இடி மின்னல் மழையுடன் மனதினில் பூகம்பம்!

278

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(3) இடி மின்னல் மழையுடன் மனதினில் பூகம்பம்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தென்மேற்குப் பருவக் காற்றின் சாரல் மழை துவங்கி படிப்படியாக மழை வலுவாகப் பெய்யத் துவங்கியது. மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்ததால், கோடை மழையும், கொங்கு மழையும் இணைந்து பெய்வதாகப் பேசிக் கொண்டார்கள். ஆலங்கட்டி மழையானதால் பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் ஆலோசனைப் படி பனிக்கட்டிகள் கண்ணாடிக் குடுவை ஒன்றில் சேகரிக்கப்பட்டது. சுவாமி அவர்களும் மௌனமாக அப்பணியில் ஈடுபட்டபோது பாட்டி அவர்கள் தடுத்து விவசாய பூமிக்குச் சென்றுவரச் சொன்னார். சுவாமி அவர்கள் மழையைப் பொருட்படுத்தாது நடந்து சென்றார். வெள்ளநீர் கால்வாய் நிறைந்து ஓடிக்கொண்டு இருந்தது. வாய்க்கால் மேட்டுப் பாதையில் சென்று மேட்டுக்களம் என்ற இடம் தாண்டியதும் வண்டிப்பாதை எங்கும் வாய்க்கால் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. சுங்கம் காளி செட்டியார் வயல் தாண்டியதும், எல்லா வயல் மடைகளையும் திறந்து விட்ட நீரெல்லாம் ஒட்டு மொத்தமாக சுவாமியின் தகப்பனார் APM சுவாமி அவர்களின் வயலில் நெற்பயிர்களையெல்லாம் மூழ்கடித்து விட்டிருந்தது. நல்ல விளைச்சல் இருந்தும் ஆத்துப்பொள்ளாச்சி கொத்துக்காரர் காளிமுத்து அவர்கள் மேல்மடை வயல்களையெல்லாம் அறுவடை செய்து வந்தவருக்கு, வேலை ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக அறுவடைக்கு ஒருவார காலம் தாமதித்து விட்டார். கோடை, கொங்கன் மழையில் பயிர்கள் அகப்பட்டு , மீண்டும் அவைகள் முளைவிட ஆரம்பித்து விட்டன.

 

இவ்வுலகில் மனிதன் தன்னை செல்வத்தின் அதிபதி என நினைக்கத் தோன்றும் ஆடு,மாடுகள் முதலான ஏனைய விலங்கினங்கள், மனைமாட்சி, வீடுகள், கூடகோபுரம், ஆடை, அணிகலன்கள், நிலபுலன்கள், பணியாட்கள், மனைவியர், வண்டி, வாகனாதிகள்,பொற்குவியல்கள், செல்வச்சீமான் என்ற பட்டங்கள்  என இத்யாதி சிறப்புக்கள் அனைத்தையும் பெற்றிருத்தலையே மிகப் பெருமை என உலகமக்கள் பேசிக் கொண்டு இருப்பதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய தேவைகளைப் பெருமை வாய்ந்ததென எண்ண மாட்டார்கள் அறிவுசால் ஞானியர் பெருமக்கள். ஏனெனில் இந்தப் பொருட்கள் அனைத்துமே உலகில் உள்ள ஏதேனும் மற்றொன்றைச் சார்ந்தே இருக்கின்ற  காரணத்தினால் தான்! ஆனால் உயிராத்மா என்கின்ற இறைசக்தியோ, காணுமிடமெங்கினும் நீக்கமற நிறைந்து, அண்டசராசரங்கள், பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து சகல ஜீவர்களுள்ளும் இருந்து கொண்டுள்ளது. இதனைக் கண்டு கொண்டவர்கள், அறிந்து தெளிந்தவர்கள், பராபரமாகிய ஆத்மனில் உண்மையான அன்பைக் கொண்டு ஆத்ம ஐக்கிய நிலையை உருவாக்கி, அதனால் ஏற்படும் பேரின்பத்தினால் சந்தோஷ நிறைவை அடைந்து, தனக்குள் தான் முழுமை பெற்று, விடுதலை கிடைத்து, இறைவனிடம் அமைதியில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதனைப்பற்றிய முழுவிபரங்களையும் தனது சற்குருநாதரிடம் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டவர் நமது சுவாமி அவர்கள். அதனால் எத்தகைய இன்னல்கள் நேரிடினும் மனக்கலக்கம் ஏதுமின்றி அமைதியாக இறைவன் சிந்தனையில் திழைத்திருப்பார்.

 

பெருமழையின் காரணமாக விளைநிலத்தில் ஏற்பட்டு விட்ட பயிர் சேதத்தைக் கண்டு தவித்துப்போன, நமது சுவாமியின் தகப்பனார் APM சாமி அவர்கள், காரண காரியங்களைப் பற்றி ஆலோசிக்காமல் தனது கோபத்தை மௌனவிரதம் அனுஷ்டித்து வந்த தனது மகன் மீது திருப்பி விட்டார். அதற்கு தூபமிட்டு அவரது கோபத்தைப் பன்மடங்காக உயர்த்த, நமது சுவாமி அவர்களின் செயல்களைப் பிடிக்காத அனேகம்பேர் தயாராக இருந்தனர். ” இதோ இவன் ஆண்டவனை எண்ணி தியானம் இருக்கிறேன் பேர்வழி என்று கபடநாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றான். இவன் உண்மையான சுவாமியாக இருந்தால் ஆண்டவனை வேண்டி மழையை நிறுத்தி இருந்தால், வெள்ளாமைப் பயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கும். இவன் ஒரு சதிகாரனாகத் தென்படுகிறான். கெட்ட சக்தியை வரவழைத்து, மழைபெய்யச் செய்து  நெற்பயிரை அழித்து விட்டிருக்கிறான். இவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” இப்படியாகப்பேசி தங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும், சுவாமியின் குடும்பத்தில் பிளவை உருவாக்கலாம் என்று காத்துக் கொண்டு இருக்கின்ற தம்பனவசியன் குடும்பம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு விட்டது. நமது சுவாமியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர்கள் மௌனத்தைக் கடைப்பிடித்து வந்தவரை ஏதாவது ஒரு காரணத்தைத் சொல்லி குடும்பக் கலகத்தை ஏற்படுத்தினார்கள். சுவாமியின் மனைவி, குழந்தைகளைக் கடுஞ் சொற்களால் மனதினைக் காயப்படுத்தி ஆறுதல் அடைந்தனர். பாட்டி பொன்னம்மா நாச்சியாருங்கூட இவர்களது செயல்களை கண்டு வெறுப்புற்றார். 

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2 இன்னும் தெடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்,

மதுரை M. மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button