்டார். வேதாள ரிஷி கூறிய அந்த விபரங்கள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. அவை?

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button