ஒளிக்காட்சி தோன்றியது.

1,260

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

15•09•2017,

வியாழக்கிழமை,

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி.

(442) மனிதனே புனிதன் —

ஒளிக்காட்சி தோன்றியது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பவானியில் நடைபெறும் தியான சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்ல நமது சுவாமிக்கு சற்குரு நாதரின் ஆணை எதுவும்  வராததால், ஞானயோகியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிடவே எண்ணம் கொண்டார். பவானியில் தியான சங்கத்திற்கு   நமது சுவாமி அவர்கள்  முன்பு பலமுறை சென்றிருக்கிறார். அங்கு ஞானகுரு வேணுகோபால சுவாமி குருவாக இருந்ததால் அவரை சந்தித்துப் பேசி விட்டு வருவார். நமது சுவாமி அவர்களுக்கு சற்குரு நாதர் அருளிய அருட்கவிகளைப் படிக்கச் சொல்லி அவர் கேட்டு மகிழ்வார். அப்போது தலைமை தியான சங்கத்திற்கு யார் வந்தாலும், ஞானமே உருவெடுத்து வந்தது போல் RB என்று அன்போடு அழைக்கப்படும் திரு R.பால சுப்பிரமணி அவர்கள்  அன்புடன் உபசரித்து வார்த்தையாடுவார். இதையெல்லாம் எண்ணியபடி நாகராஜன் சுவாமி அவர்கள் புறப்பட்டார். பவானி வருவதை  யாரிடமும்  சொல்ல வேண்டாம் என்ற கடிதத்தின் வாசகப்படியே சுவாமி கடைப்பிடித்தார். முதல் நாளே புறப்பட்டு பவானி போய்ச் சேர்ந்தார். “பவானி ” என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதி இருந்தது. அங்கு அறைஎடுத்துத் தங்கிக் கொண்டார். அது தூய்மை அற்றதாக இருந்தது. படுக்கை விரிப்பு அழுக்கடைந்து இருக்க, குடி நீர்க்கசிவு குடுவை சுத்தப்படுத்தப் படாமல், குடிநீர் மாற்றப்படாமல் இருந்தது. விடுதி மேலாளரை சந்தித்து விபரம் கூறினார். சுவாமி கூறுவதை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. “ம்ம்” என்ற வார்த்தை மட்டுமே வெளி வந்தது.

சுவாமி எதுவும் கூறாமல் மெளனமாகக் காவேரி நதியை நோக்கிச் சென்றார். கூடுதுறைப் படிக்கட்டில் அமர்ந்து ஜெபம் செய்தபடியே ஓடும் நதிநீரைப் பார்த்துக் கொண்டு இருந்தார். நதி நீரில் ஏதேதோ காட்சிகள் தெரியப் துவங்கின. மனிதர்களை நரபலி  கொடுக்கும் அகோர சந்நியாசி தனது உக்கிரம் மிகுந்த பூஜையில், தெய்வீகத் தோற்றம் கொண்ட பெண் குழந்தையைப் பலியிடுகின்றன். பின்னாளில் அதன் தலையைப் போன்ற உருவை மக்கள் வழிபட்டு வருவதைக் காட்சி புலப்படுத்திக் காட்டியது. விக்ரம் என்ற ஆதித்ய மன்னன் நரபலிக்கு எதிராக யுத்தம் செய்கிறான். அநேக பெண்கள் யோகினிகளாக மாறி விடுகின்றனர். பிறகு நரபலி இடப்பட்ட   குழந்தை  உஜஜெயினி என்ற ஊரில் மாகாளியாகக் கொண்டாடப் படுகிறாள். பிறகு வேதாள மகரிஷி என்பவரின் தோற்றம் ஆசீர்வதிப்பது போன்று சிறிது நேரம் தென்பட்டது. நமது சுவாமிக்கு உணர்வு வரப் பெற்றது. கண்டது கனவு என்பது போல் சுவாமி எண்ணிக் கொண்டார். அது ஓர் நிதர்சனமான உண்மை என்பதை

பிறகு சுவாமி அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாய்ந்தது. அதனைப் பற்றி விரிவாகக் கூறும் சம்பவம் பிறகு அறிந்து கொள்வோம். சுவாமி அவர்கள் இரவு எட்டு மணி வரையில் அமைதியாக ஜெபப் பிரார்த்தனையில் இருந்து விட்டு கடைவீதி வந்தார். அது மேட்டூர் செல்லும் பிரதான சாலையாதலால், வண்டி, வாகனப் போக்குவரத்துக்கும் பெயர் பெற்றதாக இருந்தது. அந்த சாலையில் மெதுவாக நடந்து சென்று அந்தியூர் சாலை பிரிவு வரைக்கும் சென்று விட்டு, பிறகு ஸ்ரீ செளடேஸ்வரியம்மன் கோயில் வீதி வரை சென்றார். கோயிலின் எதிரில் உள்ள கட்டிடத்தின் மீது “சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம் ” என்ற விளம்பரப்பலகை கருநீல நிறத்தின பின்னணியில், வெள்ளை நிறத்தில் பளிச்சென்று  தெரிந்தது. அங்கிருந்து  அதே வீதியில் தெற்கு நோக்கிச் சென்றால் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் வரும். குமார பாளையத்தில் இருந்து வரும் காவிரி ஆற்றுப் பழைய பாலத்தின் பாதை நேராக மேட்டூர் செல்லும் பிரதான சாலையில் சென்று சேர்கிறது. அங்குள்ள பழக்கடையில் சுவாமி அவர்கள் பழச்சாறு அருந்தி விட்டு, அதன் நேர் எதிரில்  உள்ள புத்தகக்கடையின் வெளியே இருந்த நீண்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

நமது சுவாமியைப் பார்த்து புத்தகக்கடைக்காரர் வணக்கம் என்று கூறினார். இளைஞரான அவர் நட்புடன் கூடிய புன்னகையுடன் காணப்பட்டார். நமது சுவாமி புதியவராகக் காணப்பட்டதால், ஊர், பெயர் பற்றிய விபரங்களை கேட்கத் துவங்கினார். சுவாமி சுருக்கமாக பொள்ளாச்சியில் இருந்து வருவதாகவும், இங்குள்ள தியான சங்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார். உள்ளூர் வாசிகளின் அபிப்ராயம் மிகவும்  முக்கியமானதாக சுவாமி  எண்ணினார். அதற்குள் நான்கு நபர்கள் கடையில் புத்தகம் வாங்க வந்திருந்தனர். அவர்களிடம் புத்தகக்கடை இளைஞர்,  “பொள்ளாச்சிக்காரர் என்னமோ கேட்கிறார் ” என்று கூறிவிட்டார். அவர்களும் வந்து நீண்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர். கடைக்காரர் அவர்களிடம் மீண்டும்,  ” நமது உள்ளூர்  தியான சங்கத்தைப் பற்றி பொள்ளாச்சிக்காரர் விபரம் கேட்கின்றார் ” எனச் சிரித்தபடி கூறினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ  ஈஸ்வர குமாரரின் தொண்டன்!

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button