தீமை வினையில் இருந்து தப்புவது எவ்வாறு?

322

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2

(36) தீமை வினையில் இருந்து தப்புவது எவ்வாறு?
°°°°′°°°°°°°°°°°′°′°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“ஓ ராஜனே பிரபஞ்சத்தில் மனிதன் காண்கின்ற அனைத்தும் கண்முன்னே வெகுவேகமாக மாறியும் மறைந்தும் வருவதைக் காண்கின்றாய் அல்லவா? மனித உடலும் அவ்வாறே காலத்தில் மறைந்து போகின்றது. காளியின் அருள் பெற்றிருக்கும் உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன். உனது விருப்பத்தால் சகலவிதமான சக்திகளைப் பெற்றிருந்தாலும் மும்மலங்களாகிய அகங்காரம், ஆணவம், மாயை அதனுடன் சேர்ந்தே இருக்கும். அதனால் உனது உடலைத் “தான்” என்று எண்ணுகின்ற மனப்பான்மையும் உடனிருக்கும். அதனை விட்டு விலகி நிற்கும் போது தான் ஈஸ்வர அம்சம் உன்னுள் பொருந்தி இருக்கும். அப்போது உன்னைச் சுற்றியுள்ள அறியாமை இருள் விலகினாலும், அந்த இருளையும் கூட அறிவு மயமான அணுக்களாய் காணக்கூடிய சக்தியை, மூச்சினால் ஜெபம் செய்யத் துவங்கினால் உன்னுள் ஜீவனாகி விளங்கும் ஆத்மா ஒளிப்பிரவாகமாய் மாறி விடும் ” என்று சற்குருநாதர் கூறிக் கொண்டிருக்கும் போதே அன்பைக் குறிக்கும் நீல நிற ஒளி அவரைச் சுற்றிலும் வட்டமிட்டது. அதனைக் கண்ணுற்ற விக்கிரமாதித்தியன் தனது சிரம் தாழ்த்தி குருநாதரை வணங்கினான்.
சற்குருநாதர் மேலும், “அறிவுடைய மனிதன் செயல் கொண்டிடும் காரியங்கள் அனைத்துமே சரியானவை அல்லது வெற்றியைத் தருபவை என்று கூறிவிட முடிந்திடாது. அவனது காரியம் முழுமையாகச் செயல்படாது போயிருக்க வாய்ப்புக்கள் உண்டாயிருக்கலாம். எதிர் மறையான எண்ணங்களும் ஏற்பட்டிருக்க சந்தர்ப்பவசம் நடந்திருக்கலாம். ஆனால் ராஜனே தியானம் செய்திடும் வழி முறைகளை முறையாக, மிகச்சரியாகக் கற்றுக் கொண்ட பிறகு சதாரண அறிவு, அசாதாரணமான அறிவாக மாறுகின்றது. அப்போது செயல்படும் போது நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து விடுகிறது.”

“இருந்தாலும் ஞானம் பெற்றவர்களைப் பற்றிய அறிவுசால் மனிதனது கணிப்பு சரியானதாக இருக்கும் என்றும் கூறுவதற்கில்லை! காரணம் சதாரண வாழ்வில் மனிதனின் ஆழ்மனதில் இருந்து எழும் எண்ணங்கள், அவன் முன்பு அனுபவித்த பொருட்களின் மேல் கொண்ட அவாவினால், மீண்டும் அந்தப் பொருளை அடைந்து விடுவதில் கொண்ட சந்தோஷ உணர்வுகளுடனும் வாழ்ந்து கொண்டு இருப்பது தான்.”மேம்பட்ட மனிதனுக்கு உள்ள கடமைகளைச் செய்ய விதிக்கப்பட்ட விதிமுறைகளில் தியானமும் ஒன்று என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தியானம் இருக்கும் காலத்தில், அல்லது மற்ற நேரங்களில் எதையும் ஊடுருவிக் கவனித்துப் பார்க்கப் பழகிக் கொள்ளவும் வேண்டும். உனது உள்ளத்தை ஐம்புலன்கள் கொண்டு கவனிக்கும் போதும், உலகின் மற்ற பொருட்களை கவனிப்பதிலும் அவைகளில் சிறப்பான குணங்கள் நிறைந்திருப்பதை அறிந்து கொள்வாய். அத்துடன் அவை அனைத்திலும் மறைந்து கிடக்கும் இறையருள் நன்மைகளையும் கவனித்து வர வேண்டியது அவசியம். இறை சக்தியை எண்ணுபவர்களுக்கு, எண்ணி தியானம் இருப்பவர்களுக்கு அநேக உண்மைகள் புலப்படும். என்றும் அழிவற்றதும், ஆதியந்தம் இல்லாததும், பகுத்தறிவினுக்கு அப்பாற்பட்டதுமாகிய ஆத்மாவாண்டவன், தனது உணர்வு நிலையில் தன்னைத்தானே சிறப்புடன் வெளிப்படுத்திக் கொள்ளும் போதுதான், மனிதன் மரணத்திலிருந்து விடுதலை பெறுகின்றான் என வேதங்கள் கூறியதை, தவஞானியர்கள் உலக மக்கள் உய்வதற்கு வெளிப்படுத்தினர். அப்படி மரணத்தில் இருந்து விடுதலை பெற விழையும் மனிதன் பிராணாயாமம், நாடி சுத்தி, யோகம், தவம், தியானம் இவற்றை விருப்பத்துடனும், சந்தோஷத்துடனும் செய்து வரவேண்டியது அவசியமாகும் என்பதும் ஞானியர்களின் வாக்கே.”

” சாம்ராஜ்யத்தில் வாழும் மக்கள் அனைவரும் அரசின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டுத் தான் நடக்கவேண்டும் என்பது நாடாளும் உங்களால் நடை முறைப்படுத்தப்பட்ட அரசியல் சாசன விதியல்லவா? ஆனால் உலகில் நடை பெறும் அனைத்து அரசாட்சிகளை விட மேன்மை மிக்கதும், சிறப்பானதும், தெய்வீக தர்மம் உடையதும், பிரபஞ்ச அமைப்பின் நடைமுறை வழிகாட்டியுமாக விளங்கும் இறைவனது அரசாட்சியில், நம்பிக்கை கொண்டு நீ வாழ்ந்து வரல் வேண்டும் ” என்று கூறிவிட்டு விக்கிரமாதித்தியனுக்கு தனிப்பட சாலிவாகனன் மற்றும் தம்பன வசியனால் ஏற்படும் மரணாபத்தை விளக்கிக் கூறினார். தனது சீடன் வேதாள ரிஷியின் ஆலோசனையை ஏற்கும்படி மதியூகி பட்டியிடம் கேட்டுக் கொண்டார். பணிவுடன் விடை பெற்றுக் கொண்ட அவர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது அறிவின் பிரகாசம் மிக்க மஞ்சள் நிற ஒளி அவரிடம் இருந்து வெளிப்பட்டது. வேதாள ரிஷியை காடாறு மாத காலத்தில் உடனழைத்துச் சென்றனர். அவரது குருநாதரைப் பற்றி விசாரித்து அறிந்து பிரமித்துப் போயினர். வேதாள ரிஷி சற்குருநாதர் பற்றிக் கூறினார்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button