இலக்கண ஆசான் திரு அமரசிம்மர்!

161

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் பாகம் – 2

(22) இலக்கண ஆசான் திரு அமரசிம்மர்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாத்ஸல்யாயனர் உரையாடிக் கொண்டே கரங்கூப்பி வணக்கம் கூறிய திசையில், சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் எழுதிய புலமை மிகுந்த ஆசான் திரு அமரசிம்மர் அவ்விடத்திற்கு, வணக்கம் கூறியபடியே வருகை புரிந்து கொண்டு இருந்தார். வேதியர் வேணுநாதரும் அவரை வரவேற்றார். சாதுக்கள் சங்கடம் பற்றிய உரையாடல் நடப்பதைக் கண்டு அவரும் அதில் பங்கு பெற்றார். “மரணம் தங்களை நெருங்கிய காலத்தில் கூட அசாதாரண மனோபலம் கொண்டு, மிகுந்த தீரத்துடன் அதனை எதிர் கொள்ளக்கூடியவர்கள் சாதுக்களே! அவர்களுக்கு அப்படி என்ன சங்கடம் வந்து விட்டது முனிவர் பெருமானே? ” என்று வினவியபடியே வந்து வாத்ஸல்யாயனர் முன்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் திரு அமரசிம்மர். மடத்தில் இருந்த சாதுக்கள் அனைவரும் வந்து அவரை வரவேற்று உபசரித்தனர். திரு அமரசிம்மர் தமது நண்பராகிய வாத்ஸல்யாயனரிடம், “சாது சங்கடம் பற்றித் தாங்கள் உரையாடிக் கொண்டிருப்பது எமது செவிகளிலும் விழுந்தது. சாதுக்கள் பற்றி அறிய நாமும் விரும்புகிறோம்” என்றார். சமஸ்கிருத பாஷைக்கு இலக்கணம் எழுதுவது சாமான்யனால் இயலுமா? அமரசிம்மர் எத்தகைய திறமைகள் மிகுந்த மகான்! என எண்ணமிட்டார் வேணுநாாதர். “சாதுக்கள் பற்றிய செய்திகளை சாதுக்கள் முன்னால் இருந்து பேசுவது விஷேசமானது” என திரு அமரசிம்மர் பாராட்டிக் கூறினார். வாத்ஸல்யாயனர் சாதுக்கள் சபையில் அவர்களைப்பற்றி உரையாற்றத் துவங்கினார். சாதுக்கள் அனைவரும் தங்கள் சபையின் மந்திர கோஷங்கள் செய்தபடியே வந்து அமர்ந்து கொண்டனர்.

“அடியேன் உரைக்கப்புகும் சாதுக்கள் எனப்படும் நன்நெறியாளர்கள் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் பகவானின் வேதங்களைக் கற்றுணர்ந்து போதித்த ஞானியர்களாகிய நமது முன்னோர்கள் கூறியவையாகும். நேர்மையான அறிவினைப் பெற்று, என்றும் இறைவன் சிந்தனையுடன் வாழ்ந்து வருபவர்கள் சாது ஜனங்கள் ஆவார்கள். மரண பயத்துடன் அவர்களை அணுகுபவர்களின் உயிர்களை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற எண்ணுபவர்கள். மரணபயம் நீங்க அவர்களுக்குத் தகுந்த ஜெபத்துடன் கூடிய ஆலோசனைகளையும், நல்லவழி முறைகள் அனைத்தையும் புரியும்படி காட்டித்தருவார்கள். சம்சார சாகரத்தில் உழலாத இவர்கள், பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு இவைகளைக் கண்டு எதிர் மறையாக எண்ண மாட்டார்கள். தீரம் மிகுந்த மகா உத்தமர்களாகிய சாதுக்களின் வாழ்க்கை உண்மையிலேயே போற்றுகலுக்கு உரியது எனலாம். உலக மாந்தர்களைக் குளிர்ச்சி செய்வதற்காக உலகத்தில் பிறந்த சந்தனமரங்கள் எப்படி தங்களைக் குளிர்ச்சி செய்து கொள்வது இல்லையோ அதனைப் போன்றே சாதுக்களும் மற்றவர்களின் சேவைக்காகவே தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து அர்பணிக்கின்றார்கள். பெரியோர்களாகிய இவர்கள் பிறருக்கு உதவிடும் சேவைகள் செய்வதற்காகவே மனிதப் பிறப்பினுக்கு வருகின்றார்கள். இறைவன் சிந்தனையை மக்கள் மனதினில் விதைக்கும் இவர்கள் மற்ற ஜீவர்களின் மகிழ்ச்சியை கண்டு ஆனந்தம் கொண்டு இறையருளுக்கு நன்றி கூறுகிறார்கள். பிறர் வேண்டினால் தங்களது உயிரையும் கூடத் தத்தம் செய்து விடும் அத்தகைய சாதுக்கள் மற்றவர்களது துயரம், துன்பங்களைக் கண்டு அவர்களும் மனதில் துயரத்தை அடைந்து விடுவார்கள். இதுதான் சாது சங்கடம் எனப்படுகிறது ” என்றார். அப்போது சில சாதுக்கள் சிரக்கம்பம் செய்தார்கள்.

மேலும் கூறினார், ” ஒரு சாதுக்களின் மடத்தில் ஜெபிக்கப்படும் ஜெபமந்திரத்தை மற்றொரு சாதுக்கள் மடத்தில் ஜெபிக்க மாட்டார்கள். காரணம் ஒரு ஜெப மந்திரத்திற்கு உரிய யந்திரத் தகடு ஒன்றில் யந்திர வரைபடம் வரையப் பட்டிருக்கும். அந்த யந்திரத் தகட்டினுள் சாதுக்கள் ஜெபிக்கும் ஜெபமந்திரம் பதியப்பட்டிருக்கும். அதனை ஜெபம் செய்யும் பொழுது அதனுள் இருந்து ஜெபசக்தி அபரிமிதமாக வெளிப்படத் துவங்கும். அவைகளை ஜெபதவம் செய்திடும் சாதுக்கள் பெற்று தங்களது ஆற்றல்களைப் பலமடங்கு பெருக்கிக் கொள்வார்கள். அதற்கு உரிய நெய்வேத்தியமும் இருக்கும். இவர்களின் யந்திர சூட்சும மந்திரத்தில் பிரபஞ்ச ரகசியத் திறவுகோல் மறைமுகப் படுத்தப்பட்டு இருக்கும். இந்த குரு மஹா மந்திரத்தை வேறு ஒரு மடத்தைச் சேர்ந்தவர்கள் அதனைத் தங்களுக்கு உரிய மந்திரம் என எடுத்துக் கையாளும் போது “சாது சங்கடம்” ஏற்பட்டு விடும. அது எப்படியென்றால் வேறு மடத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மந்திரத்தை யந்திர சூட்சுமங்கள் இல்லாமல் பயன் படுத்தும் போது, அவர்களுக்கு எவ்விதப் பலனும் ஏற்படப் போவதும் இல்லை. மாறாக சாது சங்கடம் மட்டும் அவர்களை பீடித்துக் கொள்ளும் என்பதே உண்மை!”

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button