ஆதியில் அரசாட்சிகளின் மூன்று கொள்கைகள்!

462

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் , குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(13) ஆதியில் அரசாட்சிகளின் மூன்று கொள்கைகள்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 

மருத்துவவிடுதிக்கு விக்ரமாதித்ய மன்னனின் வருகை அங்குள்ள அனைவருக்கும் மகிழ்வை மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. மன்னனின் முகவிலாசம், அதில் உள்ள அமைதி பூரணநிறைவை உண்டாக்க நோயாளிகள் அனைவருக்கும் கவலை தீர்ந்த உணர்வைத் தந்தது.அக்காலத்திய நாடாண்ட மன்னர்கள் கொண்டிட்ட கொள்கைகள் என்பது, அன்றைய சூழலில் மக்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டே வரலாறுகள் இன்றும், என்றும் ஆய்வுக்கு உட்படுவதாகவும், நன்மை தீமைகளை விமர்சிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. அன்று நாடாண்ட மன்னர்களில் பொற் காலம் கண்ட விக்கிரமாதித்திய இரண்டாம் சந்திர குப்த மன்னனின் நல்லாட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல! அரசர்களின் கொள்கைகளோ, 1. உலகில் உள்ள அனைத்துச் செல்வ வளங்களும், அரசனிடமே எப்போதும் குவிந்திருக்க வேண்டும். அதற்குண்டான அதிகாரமும் அரசனிடமே இருப்பதுதான் முறை. 

2.உலகம் முழுவதும் அரசரின் ஆட்சியின் கீழ் வந்துவிட வேண்டும். 3. அரசனது ஆணைக்கு அடங்கி, அவனது ஆட்சிக்கு உட்பட்டு, அதன்படி அனைத்தும் இயங்கி வரவேண்டும். அரச ஆணைக்கு அடங்கி மக்கள் வாழ்வதுதான் சுதந்திரம். செல்வமும், ஆதிக்கமும், சமுதாயப் பண்பாடும் அரசனது உடமைகள் என்பதாக மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனை மக்களும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இது அக்காலத்திய ராஜாக்களின் நிர்வாக நடை முறைகள்!

 

முதலில் பாரத தேசத்தில் சமுதாயக் கட்டுப்பாடுடன் கூடிய அரசியல் என்பது, வேதபண்டித குருமார்களின் ஆலோசனை களைக் கொண்டு, அரசாட்சி நடைபெற்றது. அதில் பண்பாடு குறித்த சட்டதிட்டங்கள் கட்டாயமாக நடைமுறைப் படுத்தப்பட்டன. அதற்கடுத்து நடைபெற்ற க்ஷத்திரியர் வம்ச அரசர்களின் ஆட்சியில் தாங்கள் மக்கள் மேல் செலுத்தும் அதிகாரத்தில் கர்வமும், எதிர்ப்பாளர்களைக் கொல்வதும், பழிக்குப்பழி வாங்கிட யுத்தங்களில் ஈடுபடுவதும், ஆடம்பர வாழ்வு, ஒற்றுமை இன்மை எனவும் அவர்களின் போக்கு அமைந்திருந்தது. மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவைகளுக்கு எவ்விதத் தடையும், கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட  வில்லை.  இதற்குப் பிறகு வந்த கடலோடி வெள்ளை வணிகர்கள் வியாபாரம் செய்ய வந்து காலனி ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொண்டு மக்களை ஆளத்துவங்கினர். இந்த வணிகர்களின் வியாபார ஆட்சிகளில் வகுத்த அந்தந்தக் கால சட்ட திட்டங்கள் அனைத்தும் மேம்போக்காகப் பார்த்தால்  வியாபாரம் மட்டுமே! இவர்கள் கேட்டுக் கொள்வது, ” நாங்களோ வணிகர்கள். எங்கள் நாட்டுப் பண்டங்களை இங்கே கொண்டு வந்து விற்பனை செய்ய எங்களுக்கு வசதிகள் செய்து கொடுங்கள்! மேலும் சகல சௌகரியங்களும் எங்களின் தேவைக்கேற்ப செய்து கொடுத்து விடுங்கள்! எங்களுக்கு வியாபாரம் போதும். உங்களது பண்பாட்டில் நாங்கள் தலையிடவில்லை” என்று கூறினார்கள். வெள்ளை வணிகர்களின் ஒரே சங்கற்பம், “இந்தப் (விதேசி) பொருட்கள் எல்லாம் எங்களுடையதே! இனி மேற்கொண்டு அந்தப் (சுதேசி) பொருட்களும் எங்களது உடமைகளாகி விடும்” என்பதே அவர்களின் தாரகமந்திரமும், ஜெபமும் ஆகும். அக்காலமும் இனி எக்காலமும் வியாபாரங்கள் நிமித்தமே யுத்தங்களை இவ்வுலகில் மேற்கொள்வார்கள் என்பது அறிஞர் பெருமக்களின் கருத்தாகும்.

 

பொற்காலம் கண்ட விக்கிரமாதித்திய மன்னனோ தவத்தில் சிறந்தவர்.  அறிவிற் சிறந்த அவர் நாட்டு மக்கள் மீது அன்பும், அவர்களது வாழ்வில் அக்கறையுடன் கூடிய ஆசையும் கொண்டிருந்தார். எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும், அவர் செய்து வந்த தவம் அவருக்கு உள்ளத்தில் உரத்தையும், மனவலிமை யையும் ஏற்படுத்தி இருந்தது. அறிவு, அன்பு, உழைப்பு இம்மூன்றும் அவரது தாரக மந்திரமாக இருந்தது. அரச வாழ்வின் எல்லாச் செயல்களிலும், அவரது தேவைகளை, வெற்றிகளை, அடைய  அன்பும், அறிவும், உழைப்பும் நல்ல முடிவுகளை ஏற்படுத்தித் தந்தது. அவை மாத்திரமன்றி அவரது ஞானகுணமும், தெய்வீக பக்தியும், கர்மாவைச் செயற்படுத்துவதில் இடையறாத உழைப்பும் மேன்மையை ஏற்படுத்திப் பொற்காலம் காணவைத்தது. விக்கிரமாதித்திய மன்னன் தனது அரசாட்சியை, அன்பு, அறிவு, உழைப்பு, ஞானம், பக்தி, கர்மா என்கின்ற ஆறு குணச் செயல்களில் தனது அரசாட்சியை நிலை நிறுத்திச் சிறந்த சாதனையை  ஏற்படுத்தி பொற்காலம் காண வைத்தார். ஆனால் அக்காலத்தில் அவருக்கு மிகுந்த சவாலாக விளங்கி வந்தவன், நாட்டில் நரபலி பழக்கத்தை ரகசியமாக அரங்கேற்றி வந்த தம்பன வசியன் என்ற அகோர பைரவன். இவன் கடலோடிக் கொள்ளைத் தொழில் மேற்கொண்டு வந்த முரட்டுக் கும்பலுடன் தொடர்பு கொண்டவன். அப்போது..

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button