ஐயனே… என்னைக் காப்பாற்றுங்கள்!?

312

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(11) ஐயனே…என்னைக் காப்பாற்றுங்கள்!?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ரயில் வண்டி வந்து விடவே நமது சுவாமி ஶ்ரீ வல்லபரிடம், “மகானே இவர்களை இப்படியே விட்டுவிட்டுச் செல்வது தருமமாகுமா? ” எனக் கேட்டார். அதற்கு அவர், “இன்னும் சிறிது நேரம் ஜனங்களும் வேடிக்கை பார்க்க வேண்டாமா?  இந்திர ஜால மயக்கத்தில் இருக்கின்றார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தானாகவே சரியாகி விடும். பிறகு நம்மைப் பயத்துடன் தேடுவார்கள். வா நாம் சென்று விடுவோம்” என்றபடி நமது சுவாமியின் கைகளைப் பிடித்தபடியே ரயில் வண்டியை நோக்கிச் சென்றார். சிறிது தூரம் நடந்து போய் ஆட்களில்லாத பெட்டியில் அமர்ந்து கொண்டனர். வண்டி உடனே புறப்பட்டும் விட்டது. அவர்களைத் தாண்டி ரயில் செல்லும் போது இன்னமும் பயந்து சப்தமிட்டபடி குதித்துக் கொண்டிருந்தனர். அதனை நமது சுவாமி பார்த்தார்.  சுவாமியின் கண்கள் கலங்கி கண்ணீர் வரத் துடிப்பதைப் பார்த்த வல்லபர் கைவிரல்களைச் சொடுக்கி அவர்களை விடுவித்தார். திருதிருவெனக் கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்த அவர்கள் அப்படியே தரையில் சாய்ந்து களைப்புடன் படுத்துக் கொண்டனர். ரயில்வே காவல் துறையினர் கூட்டமும் சலசலப்புமாக மக்கள் நின்று கொண்டும், சப்தமாகப் பேசிக்கொண்டும் இருப்பதைப் பார்த்து விட்டு விரைந்து வந்து ஒழுங்குபடுத்தினர். நமது சுவாமியின் முகத்தை அன்புடன் குழைந்த பார்வையுடன் பார்த்த மகான் வல்லபர், “ஶ்ரீ ஈஸ்வரகுமரனே நாம் காலச்சக்கரத்தில் பயணம் செய்திடும் முன் எனது மற்றுமொரு வினாவிற்கு நீ பதில் கூற வேண்டும்” என்றதும், “ஆகட்டும் ஐயனே” என்றார். “புனித உள்ளம் பெற்றோர் ‘அறிவாளி’ என்று யாரைக் கருதுகின்றார்கள்? “என்றார்.

 

” உலகில் கல்வியறிவு, அனுபவக்கல்வி இவைகளில் தேர்ச்சி பெற்று தத்துவஞானம் அடைந்து பிறருக்கும் அதனை எடுத்துரைப்பவனும், இன்பதுன்பங்களின் பாகுபாட்டை அறிந்து சொல்பவனும், வெற்றி தோல்வியின் உண்மை அனுபவத்தால் தைரியம் பெற்றவனும், வாலிபவயது வரை வாழ்ந்த வாழ்க்கையும் பிறகு அடைந்த திருமண வாழ்க்கையின் அனுபவநிலைகளில் இருக்கும் பாகுபாடுகளை அறிந்துணர்ந்து தெளிந்து அவற்றைப் பிரித்துக் காட்டக் கூடியவனும், தனது வாழ்க்கை பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வாழ்ந்து இறைவன் அருளுக்கும் பாத்திரமானவன் எவனோ அவனே புனிதன் என்பது புனிதமான உள்ளத்தைப் பெற்றவர்கள் கருத்தாகும்” என்றார் நமது சுவாமி.  “சற்குரு நாதரிடம் நீ கற்றுக் கொண்ட விஷயங்கள் பற்றி ஏதும் வாய்திறக்க வில்லையே, ஏன்? ” என மகான் வல்லபர் வினவினார். உடனே சுவாமி, ” கற்ற கல்வி பற்றிக் கூற என்ன இருக்கின்றது ஐயனே? இன்னும் கற்க வேண்டியது அநேகம் உள்ளதாக எண்ணுகிறேன். சற்குரு நாதர் அவர்கள் முதலில் ஜெபம் செய்திடக் கற்றுத் தந்தார். பிறகு தக்க மந்திர வகைகளைப் போதனை செய்தார். மனிதன், மிருகங்கள் செய்திடும் தந்திரங்களைச் சுட்டிக்காட்டி உணரச் செய்தார். மற்றவர்கள் முன்னால் விநயத்துடன் நடந்து கொள்ளவும், பேசவும் கற்றுக் கொண்டிடச் செய்தார். அறிவுசால் பாடங்களை உபதேசம் செய்து  பேரறிவு படைத்தவனாக  மாற்றி அமைத்தார். ஏமாற்றும் குணம் பெற்றவர்கள் தானே விலகிட வழிகாட்டி உதவினார் ” என்று கூறியவுடன் சுவாமியின் தலையில் வேதனை ஏற்பட்டு தலையைப் பிடித்துக் கொண்டு விட்டார்.

 

என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நன்குணர்ந்திருந்த வல்லபர் ரிஷி மட்டும் புன்னகை மாறாத முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் நமது சுவாமியிடம், ” குழந்தாய் காலச்சக்கரப் பயணம் துவங்க உள்ளது. அது உன்னைக் கொண்டு சேர்க்கும் இடத்தின் சூழல் தான் இப்போது உனக்கு அனுபவமாகத் தலை வலிப்பதைப் போன்று உணருகின்றாய். சற்றுப் பொறுத்துக் கொள் ” என்றார். நமது சுவாமியோ, “ஐயனே.. காப்பாற்றுங்கள்” என்று சப்தமிட்டபடியே மயங்கிக் கீழே வீழுந்தார். வல்லபர் ரிஷி தாங்கிப் பிடித்துக் கொண்டார். அப்போது பிரகாசமான ஒளிவட்டம் தோன்றவும், ஶ்ரீ வல்லப ரிஷி அவர்கள் நமது சுவாமியைத் தூக்கித் தனது தோளில் போட்டுக் கொண்டார். பிறகு ஒளி வட்டத்தினுள் அவர் நுழையவே அது பிளந்து தன்னுள் வழி விடவே உள் நுழைந்தார் ரிஷி. பிறகு அந்த ஒளி வடிவில் தோன்றிய காலச்சக்கரம் மறைந்து போனது. ஆனால் ஒளிவடிவில் விரைந்து  சென்ற அது  விக்கிரமாதித்திய சகாப்தத்தினுள் பயணித்துப பண்டைக்கால ஒரு மருத்துவசாலைக்குக் கொண்டு சேர்த்து விட்டுப் ஒளிப் புள்ளியாகி மறைந்து போனது. ஶ்ரீ வல்லபர் நமது சுவாமியை அங்கிருந்த கயற்றுக் கட்டிலில் படுக்க வைத்தார். சுவாமியின் தோற்றம் வயோதிகன் போல் மாறியிருந்தது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது !

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button