ராமகிருஷ்ண அவதானியும், குயவர் குல அன்னபூரணியும்.

254

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(31) ராமகிருஷ்ண அவதானியும், குயவர் குல அன்னபூரணியும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதாள ரிஷி மௌனமாக அமர்ந்து இருந்தவர் மெல்லிய குரலில் பேசத் துவங்கினார். “விக்கிரமாதித்திய மன்னன் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை முடித்து வைக்கத் தீமை சக்தியைப் பூஜிக்கும் தம்பன வசியனின் மாந்திரீக குரு எண்ணம் கொண்டான். இதற்காகப் பன்னிரண்டு ஆண்டு காலம் பூஜை, ஹோமங்களை முறையாக நடத்தினார்கள். அப்போது விக்கிரமாதித்தியன் யுத்தம் புரிந்து தொடர்ச்சியாகப் பதினாறு தேசங்களின் அதிபதியான காலகட்டம் அது. காவேரி நதி தீரத்தின் கரையில் உள்ள பல்லாண்டுபுரி என்ற நகரின் அருகே உள்ள வனப்பகுதியில் அகோர யாகம் நடந்தது. அந்த யாகத்தீயில் இருந்து மரணகதி உருப்பெற்றது. பல்லாண்டுபுரி நகரில் சகலவிதமான கலைகளிலும், கல்வி அறிவிலும் மேம்பட்ட, அவதானி என்ற பட்டம் பெற்ற வாலிபன் இருந்தான். அவன் பெயர் ராம கிருஷ்ணன். அவனை தம்பன வசியனின் குரு ஹோமம் நடை பெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். காவேரி நதியில் நீராட வைத்து அவனது உடலில் அந்த சக்தியைப் புகச்செய்ய உரு ஜெபிக்கப்பட்டது. அவனைத் தேர்வு செய்ய ஒரு காரணம் இருந்தது. அவனது ஜாதகத்தில் அவனது திருமணத்திற்குப் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் அவன் பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன் பிறகு தனது மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொண்டால் அவனுக்குப் பிறக்கும் குழந்தை அரசாளும் தகுதி பெறும் என இருந்தது ” என்றார்.

மேலும் கூறுகையில், ” தாம்பத்தியத்திற்கு உரிய காலம் சித்திரை மாதம் 15 – ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரோகிணி நட்சத்திரம் என்றும் அன்று உருவாகும் குழந்தையே விக்கிரமாதித்தியன் மன்னனுக்கு நமன் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனால் குழந்தையின் உயிர் சக்தியை ராமகிருஷ்ண அவதானி உடலினுள் நுழைந்து தங்கியிருக்கச் செய்தனர். இந்த அகோர யாகத்திற்காக மயக்க நிலையில் கொண்டு வரப்பட்ட வாலிபன் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே அவனது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு உறவின் முறையில் தகுந்த மணப்பெண்ணைத் தேர்வு செய்து மணம் முடிக்கப்பட்டது. அன்றே அவன் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டுச் சென்றான். பல ஷேத்திரங்களில் நீராடி பன்னிரண்டு வருடங்கள் கழித்து தனது மனைவியைக் காண ஆவலுடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஆனால் காவேரி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நதியைக் கடந்தால் பல்லாண்டுபுரி வந்து விடும். அன்று சோதனையாகக் கார்மேகம் திரண்டு இடிமின்னலுடன் புயல் மழை வேறு பலத்த ஓசையுடன் கொட்டிக் கொண்டு இருந்தது. நதியில் மேலும் வெள்ளம் பெருகி கரைகடந்து சென்றதால் அக்கரை செல்ல முடியாமல் மனம் பரிதவித்தான். அப்போது வேதகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராமவேளான் உடையார் என்ற குயவனார் புயல் மழையில் தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தவித்த அவதானியைக் கண்டு வேதகிரி கிராமத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துப் போனார். அன்றைய தினம் சித்திரை மாதம் 15 — ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய வெள்ளிக்கிழமை. கிராமவேளான் உடையாரிடம் இன்றைய நாள் தனது மனைவியுடன் இருந்தால் ராஜயோகமுள்ள மகன் பிறப்பான் என்று தனது முழு விருத்தாந்தங்களைக் கூறி விட்டான்.”

மேலும் வேதாள ரிஷி, “கிராமவேளான் என்ற குயவனார்க்கு திடீரென ஓர் எண்ணம் உதயம் ஆனது. அவருடைய மகள் பெயர் அன்னபூரணி என்பாள் திருமணவயதை அடைந்திருந்தாள். அவளை ராமகிருஷ்ண அவதானிக்கு குயவனார் கிராமவேளான் உடையார் கன்னிகா தானம் செய்து கொடுக்க, அன்று அவர்கள் திருமணப்பூர்த்தி அடைந்தனர். அவதானி அவளுடனே வாழ்ந்து வரலானான். அன்னபூரணி உரிய காலத்தில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சாலிவாகனன் எனப் பெயரிட்டு வளர்த்து வரும் காலத்தே, அவதானி தனது மகனுக்கு சகல கலைகளையும் கற்றுத் தந்தான். தேர்ந்த சாலிவாகனனுக்கு மிகவும் பிடித்தது மந்திர தந்திரக் கலையே. அதர்வண வேதத்தை நன்கு கற்று தேர்ச்சி உற்றான். அனுபவமுடைய மாந்திரீகர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று உபாசனா தேவதைகளின் ஆசி பெற்று அத்துறையில் சிருஷ்டிக்கும் ஆற்றலை நீரில் பெற்று, அதனை தனது கைப்பிரம்பில் உச்சாடன சக்தியை சேமித்துக் கொண்டு வளர்ச்சி பெற்றான்.மண்ணினால் அவன் எந்த உருவத்தை உருவாக்கினாலும் அதற்கு உயிர் கெடுக்கும் வித்தை கைவரத்தக்க பொருளாய் அவனிடம் கைகட்டி சேவகம் செய்தது. அநேக வசீகர சக்திகளை வைராக்கிய உள்ளத்தால் அடைந்தான். போர் கலைகளில் வல்லவனாய் விளங்கி வந்தான். சாலிவாகனன் சைமபுரி(மைசூர்) மன்னன் விஸ்வநாதரிடம் யுத்த மந்திரியாக ஆனான்”

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை ®,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button