பொற்காலத்தில் பெண்களின் நிலை!

652

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(20) பொற்காலத்தில் பெண்களின் நிலை!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விக்கிரமாதித்திய சகாப்தத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்த நிலை பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தது. வேதியர் வேணுநாதர், “ஞானியே இங்கு பெண்கள் நிலை முன்னேற்றமடையாமல் இருப்பதற்குக் காரணம் இந்த சமுதாயமா? அப்படியானால் நீங்கள் எழுதியிருக்கும் இல்லற இன்ப வாழ்வு பற்றிய சூத்திரத்தினால் என்ன பயன் விளையும்? தயை கூர்ந்து அதனை விளக்கிட வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு வாத்ஸல்யாயன முனிவர், 

” ஓ… வேதிய வேணுநாதரே கல்வி அறிவு வேண்டும் பெண்களுக்கு! அதுதான் இந்த சமுதாயத்தில் விலக்கி வைக்கப்பட்டு உள்ளது.  “வேதவிதி” என்று ஆன்றோர் பெருமக்கள் கூறியிருப்பது என்ன? இதற்குச் சற்று  விளக்கம் கூறுங்களேன்!” எனக் கேட்டுக் கொண்டார்.  “ஓ … ஞானியே வேதத்தில் கல்வி அறிவு தெய்வத்திற்குச் சமமாய் கூறப்பட்டுள்ளது. அதனால் அது திவ்யமானது என்றும் தெய்வீகம் வாய்க்கப் பெற்றது எனவும் அருளப்படுகின்றது. இயற்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு செயலிலும், தெய்வீகத் தன்மைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டும், வெளிப்பட்டுக் கொண்டும் உள்ளன. அதனைப் புறக்கண்களால் கண்டு, தெய்வ நம்பிக்கை கொண்டு, தெய்வீக ஜெபம் செய்து, பக்தி பூர்வமான உணர்வைப் பரமாத்மாவாகக் கொண்டு, இறை அருள் சக்தியினால் நல்லறிவைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றார்கள். பிறகு இன்னும் இவர்களில் மனப் பக்குவம் பெற்றவர்கள் அகக்கண் கொண்டு திவ்யமாய்த் திகழ்ந்து கொண்டிருக்கின்ற தனது அந்தராத்மாவைத் தரிசித்து மேலும் மேம்பாடு அடைய, தியானத்துடன் கூடிய பாவனை செய்கின்றார்கள். புறவுலகில் இறையருளால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற, தென்படுகின்ற, எல்லாவற்றிலும் இருக்கின்ற, தெய்வீக அறிவின் பாங்குகள் அனைத்துமே அகத்தினில் உள்ள பரமாத்மனில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருப்பதாக நமதுவேதம் கூறுவதை ஞானியர்கள் வெளிப்படுத்தினார்கள்.”

 

மேலும் கூறினார், ” புறத்தில் தென்படும் அனைத்தையும் கண்களால் காண எல்லோருக்கும் சாத்தியமே! ஆனால் அதனை மனதில் ஈர்த்து நினைவினில் கொள்பவர்கள் சிலரே! அப்படிப் புறத்தில் தென்படுவதை மனதினில் ஈர்த்துக் கொள்பவர்களுள், அகத்தினில் விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவாகிய பரம்பொருட் பிரகாசத்தினோடு, ஒப்பிட்டுப் பார்த்து, இயற்கையின் கல்வியை,  உண்மையை, அறிந்துணர்ந்த வல்லமை படைத்தவர்களே இவ்வுலகில் ஆத்ம சாதகர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் இயற்கையின் கல்வியால் பரமார்த்திகப் பெருநிலைக்குச் செல்வதற்கும் தங்களைத் தயார் படுத்திடப் பொருத்தமானவர்கள் ஆகின்றனர். புறத்தில் கண்ட ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொண்டு, அதனை அகத்தில் காண்போம் என அணுகுதல் வேண்டும். இப்படிச் செய்வதுதான் வேதம் கூறுகின்ற, தெய்வீகமான, திவ்யமான, முற்றிலும் பொருத்தமான கல்வி முறையும்,  வேதவிதியும்  ஆகின்றது என ஞானியர்களாகிய ஆன்றோர் பெருமக்கள் வழிவகுத்துத் தந்துள்ளனர். எனவே கல்வி கற்க முயல்பவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும் அனைவருக்கும் கல்வி பொதுவாகின்றது ” எனறு வேதியர் வேணுநாதர் கூறினார்.

 

அதற்கு வாத்ஸல்யாயனர், “புறத்தில் உள்ளதை அகத்தில் காணச் செய்து, அகத்தில் இறைவன் உட்பட அனைத்துமே உள்ளது என்று வேதவாக்கியத்தில் அந்த இறையருளே வழிகாட்டியாக உள்ள போது, பெண்கள் கல்வி கற்றுக் கொள்வதனால் வாழ்வில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ எத்துணை பயனுள்ளதாகக் கல்வி அமைகிறது! இறைவனை அறிந்து கொண்டு அவனருள் பெற விரும்பினால் ஆத்மாவினுள் இறை தரிசனத்திற்கும் நல்வழியை வேதம், வேதவித்தை நன்றாக உணர்த்தி விடுகின்றது. மனிதனுக்கு இதனைவிட பாக்கியம் வேறென்ன இருக்க முடியும். நானும் இதனைக் கற்று உணர்ந்து  இருக்கிறேன். வானுலக தேவர்களுக்குப் புறவுலகக் கல்வியையும், பூலோக மனிதர்களுக்கு அகவுலகக் கல்வியையும் வேதத்தின் வாயிலாக இறைவன் சொன்னது உண்மையே! நிதர்சனமாக உள்ளத்தின் உலகில் இறைவன் உணர்வு நிலையாய் இருக்கின்றார் என்பதை, மனிதன் தனது உடலை வைத்து அறிந்து கொள்ள வேண்டும் என வேதம் இயம்புகிறது. அதனைப் போன்றே வானுறையும் தெய்வங்களுக்குக் கல்வியை, இறைவன் புறவுலகில் தான் அண்ட வெளியாய் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையை உணர்ந்து கொண்டவர்களுக்கு இந்த இரண்டு வழிகளுமே இறைவன் தியானத்தைப்பற்றிப் போதிப்பதை நன்கு உணர்ந்து கொள்வார்கள். அதனால் இறை சக்தியை, அறிந்து, உணர்ந்து, தெளிந்த இறை அன்பர்களால் இந்த உலகினுக்கு நன்மைகளே ஏற்படும்” என்று மகிழ்வுடன் உள்ளத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன் 

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button