உஜ்ஜெய்னி ராஜபாட்டையில் வசனகிரியில் ஓர் அதிசயம்!

223

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2

(23) உஜ்ஜெய்னி ராஜபாட்டையில் வசனகிரியில் ஓர் அதிசயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் எழுதிய அமரசிம்மர், சாதுசங்கடம் பற்றிய உரையைக் காமசூத்திரம் இயற்றிய வாத்ஸல்யாயனர் கூற அக்கறையுடன் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். எத்தனையோ ஆற்றல் மிகுந்த சாதுக்கள் மற்றவர்கள் துயரத்தைக் கண்டு தாங்களும் துயருறுவார்கள் என்று கூறிய செய்தியை ஏற்றுக் கொள்ள அமரசிம்மருக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. அதனை அவரது முகபாவனையில் இருந்து கண்டு கொண்ட வாத்ஸல்யாயனர் அங்கே சபையில் அமர்ந்திருந்த சாதுக்களைப் பார்த்து, “சத்திய வழியில் செல்லும் சாதுக்களே! எப்போதும் அன்பின் வழி செல்பவர்களே! பிறருடைய துன்பம் கண்டு தங்களை வருத்திக் கொள்பவர்களே!அடியேன் உங்களிடத்தில் நேரிடையாகக் கேட்கின்றேன்.எமது கருத்துத் தவறுதலாக இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன். ஒரு மருத்துவர் நோயாளிகளின் நோய்நாடி
அதன் குற்றம்நாடித் தகுந்த சிகிச்சைகள் தருமுன் நாடியின் துடிப்பை நாடுகின்றார். அக்கரையுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கின்ற மருத்துவர்கள் அவர்களுடைய நோய்களைப் பெற்றுக் கொள்வதில்லை. நோயாளிகளின் துன்பம் கண்ணுற்றும் மருத்துவர்கள் தங்களை வருத்தப்படுத்திக் கொள்வதில்லை. இது இயல்பாகவே அவர்களுள் துலங்கும் பெரும் பேறாகும். மருத்துவர் வருத்தமோ, இரக்கமோ கொள்வதில்லை! மாறாக நோயில் இருந்து நோயாளிகள் நலம்பெற மருத்துவர் இறைவனைப் பிரார்த்தனை செய்து, தக்க ஒளஷதங்களைத் தந்து உதவி புரிகின்றார். அதனால் எந்தகைய வியாதிகளும் மருத்துவரைத் தாக்காத சமநிலையில் உள்ளத்தை வைத்துக் கொள்ள இறைசக்தி உதவி புரிகின்றது! எமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மகத்துவம் வாய்ந்த சாதுக்கள் இத்தகைய மனநிலையைக் கடைப்பிடித்து வரவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் சாதுக்கள் எடுத்து வந்த பிறவியின் பயன் நிறைவு பெறுவதோடு, உலகினுக்கும் நன்மைகள் பிறக்கும்” என்றார்

சபையில் இருந்த சாதுக்கள் அனைவரும் ஏககாலத்தில் சிரக்கம்பம் செய்து “சாது சாது” என்று உரத்த தொனியில் கூவினர். அப்போது அமரசிம்மர் அவர்கள் வாத்ஸல்யாயனரிடம் புன்னகை பூத்தபடி ஓர் கேள்வியைக் கேட்டார். “முனிவரே தாங்கள் கூறுவது கட்டுப்பாட்டுடன் மனிதன் வாழ்வதற்காகக் கூறப்படுவதா?” என்றார். அதற்கு வாத்ஸல்யாயன முனிவர், “ஐயனே… தாங்கள் மனித வாழ்வின் உண்மையை உணர்ந்து இருக்கின்றீர் என்பது தங்களது வினாவில் இருந்து தெரிய வருகின்றது. சாதுக்களே நீங்கள் அறியாததையா அடியேன் உரைக்கப் போகின்றேன்? இயற்கையின் நியதிப்படி மனிதன் அனுபவிக்கும் நிகழ்வுகளில், சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் அனைத்தும் அவரவர்களின் எண்ணங்களால் ஏற்படும் விளைவுகளே! மனிதர்களில் நல்லவர்கள், தீயவர்கள் எனப்படுபவர்களில் இயற்கையிலேயே பொதுவான சில ஒற்றுமைகள் உண்டு. தாயின் கர்பத்தில் வசித்தது, அப்போது ஏற்பட்ட உணர்ச்சிகள், உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள், அவைகளால் தொழிற்படுத்தப்படும் கருவிகள், அறிவும் அதன் ஆற்றல் சக்திகளும் எல்லோருக்கும் ஒன்று போல் தான் இருக்கின்றன. ஆனால் மனிதனின் வளர்ப்பு, அவனது சந்தர்ப்ப சூழல், நல்லவனாகவும், தீயவனாகவும் அவனை வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தின் தீர்வுகள் இவைகளில் தான் வி்த்தியாசங்கள் பரிமளிக்கின்றன. அவனை அடையாளம் காட்டி விடுகின்றன. இந்த சமயத்தில் தான் மனிதனுக்கு நல்ல வழி காட்ட, அறிவு புகட்ட நற்குண ஆசான் அவசியம் தேவை” என்றார் அமரசிம்மர். இதன்பிறகு சாதுக்கள் கூட்டத்தில் “சாது, சாது” என்ற சலசலப்பு எழுந்து அடங்கியது. வேதியர் வேணுநாதர் திரு வாத்ஸல்யாயனர், திரு அமரசிம்மர் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு உஜ்ஜெய்னி மாகாளிப்பட்டணம் நோக்கிப் புறப்பட்டு ராஜபாட்டையில் புறப்பட்டுப் போனார்.

பயணவழியில் ஆங்காங்கே பிரயாணக் கட்டண வண்டி வாகனங்களில் பயணம் செய்து கொண்டு போனார். வசனகிரி வனப்பகுதியைக் கால்நடையாகக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எங்கோ வனங்களில் பெய்த கனமழையால் , காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குணவதி நதியினில் கலந்து இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நதிக்கரையில் உள்ள வனமாகாளி தேவி குகைக் கோயில் வாயில் அருகே அவர் அமர்ந்து பொங்கிப் பிரவகித்து ஓடும் நதியைக் காளி மாதாவின் சீற்றம் போல் எண்ணியபோது அவருடல் நடுங்கியது. அப்போது வேதியர் வேணுநாதர் ஓர் அதிசயக் காட்சியைக் கண்ணுற்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button