உலகில் எதிரொலிக்கும் தனி மனிதனின் செயல்!

297

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(2) உலகில் எதிரொலிக்கும் தனி மனிதனின் செயல்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வீடு திரும்பிய பிறகு தான் ஈஸ்வர குமாரர் கடந்த ஒரு மாதகாலமாக மௌனத்தை அனுஷ்டானம் செய்து கொண்டிருப்பது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் எப்படி கிராமத்தில் இருந்து புறப்பட்டு இந்த அதிகாலை நேரத்தில் மதுரை வந்து சேர்ந்திருப்பார்? மௌனத்தைக் கலைத்துப் பேசக்கூடியவர் அல்லவே! வைராக்கியம் மிகுந்தவராயிற்றே! இப்படியெல்லாம் சிந்தனை ஓடத்துவங்கியது. யோகி ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும், உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனிலும், பரந்து விரிந்த பிரபஞ்ச சக்தியிலும் எதிரொலித்து அருளை வாரி வழங்குகிறது. அதனைப் போலவே தனி மனிதன் செய்திடும், நன்மை, தீமையான செயல்கள் அனைத்தும், ஏனைய மனிதர்களையும் மற்றும் சமுதாயத்தையுமே  தகுந்த பாதிப்புக்கு ஆளாக்கி விடுகின்றது என்பதுதான் உண்மை. “மனிதன் வாசனை களால் ஆளப்படுகின்றான்” என்பதாகக் கூறப்படுவதன் காரணமும் இதில் அடங்கி உள்ளது. அதுதான் மனிதனைச் செயல் படுத்திடத் தூண்டும் உணர்வுகளே அவைகள்! இதற்கு “வாசனைகள்” என்று பெயர். முற்பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ இந்த வாசனைகள் ஏற்பட்டு விடலாம்!  மனித சமுதாயம் மேன்மை அடைந்திட வேண்டியே ஞானியர்கள் நற்பண்புகளை வளர்க்கும் முறைகளை எடுத்துரைத்தார்கள். அதனைக் கடைப் பிடிப்பதில், குழந்தைகள் வளர்ப்பில், கல்வி கற்பதில், இளமை வயதில் நற்பண்புகளை கற்றுக் கொண்டு, கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வருபவர்களே பொறுப்பு மிக்க உணர்வுடன் சமுதாயத்தை உயர்த்தி, வளர்ச்சி நிலை பெறவைக்கின்றார்கள். இப்போது நாம் எடுத்த இந்த மனிதப் பிறவியிலாவது நாம் நல்ல செயல்களைச் செய்வதில் ஈடுபாடு கொண்டால், இறை அருளுடன் கூடிய நன்மைகள் ஏற்பட்டு விடும்.

 

பவானி சென்று திரு SSM சுப்பிரமணியம் ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடி விட்டுக் கிராமம் திரும்பிய நமது நாகராஜன் சுவாமிக்குக் கடுமை மிகுந்த வரவேற்புத்தான் கிடைத்தது. ஒரு வருட காலம் சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வரபட் சுவாமி அவர்கள் பழனி சமாதுவை விட்டு வெளியே வரப்போவதில்லை என்று நமது சுவாமி அவர்களிடம் வாக்களித்தபடி அமர்ந்து விட்டார். இருந்தாலும் நமது சுவாமி அவர்களிடம் தியானத்தின் போது உரையாடிக் கொண்டுதான் இருந்தார். அந்த ஒரே ஆறுதலினால் சுவாமியின் குடும்பத்தில் எத்தகைய துன்பங்களை உருவாக்கினாலும், சுவாமியும், மீனாம்பாள் நாச்சியாரும், குழந்தைகள் கோகுல், மௌலி ஆகிய நால்வரும், சகிப்புத் தன்மையுடன் பொறுமை காத்து வந்தார்கள். இதில் வேறு நமது சுவாமி அவர்கள் மௌனவிரதம் துவங்கி விட்டார். மனஅமைதிக்கு ஏகாந்தநிலை அவசியம் என்பது ஞானியர்கள் வாக்கு. இந்த ஏகாந்த நிலையைத் தனியே சென்று அமர்ந்து மௌனத்தில் இருப்பதில் நமது  சுவாமிக்கு உடன்பாடில்லை. சற்குருநாதர் ஆலோசனைப்படி மௌனநிலையின் ஏகாந்தத்தைக் குடும்ப சூழ்நிலையில், எவ்விதப் பற்றும் இன்றி அனுபவிக்கும் சூழலில் அமர்ந்திருந்தார். மனதின் சிந்தனை சரியான நிலையில் அமைத்துக் கொள்ளும் சூழலுக்குச் சுவாமி  அவர்களின் குடும்பத்தினர்கள் அவரை விடுவதில்லை. மனதினை வருத்தமுறச் செய்வதில் எல்லோரும் ஒரே முனைப்பாக இருந்ததால், தான் அதில் இருந்து வெற்றி பெறவே மௌனம் என்ற ஆயுதத்தை சுவாமி அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று எண்ணுகின்றேன். அவர்தேடிய ஏகாந்தம் அவருக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது. அது அவரைத் தேடி வந்து கொண்டே இருந்தது.

 

எனக்குள்ள மன உறுத்தல் ஒன்று சுவாமி அவர்கள் என்னைத்தேடி மதுரை வந்தது எப்படி என்பதாகத்தான் இருந்தது. ஒருமாத காலத்திற்குப் பிறகு அவரை நான் சந்தித்த போது அதற்குண்டான பதிலை கூறினார். “வந்தது சற்குரு நாதர் ஶ்ரீ ஈஸ்வரபட் சுவாமி” என்று சொல்லிய பிறகு எனது எண்ணத்தின் வலு மேன்மேலும் வளர்ச்சி பெறுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்குள் ஏற்பட்டுள்ள ஆற்றலை, எனது சக்தியை அறிந்து கொண்டு, அதனை வளர்ப்பாக்கும் வழிமுறையும்  புலப்படத் துவங்கியதால், சற்குருநாதருக்கு மானசீகமாக நன்றி கூறினேன். பிராண சக்தி என்பது மனிதனது வாழ்வில் உயிர் உள்ளவரையிலும், பஞ்சேந்திரியங்களை இயக்கி, ரத்தத்தைச் சுத்தம் செய்து, மனிதனை இயக்கிச் செயல்பட வைத்துக் கொண்டே உள்ளது என்றும் சுவாமி கூறினார். தியானம் இருந்து வருபவர்கள் இந்தப் பிராணசக்தி என்னும் காற்றானது ஆகாய கேந்திரத்தில் இருந்து  உடலினில் இறங்கிச் செயலுறுவதை நன்றாக அறிந்து கொள்ள முடியும்.  இறைவனது அறிவின் ஆற்றல் பிரமாண்டமான பிரபஞ்ச சக்திகளைப் படைக்கவே, ஆகாய கேந்திரத்துடன், பிராணசக்தியையும் இணைப்பதாக இறை சக்தியை முற்றும் உணர்ந்த, உள்ளொளி பெற்ற ரிஷிகள் தங்கள் பரிபாஷைகளில் கூறியுள்ளதை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2  இன்னும் தொடர்ந்து வரும்)

 

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன், 

மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button