தர்மநியாயம் அறிந்தவனுக்கே வெற்றி!

284

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(4) தர்மநியாயம் அறிந்தவனுக்கே வெற்றி!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தன்நிகரில்லா வித்தையைக் கற்றவரும்,  சரீரபலம் மிகுத்தவரும் கூட சத்திய நியாய தர்மத்தை மதித்து, அதற்குப் பணிந்து வாழ்ந்த காரணத்தால்,  பாரத தேசத்தை, அதன் தொன்மையான தர்மத்தை, நியாயத்தை அறிந்து அயல் தேசத்தவர்கள்கூட  மரியாதை தந்து, கடைப்பிடிப்பதால் கிடைத்திடும் வெற்றியை அனுபவித்து வருகின்றார்கள். ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் தனிமனிதன் கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிகவும் அவசியமானது. மனித சமுதாயம் இவைகளைக் கடைப்பிடித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து, தர்மநியாய சத்தியத்தில் நம்பிக்கை வைத்து செயல்படத் துவங்கினால், ஒரு தேசத்தின் பலம் மிகவும் வலுவானதாக மாற்றமும், முன்னேற்றமும் அடையும். ஆனால் தீமை குணம் பெற்றவர்களின் செயலானது இத்தகைய உயர்ந்த எண்ணங்களின் லக்ஷிய நோக்கில் ஈடுபடாது. மாறாக தனிமனிதனின் உரிமையை அனுபவிக்க விடாமல் தடுக்கும் நோக்கில் களிப்பெய்தி வாழ்வார்கள். சத்திய நியாய தர்மங்கள் என்பதை மதித்து  நடக்கும் சிந்தனையை விரும்பமாட்டார்கள். இவர்களின் அறிவு அறியாமை என்னும் காரிருளினினுள் மறைந்திருக்கும். அறிவானது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்து போயிருப்பதால் எண்ணச்சிதறல்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். தனக்கு எதிர்ப்பாளர்கள் என்று எண்ணி விட்டால் அவர்களுக்கு அநேக இன்னல்களை விளைவிப்பது தம்பனவசியன் குடும்பத்தினர் இயல்பு! இதன் காரணத்தை முன்பொருமுறை கூறியுள்ளேன். அதனை மீண்டும் நினைவில் கொள்வோம்.

 

இந்நிகழ்ச்சியைப்பற்றி வெளிப்படுத்தி நமது நாகராஜன் சுவாமியிடம் கூறியவர் சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வரப்பட் சுவாமி அவர்களே! காலச்சக்கரம் என்ற அற்புதம் இத்தகைய மகான்களுக்கு இறையருள் வெளிப்படுத்திக் காட்டிய பிரபஞ்ச ரகசியங்கள் ஏராளம். இதனை அவர்கள் சில முக்கிய காரணங்களுக்காக இறைவன் அருளாசியுடன் மட்டுமே உபயோகப்படுத்தி வந்தார்கள். இதனை உபயோகப்படுக்திட மனம் சரியான நிலையில் இருக்க வேண்டும். ஏதோ புதிய அதிசயத்தைக் காணப்போகிறோம் என்ற பெருமிதம் கூடவே கூடாது. இதில் பயணம் செய்பவர்கள் இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருத்தல் அவசியமான ஒன்று. பயணம் செய்பவர்களுடன் மகாத்மாக்களாகிய சற்குரு நாதர்களில் யாரேனும் ஒருவர் உடன்வருவார்கள். காலச்சக்கரத்தில் தனித்துப் பிரயாணம் செய்து வருபவர்கள் உண்டு. ஏதோ ஓர்  ஒளிக்கோளம் மிதந்து வேகமாகச் செல்வதைப் போன்று புறக்கண்களுக்கு நன்றாகப் புலப்படும்! அவர்கள் இறைவன் அருள் பெற்று, உலகமக்களுக்கு உதவும் பொருட்டு சேவை மனப்பான்மையுடன் செயல்புரிந்து கொண்டிருப்பார்கள். கால வெள்ளத்தில் இப்போதும் இந்நிகழ்வை சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வரபட் சுவாமி அவர்கள் நிகழ்த்திக் கொண்டுதான் உள்ளார். பவானி செல்வதற்கு முன் காலச்சக்கரத்தில் பயணித்து, விக்கிரமாதித்தியன் பட்டம் பெற்ற, பொற்காலம் கண்ட சந்திர குப்த மௌரியர் காலத்திற்குச் சென்று வரச் சொல்லியிருந்தார். அங்கு சென்று வேதாளமகரிஷி எழுதிய ஏட்டுச் சுவடிகளைக் கற்றுக் கொண்டு திரும்பிவர வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார். இது எப்படி? எதனால் சாத்தியம்?அங்கு எப்போது, யாருடன் செல்வது? என்றெல்லாம் சிந்தனையில் வலம் வந்து கொண்டிருந்தார்

 

மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல!  குடும்ப வருமானம் இன்றி, மாமா, மாமி ஆகியோரிடம் கையேந்தி வாழவேண்டிய நிலை. ஏச்சு பேச்சுக்களைக் கேட்க வேண்டிய கட்டாய சூழலில், அவர் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்வார். “நமக்கு முன்னால் அறிவாளிகளாக வாழ்ந்த பெரியவர்கள் உலக நன்மைக்காக எத்தனையோ துன்ப துயரங்களைத் தாங்கிக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்ந்து செல்லவில்லையா? நானோ இத்தகைய தெய்வீகக் குடும்பத்திற்காக எத்தனையோ துன்பங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இறைவனருள் துன்பத்தில் துயர்படுபவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கக்கூடும். ஈஸ்வரா எனக்கு எதனையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையைத் தந்தருள வேண்டும். இறைவா உமக்கு நன்றி”என்று நாச்சியார் அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்! கண்களில் கண்ணீர் சொரிய குழந்தைகளுடன் பூஜை அறையில் அமர்ந்திருப்பார். குழந்தைகள் தாயாரின் கண்ணீரைப் பிஞ்சுக் கரங்களால் துடைத்து ஆறுதல் கூறுவார்கள். ” அம்மா உன்னை எதுவும் கேட்டுத் தொல்லைகள் தரமாட்டோம். அழாதே அம்மா. வாம்மா ஆண்டவனைக் கும்பிட்டு விட்டு தூங்கப்போகலாம்” என்று கூறி அம்மாவின் மடியில் படுத்து உறங்கிப் போவார்கள். நமது சுவாமி இரவில் உறங்கும் முன்பு குலத்தில் வழிபட்டு வந்த “ஶ்ரீ ராஜ மாதா தேவியை” தியானித்து வந்தார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®, 

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button