சுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது?

428

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(12) சுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காலச்சக்கரத்தில் இருந்து நமது சுவாமியைத் தோளில் சுமந்தபடி வந்திறங்கினார் மகான் ஶ்ரீ வல்லப ரிஷி. விக்கிரமாதித்திய சகாப்தத்திற்குள் வந்திறங்கிய சில நொடி மணித்துளிகளில் நமது சுவாமியின் உருவம் வயோதிக வேதியன் போல் மாற்றம் அடைந்ததோடு அல்லாமல், உடலெங்கனும் ரத்த காயங்களுடன், மண்டை பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில், சுய நினைவின்றி மயக்கமுற்றுக் கிடந்தார். அவர் முகத்தையே ஶ்ரீ வல்லபர் தனது கருணை மிகுந்த கண்களால் அன்புடன் பார்க்துக் கொண்டிருந்தார். அப்போது ஶ்ரீ வல்லப ரிஷி, வயோதிக நிலையில் அடிபட்டுப் படுக்க வைக்கப்பட்டிருந்த நமது சுவாமியை பார்த்து, ” வேணு, வேணு” என்ற பெயரைச் சொல்லி அழைத்தார். அந்தக் குரலைக் கேட்டதும் வேணு என்று அழைக்கப்பட்ட பிராமணன், மயக்கம் நீங்கிக்  கண்களை மெதுவாகத் திறந்து ஶ்ரீ வல்லபரைப் பார்த்தார். வேதியரின் உதடுகள் மெல்ல அசைந்தன. “ஐயனே வல்லபமகானே, எனது மனைவி ரேவதிதேவி எங்கே? அவள் எப்படி இருக்கின்றாள்? ” என்றார். அப்போது அங்கேயிருந்த ஊர்க்காவலன் பணிவுடன், “ஸ்வாமி தங்கள்  துணைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்” எனப் பதில் கூறினான். வேதியர் உடனே, “பகவானே உங்கள் நாமத்தைத்தவிர வேறொன்றும் நாங்கள் அறியோம். என்னையும் நல்லபடியா அழைச்சுக்க வேணும். இந்த ஜென்மாவுல இருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் ஈஸ்வரா” என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். அப்போது பெரிய மருத்துவர் அவரது உதவிமருத்துவர் பச்சிலைகளுடன் உள்ளே வந்தனர். அவர்கள் ரேவதிதேவி அம்மா அவர்களுக்குச் சிகிச்சைகளை மேற்கொண்டனர். 

 

ஶ்ரீ வல்லபர் தனது பிரதமசீடர் பத்மபாதனை மருத்துவம் கற்றுக் கொள்ள அக்காலத்தில் பிரசித்தி பெற்ற ராஜாங்க மருத்துவர் திரு பூவராஹர் என்பவரிடம் அனுப்பியிருந்தார். சிறந்த அறிவாளியான அவர் பச்சிலை மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்துடன் தனிப்பட மருத்துவ ஆராய்ச்சிகள் செய்து  அபூர்வ மருத்துவக் குறிப்புகளை அவர், எதிர்கால மக்கள் நலன் கருதிப் பல ஏடுகளில் பதிவு செய்திருந்தார். அவரது குரு ஶ்ரீ வல்லபரிடம் மருத்துவம், மனோதத்துவம், யோகவித்தைகள் கற்றுத் தேர்ந்து இருந்ததால், அவருடைய ஆற்றல், திறமை கண்டு ரசாயனமருந்து ரகசியத்தைக் குரு போதித்திருந்தார். மருத்துவத் திலகம் திரு பூவராஹர், பத்மபாதனின் செயல் வேகம் கண்டு குருமருந்தினால் ஔஷதங்கள் வீரியம் அடையச்செய்யும் தன்மைகளைப் பற்றி போதனைகள் செய்து, தக்க அனுபானம் மூலம் குருமருந்தை, நோயில் நலிந்தார்க்குப் புகட்டும் அளவு முறையைப் கற்றுக் கொடுத்தார். மேலும் ரசவாதம் செய்யும் பக்குவ முறைகள் பற்றியும் செயல் விளக்கம் சொல்லித் தந்தார். போர்வீரர்கள் அடிக்கடி காட்டுக் கள்வர்களுடன் கைகலப்பு, சண்டைகளில் ஈடுபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவ விடுதிக்கு வந்து சேர்வர். அவர்களுக்குச் சிகிச்சைகளை அளிக்கும் போது பத்மபாதன் செயல்படும் வேகம் கண்டு, அவருக்கு இன்னும் நிதானம் தேவை எனத் தலைமை மருத்துவர் திரு பூவராஹர், அடிக்கடி கூறிவந்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

 

திருமதி ரேவதிதேவி அம்மையார் உடல் நிலை மிகவும் ஷீனநிலை அடைந்து கொண்டிருந்தது. அக்கால வழக்கப்படி  நோயாளியைப் பிரார்த்தனைக் கூடத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள். பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டே ஆத்மபரிபூரணத்துவம் அடைந்து விடுவார்கள். பகவத்நாமாவளி ஜெபம் செய்வதைக் கேட்டுக் கொண்டே உயிர் துறப்பது விஷேசம் என்கிற கருத்துப் பரவலாகப் பேசப்பட்ட காலம் அது. மருத்துவர் திரு பூவராஹர் அந்த முடிவிற்குத்தான் வந்திருந்தார். பொறுப்பு பத்மபாதனிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. தனது மருத்துவ ஆராய்ச்சியினால் நோய் நீக்கும்  மருந்துகளுக்குப் புதிய கோணத்தின் பரிமாணங்களில் கவனம் செலுத்தியிருந்த பத்மபாதன் ரேவதி அம்மையைக் குணப்படுத்துவதில் மிகவும் குறியாக இருந்தார். மிகச் சரியாக ஒருமாத காலத்தில் அதில் வெற்றியும் பெற்றார் எனக் குறிப்பிடத் தேவையே இல்லை எனலாம். வேதியர் வேணுநாதன் அடைந்த மகிழ்ச்சிக்கும், தனது கணிப்பு தவறாகிப் போனதில் தலைமை மருத்துவர் திரு பூவராஹர் அடைந்த அதிர்ச்சிக்கும் அளவில்லை. “எல்லாம் கடவுள் செயல்” என்று உரைத்த அவரிடம் தனது வைத்தியத்தைப் பறைசாற்ற விரும்பாதவர் பத்மபாதன் மட்டுமே! இதில் அளப்பரிய சந்தோஷத்தை மீண்டும் அடைந்தவர் ஶ்ரீ பூவராஹர். காரணம் விக்கிரமாதித்தன் என்ற பட்டத்தை அடைந்த மன்னன் இரண்டாம் சந்திர குப்தன் அங்கு  வருகை தர இருந்தது தான்!

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button