வாத்ஸல்யாயனாரின் கனவு மெய்ப்படுமா?

171

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் பாகம் – 2

(21) வாத்ஸல்யாயனாரின் கனவு மெய்ப்படுமா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாத்ஸல்யாயனர் மீண்டும் தமது கருத்துக்களைக் கூறலானார், “கேளும் வேணுநாதரே, எங்கும் நிறைந்திருக்கு இறைவனை அறியச் செய்திடும் வேதக் கல்வியைக் கற்றுக் கொள்ள எண்ணுபவர்கள், தனது பரிசுத்தமான எண்ணத்தில் உறுதிப்பாடும், உள்ளத்தில் ஆழ்ந்த அமைதியும், தெளிந்த அறிவும் கொண்டு, தெய்வீகமானதும் புனிதம் மிக்கதுமாகிய தியானத்தின் பொருளை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதற்கும் இறையருள் துணை இருந்தால் மாத்திரமே சாதனை சாத்தியப்படும். இவ்வழி உலக இன்பங்களையும், பற்றுக்களைத் துறந்த ஞானியர்களுக்கு மாத்திரமே கைவரத்தக்க பொருளாகும். ஞானியர்கள் தாங்கள் செய்யும் செயல்களின் நன்மை, தீமைகளைக் கூட விட்டு விலகி விடுவதால், இவர்கள் சமபுத்தி உடையவர்கள் எனவும் உள்ளத்தில் நடுவு நிலையைப் பெற்றவர்கள் என்றும் போற்றப் படுகின்றார்கள். இவர்கள் பிறவா நிலை என்னும் பரமபதத்தைச் சென்றடைந்து நித்திய வாழ்வில் என்றென்றும் இறைவனுடன் வாழ்கின்றார்கள். இவ்வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டு, இறைவனை நேசிக்கின்ற மனோ பாவமும், வைராக்கிய சிந்தனை கொண்டவர்கள், தூய குருநாதனைத் தேடியும், நாடியும் அடைந்து, அப்பரம சற்குருவின் உபதேசப்படி நடந்து கொண்டு, இறைதியானம் என்னும் நல்வழியைக் கடைப்பிடித்து ஒழுகிவர வேண்டும். சாதாரணமாக வாழும் மனிதனுக்கு மனப்பக்குவத்தை உண்டாக்கி அவனை அசாதாரண மனிதனாக மாற்றி இறைவனை உணரச் செய்வதற்கு வேதக்கல்வி மிகவும் அவசியமும், தேவையும் ஆகும். முன்னர் கூறியது அண்டபேரண்டங்கள் முழுவதும் எங்கெங்கினும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை, வானுறையும் தேவாதி தேவர்களாகிய தெய்வங்கள், தங்களது தியானத்தால் பரமாத்ம சொரூபனைப் பற்றி இருக்கும் முறையை வேதகல்வி வழி காட்டுகிறது ” என்றார்.

அதற்கு வேதியர் வேணுநாதர், “ஓ முனிவரே, வேதக்கல்வி கூறும் நல்வழிக் கொள்கைகள் பற்றி அறிந்திருக்கும் இருவர் கருத்துக்களும் ஒன்றுதான். பிண்டத்தில் இருந்து மனிதன் தன்னைத் தான் முதலில் அறிந்து கொள்ளக் கடைப் பிடிக்கும் தியானத்தில் முழுமை அடைந்து உலகத்தின் பிடியில் இருந்து விடுபடுகின்றான். மேலும் சற்குருவின் அருள் ஆசியினால் அண்டத்தை அறிந்து உணர்ந்து கொள்ளக் கடைப்பிடிக்க வேண்டிய தவவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். குருவருள் கடாச்சத்தினால் ஈஸ்வர மஹா ஜோதியை தனது ஆத்மசக்தியினுள் உணர்ந்து வாழத்துவங்குகிறான். பரமபவித்ரமான தவவாழ்வில் சாதனை புரிந்து மனிதப் பிறவியை நீக்கிக் கொண்டு தெய்வ நிலையை அடைந்து விடுகின்றான். நமது வேதங்கள் இக்கல்வியை மனிதனுக்குப் போதிக்கின்றன. நீங்கள் முன்னர் கூறியது போல், உலகத்தில் தவமியற்றி தெய்வநிலை பெற்றவர்கள் மேலும் தங்களை உயர்த்திக் கொண்டு பிற ஆத்மாக்களுக்கும் நல்வழியின் ஆசிகளை வழங்கி வாழ்வாங்கு வாழவும் வேதவித்து தெய்வீகக் கல்வி போதனையின் வழியை மேற்கொள்கிறது. கடைப்பிடிப்பவர்கள் இறைவனுடன் ஒன்று கலந்து வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள்” என்றார். அதற்கு வாத்ஸல்யாயனர், ” வேதவித்துப் பற்றி வேதியர் வேணுநாதர் கூறிய விளக்கம் மிகவும் மனநிறைவைத் தருகிறது. அதற்கு எமது மனப்பூர்வ நன்றி உரித்தாகுக! எமது சிற்றின்ப சூத்திரம் வாழ்வை நேசிக்கும் மாந்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அடியேன் கூற விரும்பும் வழியானது சிற்றின்பமே பேரின்பத்தை அடைவதற்கு உரிய, உயரிய மனப்பக்குவத்தை உண்டு பண்ணும் கல்வி நெறியாகும். இதனால் இல்லறத்தில் ஒற்றுமை, சந்தோஷம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் சூழல் என உடல்மன ஆரோக்கியம் ஏற்பட வழிவகுக்கும்” என்றார்.

வேதியர் வேணுநாதர் அதனைக் கேட்டுப் புன்முறுவல் கொண்டார். பிறகு அவர் காமசூத்திர ஞானியைப் பார்த்து, “ஓ முனிபுவங்கரே! துக்கங்களை வென்று சாதுசங்கக்தில் வாழும் பாக்கியம் பெற்றவரே! எனக்கு மனதில் ஒரு வினா எழுந்து கொண்டே உள்ளது. அதற்குச் சரியான விடையைத் தாங்கள் தயவுடன் கூற வேண்டும்” என பீடிகை போட்டார். உடனே வாத்ஸல்யாயனர், “ஓ பிராமண உத்தமரே கேளும், நாமறிந்தவரை பதில் கூறுகிறோம்” என்றார். அதற்கு வேதியர் வேணுநாதர், ” ஞான முனிவரே, ‘சாது சங்கடம்’ எனக் கூறுகின்றார்களே, அதன் பொருளை எமக்கு நீர் விளக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு வாத்ஸல்யாயனர் கூறியதாவது, ” ஐயனே வேதியரே கேளும், முதலில் சாதுக்களின் இயல்புகள்,அவர்களது நடபடிக்கைகள் பற்றி நமது வேதங்களின் வாயிலாக, இறையருள் நமக்குக் கூறியுள்ளார். அதனை முதலில் கூறி விட்டு சாதுக்கள் சங்கடம் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறேன்” என்று கரங்கூப்பினார்.

(மனிதனே புனிதன் பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button