சூட்சும வடிவ எண்ணத்தின் வித்து!

896

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

20•09•2017,

செவ்வாய்க்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(447) மனிதனே புனிதன் —

சூட்சும வடிவ எண்ணத்தின் வித்து!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனிதன் செயல்படும் ஒவ்வொரு  காரியங்களும், அவனது எண்ண நினைவுகளும், சில காலங்கள் அவனது சரீரத்தைச் சுற்றி சுவாச கதியில் ஓடிக்கொண்டே இருக்கும். பிறகு அவைகள் மனிதனின் சூட்சும சரீரத்தில் வாழ்வதற்கு ஏற்றபடி,  மிகவும் நுண்மை வாய்ந்த வித்துக்களாக வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டு அங்கே மறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும்.  மீண்டும் அவைகள் ஸ்தூல சரீரத்தில்  வெளிப்பட்டு, மனிதன் செய்திட்ட  செயல்களுக்குத் தகுந்தபடி தனது பலா பலன்களைத் தரத் துவங்கி  விடுகின்றன. மனிதனின் வாழ்வை, இத்தகைய எண்ண வித்துக்கள் வெளிப்படுத்தும் பலாபலன்களே நிச்சயம் செய்து விடுகின்றன. இதனை “விதி” என்றும் கூறுவார்கள். மனிதன் தானே உருவாக்கிக் கொள்ளும் இந்த விதியானது, அவனது எண்ணத்திற்கொப்ப தக்க சமயத்தில் வெளிப்பட்டுத் தக்க பலன்களைத் தந்து விடுகின்றன.   இத்தகையை பலாபலன்களே மனிதனது  வாழ்க்கையை  நிர்ணயம் செய்து  இவன் இப்படித்தான் என்று வெளிக்காட்டி விடுகின்றன. மனிதன் தனது வாழ்வைத் தானே உருவாக்கிக் கொண்டு விடுகின்றான். மனிதன் தனது வாழ்வில் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ளும் விதியானது  அவனைத் தன்பிடிக்குள் கட்டுப்படுத்தி விடுகின்றது. மற்றவை எதுவும் மனிதனைக் கட்டுப்படுத்துவது இல்லை என சான்றோர் பெரு மக்கள் உபதேசித்துள்ளனர்.  இந்த அறிவுப்பூர்வமான வேத வாக்கியங்களை நமது சுவாமி சிந்தனையில் வைத்து அப்போது  போற்றினார்.

 

“நான் பால் சாப்பிடுவதில்லை, தேநீர் தாருங்கள் சாப்பிடுகிறேன்” என்று சுவாமி  கேட்டுக் கொண்டார். அப்போது தியானத்தில் இருந்து,  “குரு தேவர் பால் தரச்சொன்னார்” என்று கூறிய பெண்மணி,  “தம்பி குருதேவர் உத்தரவுப்படி நீங்கள்  முதலில் பாலைச் சாப்பிட வேண்டும்” என்றார். திரு SSM சுப்பிரமணியம்  அவர்களைப் பார்த்து நமது சுவாமி, ” தியான சங்கத்தின் தலைவரே, தாங்கள் என்னை அழைத்த காரணம் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்? கூறுகிறீர்களா?”  எனக் கேட்டார். அதே பெண்மணி நமது சுவாமியிடம், “நீங்கள் முதலில் பாலைச் சாப்பிட்டால் தான்,  உங்களிடம் நாங்கள் அழைத்த காரணத்தைக் கூற விரும்புகிறோம் ” என்றார். அதனைக் கேட்டதும் நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து, தனது சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றார். பழனியில் தனது சமாதிக்குள் இருந்த அவர் உடனே பேசினார். “நாகராஜா நீ பாலைச் சாப்பிட்டு விட்டால் ஆறு வருடங்களுக்கு அவர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டியது இருக்கும். அதுதான் உனக்கு விதிக்கப்பட்டது. உடனே நீ பாலைச் சாப்பிட்டு விடு” என்றார். கண்களைத் திறந்த சுவாமி பால் வைக்கப்பட்டு இருந்த குடுவையை எடுத்து, தனது சற்குரு நாதர் அருளிய ஜெபத்தை ஜெபம் செய்து விட்டு இறைசக்திக்கு நன்றி கூறியபடி பாலை அருந்தினார்கள். அங்கு இருந்தவர்கள் முகத்தில் நட்புடன் கூடிய புன்சிரிப்பு மலர்ந்தது. சுவாமி அவர்களைப் பார்த்து, “என்னிடம் என்ன கேட்க  விரும்புகிறீர்கள்? இப்போது கேளுங்கள் ” என்றார். மனதினுள்  சற்குரு நாதரை எண்ணியபடி  பதில் கூறத்தன்னை தயார் படுத்திக் கொண்டார்.

 

திரு SSM. சுப்பிரமணியம்  ஐயா அவர்கள் சித்தாசனத்தில் ரஅமர்ந்தபடியே, ” நாகராஜா நமது ஆஸ்ரமத்தின் குருவாகவிளங்கி வந்த வேணுகோபால சுவாமியை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?  அவரிடத்தில் நான் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன்.  அவர் என்னிடத்தில் முக்கியமான மூன்று விஷயங்களைக் கூறுவதாகக் கூறியிருந்தார். திடீரெனே என்னிடம் கூடக் கூறிக் கொள்ளாமல் நமது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டார். அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?  என்று கேட்டறிந்து கொள்ளவே உங்களை இங்கே அழைத்து வந்தேன் ” என்றார். அதற்குள் அவரது கண்கள் கலங்கி கண்ணீர் அரும்பி நின்றது. அதனைக் கண்டு அவரது துணைவியார், தெய்வீக  வடிவுடைய திருமதி பங்கஜம் அம்மாள் அவர்கள்  கண்களும் நீரைத் சொரிந்தன. கணவன் மனைவி என்றால் இப்படித்தான் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற இலக்கணத்திற்கு உட்பட்டு சந்தோஷமாக வாழ்ந்தவர்கள் அவ்விருவருமே! கருத்தொருமித்து வாழ்ந்த அவர்களது வாழ்விலே தியான சங்கம் முக்கியமான இடத்தைப்  பெற்றிருந்தது. தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்கள்  ஆஸ்ரமத்தை விட்டுச் சொல்லாமல், கொள்ளாமல் சென்று விட்டது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. நமது சுவாமி சற்குரு நாதரை ஜெபம்  செய்தபடியே இருந்தார்.   சற்குரு நாதரிடம் யோகி என்ற பட்டத்தைப் பெற இருக்கின்ற திரு SSM ஐயா அவர்களிடம் நமது சுவாமி,  “கேளுங்கள்,  நான அறிந்த வரையிலும் பதிலைக் கூற

காத்திருக்கிறேன்” என்றார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

நன்றி! வணக்கம்! 

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button