வாத்ஸல்யாயனரின் உண்மைகள்!

645

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(19) வாத்ஸல்யாயனரின்  உண்மைகள்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதியர் வேணுநாதர் சமஸ்கிருதக் கல்வி சம்பந்தமான சில வினாக்களுக்கு விடை அறிய வேண்டும் என்ற நோக்கோடு, தலைநகர் பாடலிபுத்திரத்தில் உள்ள சர்வகலாசாலைக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் ஒரு வருட காலம் தங்கியிருந்தார். இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியர் காலத்தில் மருத்துவ விடுதிகளில் நோய் குணமாகும் வரை தங்கியிருந்து இலவச சிகிச்சைகள் பெறலாம். ஆரோக்கிய உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன. மக்கள் வலிமை மிகுந்த ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். இந்த சமயத்தில் தான் சீன தேசத்தில் இருந்து புத்தமதம் தோன்றிய பாரத நாட்டிற்குப் பாஹியான் என்ற அறிஞர் யாத்திரையாக வருகை புரிந்தார். பொற்காலம் கண்ட இரண்டாம் சந்திர குப்தர் ஆட்சியின் சிறப்புக்களைக் கண்டு குறிப்புகள் எழுதினார். புத்தர் தோன்றிய பிறகு ஏற்பட்ட புத்தமதக் கலாச்சார  இடங்களையெல்லாம் கண்டு களித்தார். இந்து மதம் வேரூன்றி பாரதத்தில் வளர்ந்து வருவதையும், புத்தமதம் மெல்ல மெல்ல அழிந்து கொண்டு இருப்பதையும், கங்கையாற்றின் செழிப்பான பகுதிகள் அனைத்துமே பிராமணதேசம் என்று அழைக்கப்படுவதைக் கண்டார்.  அறிஞர் பெருமக்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்று என்றபடி பாஹியான் எல்லோராலும் மதிக்கப் பட்டவராக, அறிஞர்களின் நட்பைப் பெற்றவராக யாத்திரை செய்து வந்தார். அந்த சீனதேச அறிஞரைச் சந்தித்த வாத்ஸல்யாயனர் அவரிடம் சில அரியவகை மூலிகைகளைப் பற்றி அறிந்தார். முக்கியமாக ராஜமூலிகை என சீன மன்னர்கள் பயன்படுத்திய வசீகர மூலிகைகள் பற்றிய உண்மைகளின் பயன்பாட்டைக் கற்றுக் கொண்டார். அப்போது வேணுநாதர் உடனிருந்தார். 

 

“காமசூத்திரம் என்பது ஆண் பெண் அறிய வேண்டிய ரகசிய வித்தை! அதனை ஏடுகளில் பதிந்து பாடங்களாகப் போதிப்பதால் படிப்பவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாதா? ” என வேதியர் வேணுநாதர் வாத்ஸல்யாயனரிடமே கேட்டு விட்டார். அதற்கு அவர் கூறிய பதில் பிரமிப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. அதற்கு வாத்சல்யாயனர் பதில் கூறினார், “வேதியர் வேணுநாதர் அவர்களே முக்கிய நிகழ்வொன்றைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கலாச்சாரம், பண்பாடு, தைரியம் இவைகளால் மட்டுமே கணித்துக் கூறுவதற்கில்லை. வாழ்க்கைக் கல்வி முறையை, நிறைவான இல்லற தர்மத்தைப் பெறும் வித்தையை ஒரு மனிதன் குருகுலக்கல்வி கற்றுக் கொள்ளும் போது, பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிக்கும் காலத்திலேயே  கற்றுக் கொள்ள வேண்டும் என்பது முற்றும் உணர்ந்த ஞானியர்கள் கருத்தாகும். பொற்காலம் காண்கின்றோம் என்பது வசதி நிறைந்த சமுதாயம் உருவாகி உள்ளது என்பதே உண்மை. இதில் ஆண், பெண் இருவருமே சமமான அந்தஸ்த்தை அடைந்திருக்க வேண்டும். நமது நாட்டின் கலாச்சாரம் முன்னேற்றம் ஆண்களின் பால்  மட்டுமே சார்ந்த, உரிமை, அதிகாரம் அனைத்தும் அனுபவப் பாத்தியமாக உள்ளது. பெண்ணுரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகின்றது. அறிவு விருத்தியைப் பெண்கள் அடையவே இல்லை. பெண் கல்வி மறுக்கப்படுகிறது. வெறும் போகப் பொருளாகப் பெண் பார்க்கப் படுகின்றாள். அதிலும் முழுமையான இன்பத்தை அடையாத காரணத்தால் மனநோயாளிகளாக, வெறுப்பையும், துயரத்தையும் அடைவதே வாடிக்கையான இருபாலருக்கும் ஏற்பட்டு அதுவே வாழ்வாக மாறிவிட்டது. இல்லறக்கல்விக் கற்று  நிறைவாக வாழ்ந்து நல்ல சந்ததிகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்களாக எண்ணத்தில் உயர வேண்டும்.”

 

“இந்த உலகில் எதிர்வரும் காலங்களில் இந்த தேசத்தவர் இல்லறக்கல்வி பற்றிய பாடங்களைக் கல்விக் கூடங்களில் கற்றுக் கொள்ள முன்வருவார்கள். இந்தக் கல்வி பெண்களும், ஆண்களும் ஒருவருக்கு ஒருவர் தரவேண்டிய மரியாதையையும், அன்புடன் இன்பம் தந்து, உடல், உயிர்,  ஆன்மா அனைத்திலும் பேரின்பத்தை அடையும் மார்க்கத்திற்கு வழிவகைகளைக் கூறி அறிவுறுத்துகின்றது. அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியத்தை மறந்துவிடக் கூடாது. அளவுடன் நுகரும் பக்குவமாகிய அறிவின் விருத்தியும், ஆரோக்கியமும், ஞாபகசக்தியும் இதனால் ஏற்படுகின்றது. உடலும், மனமும் திருப்தியுடன் கூடிய களிப்பை உணர்வதால், குடும்பத்திற்காக உழைக்கும் அக்கரையும் தோன்றுகின்றது. இனிவரும் காலங்களில் நடைபெறப் போகும் உண்மையும் இதுவே. பெண்மை  போற்றுதலுக்கு உரியதாக மதிக்கப்படும்” என்று ஆண், பெண் அறியத் தேவையான  பிரசங்கத்தை நிறைவு செய்தார். சீன அறிஞர் பாஹியான் விடை பெற்றுச் சென்ற பிறகும் சம்பாஷனைகள் தொடர்ந்தது. வேதியர் வேணுநாதர் மீண்டும் கேள்விகள் கேட்கத் துவங்கினார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button