வேதியரின் நந்தவனத்திற்கு ஶ்ரீ வல்லப ரிஷியின் வருகை.

204

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(29) வேதியரின் நந்தவனத்திற்கு ஶ்ரீ வல்லப ரிஷியின் வருகை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஶ்ரீ வல்லப ரிஷியானவர் வேதியர் வேணுநாதரைப் பார்த்து, “வேதியரே கேளும், இயற்கைக்கு அப்பாலும், எங்கும் நிறைந்திருக்கும், தூய்மையே உணர்வாகவும் உடைய இறைசக்தி, என்றும் எப்போதும் தனது வசமாகவே இருப்பார் என்று நமது ஞானியர்கள் கூறியுள்ளனர். தனது வசமே உள்ள இறைவன் மௌனமாகச் செயல்கள் புரிவோரின் உள்ளத்தில் வீற்றிருந்து, பல நன்மையான காரியங்களை அவர்களின் மூலமாக உலகினுக்கு ஆற்றியதைத் தாங்கள் அறிந்திருக்க வில்லையா? அது இறைவனின் அமைதியின் ஆற்றல்! அந்தகைய தூய்மையாளர்கள் இறையருள் உண்மையை அறிந்திருப்பார்கள். அவர்கள் கூறுவது அனைத்தும் பலிதமாகும். அதில் தனித்துவம் பெற்றவர்தாம் வேதாளரிஷி என்னும் செயல் வீரர். உமது மரணத்தைப் பற்றிக் கூறிய அவரிடம் தாங்கள் ஏன் தகுந்த விடை கூறவில்லை? அவரிடம் கூறி இருக்க வேண்டிய கருத்துக்களை எம்மிடம் கூற வேண்டுகிறேன் வேதியரே” என்று கூறிவிட்டு அமைதியாக வேணுநாதரின் கண்களை ஏறிட்டுப் பார்த்தார். பாரிஜாத மலர்கள் அவர்களின் மீது இயற்கையே அர்ச்சிப்பது போன்று காற்றில் பூச்சொரிதல் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. வேதியர் வேணுநாதர் மௌனமாக இருக்கவே ஶ்ரீ வல்லபரிஷி மீண்டும் பேசத்துவங்கினார்.

” மௌனமாகக் காரியங்கள் ஆற்றுவோரின் வசம் இருந்து, தூய உணர்வுடைய இறைவன் அவர்களை ஆட்கொண்டு, வழிநடத்திச் செல்வதை நீர் அறிந்தது இல்லையா? அப்படிப்பட்ட அவர்களிடமே இறையருளால் அமைதியின் ஆற்றல் சக்தி ஏற்படுகிறது. தூய உணர்வு மிகு இறைசக்தியின் உண்மையை அறிந்த அவர்களே தூய்மையானவர்கள் என வேதம் ஓதுகின்றது. அவர்களில் ஒருவரே வேதாள மகரிஷி என அறிவீர்” என்றார் ஶ்ரீ வல்லபர். கண்கள் பனிக்க வேதியர் வேணுநாதர், “ஐயனே எம்மைப் பொறுத்து அருள்வீர். மரணம் எந்த வடிவிலோ எம்மிடம் நெருங்கி வந்து விட்டதை சதிபதிகளாகிய நாங்கள், தவத்தால் உணர்ந்து கொண்டு ஏற்றுக்கொண்டும் விட்டோம். மரணத்தை எண்ணி நாங்கள் அச்சம் கொள்ள மாட்டோம். கானகக் கள்வன் காலன் எங்களை எப்படி வதைத்தாலும் அதற்காகச் சினம் கொள்ளமாட்டோம். இறைவன் எங்களுக்குத் தரும் பரிசாக அதனை ஏற்றுக் கொள்வோம். எங்களின் ஆத்மாவில் இறைவனை எண்ணிப் பிரார்த்தனை செய்து வருவதால் மரண பயம் எங்களின் உள்ளத்தை விட்டகன்று விட்டது ஐயனே ” என்றார். மகிழ்வு கொண்ட ஶ்ரீ வல்லபர் கூறுவார், “ஓ வேதியரே, உமக்கு நேருகின்ற சுகம், துக்கம் இரண்டையும் எவ்வித வருத்தமும் இன்றி ஒப்புக் கொண்டீர்! இதனை ஞானம் என்று முன்னோர் உரைத்தனர். பிரபஞ்ச இயல்பில் மரணம் ஓர் அங்கமாகவே விளங்கி வருகிறது. பஞ்சபூத சேர்க்கையே பிறப்பு, அவைகளின் பிரிவே மரணம். எனவே பிறப்பைப் போலவே மரணமும் இயல்பானதாக எண்ணம் உமக்கு ஏற்பட்டு விட்டது. இந்த இயல்பு நிலையைத் தீங்கானது என்று எண்ணாதவனே ஞானி!” என்றார்.

மேலும் கூற முற்பட்டு, ” வேதியரே உமக்கு ஏற்படப் போகும் மரணம் மூப்பினால் உண்டாவதல்ல! அது சந்தர்ப்ப வசத்தால் ஏற்படப் போவது! உமது கூற்றானது நீர் மரணத்திற்கு அவசரப்படுகிறீர் என்றாகின்றது! மரணத் துன்பம் வருவதை அறிந்து கொண்டீர். இனி அதனைப் பற்றி எண்ணுவதை விட்டு விடும்! எண்ணுவதை விட்டு விட்டால் துன்பம் நேரப்போகும் நினைவு போய்விடும். அத்தகைய துன்ப நினைவு நீங்கிப்போன பிறகு துன்பம் என்பதே இல்லாது போய் விடும். எவ்வித மரணத்தையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர்களே பிரபஞ்சத்துடன் கலந்து இறைசக்தியில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர். உமது வாழ்க்கை நிச்சயமாக வெற்றி வாழ்க்கை தான். காரணம் உமது ஒழுக்கமும், கோபம் கொள்ளாத குணமும், பொறுமையும் மற்றும் அடக்கத்துடன் இருப்பதனால் உமது வாழ்வு இறை அருளால் வெற்றி வாழ்வு தான்” என்று ஆசியருளினார். மேற்கொண்டு ஶ்ரீ வல்லபர் மெதுவான குரலில் காலச்சக்கர பயணத்தை நினைவூட்டினார். அத்துடன் புதையலில் இருந்த ஓலைச் சுவடியை வேதாளரிஷியிடம் காண்பிக்கும்படி உத்தரவிட்டார். சுவடிகளை எடுத்துக் கொண்டு இருவரும் மாகாளி வனம் நோக்கி உரையாடியபடியே சென்றனர்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button