விக்கிரமாதித்தியன் சமாதுவான இடம்

230

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2

(33) விக்கிரமாதித்தியன் சமாதுவான இடம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பூமியினுள் அமைந்த உஜ்ஜெய்னி காளி கோயிலினுள் நுழைந்த கொலையாயுதம்
மண்ணினால் சமைக்கப்பட்டு உயிருள்ளது போன்று அமர்ந்து இருந்த குப்த மன்னன் விக்கிரமாதித்தியனைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அதனைக் கண்டு ராணியர் ஓலமிட்டு அரற்றி அழுதனர். பிறகு அந்த ஆயுதம் கோயிலை விட்டு வெளியேறிச் சென்றது. பூஜையில் இருந்தவர்கள் சற்று அமைதியாயினர். பிறகு அந்தக் கொலை வாள் பாதாள உஜ்ஜெய்னி மாகாளி கோயிலை விட்டு வெளியேறி வசனகிரி மலைப்பகுதிக்குச் சென்றது. மலையின் அடிவாரத்தில் ஓடும் குணவதி ஆற்றில் மூழ்கி எழுந்து வனபத்ரகாளி வனத்தை அடைந்தது. காளிமாதாவின் முன்பாக யோக நிஷ்டையில் மன்னன் விக்கிரமாதித்தியன், மதியூகி பட்டி இருவரும் உயிர் துறந்த நிலையில் அமர்ந்திருந்த கோலம் கண்டது. யுத்த களத்தில் இருந்த சாலிவாகனன் தனது மாந்திரீக சக்தியினால் நடப்பவை அனைத்தையும் அறிந்து கொண்டும், ஜெபம் செய்து கொண்டும் இருந்தான். விக்கிரமாதித்தியன் தலையைக் கொய்யும் முன்பாக காளியம்மையினைத் தொழுது நின்றது ஆயுதம். அம்மை ஒளிவடிவில் தோன்றிப் பேசினாள், ” ஓ சாலிவாகனன் ஏவிய கொலைவாளே, உம்மை ஏவியவன் நிலை என்ன? நிந்திப்பது, தேவையற்ற கோபம், தீங்கு நினைப்பது, இன்ப துன்ப சூழலில் மனநிலை கெடுவது, கபடமாக நடப்பது, பிறறை வஞ்சிப்பது, மோசம் செய்தல், சூதான பேச்சும், பயனிலாத செயலும், பலன் தராத சிந்தனை, குறிக்கோள் இலாத வாழ்வு, பிறறை அழிப்பது இவைகள் உள்ளவன் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இறைவனுக்குத் துரோகியாவான். துரோகச் செயலை உனது சாலிவாகனன் செய்து விட்டான். இனி அவனது தீயசக்திகள் அனைத்தும் அழிந்து போகும். பிள்ளை பாக்கியம் அற்ற சைமபுரி மன்னனுக்கு வாரிசாகி சகாப்தம் கண்டாலும், விக்கிரமாதித்தியனுடைய நற்குணங்கள் சிலவற்றையாவது அவன் பெற வேண்டும். அப்போது தான் உலகம் மெச்ச வாழ முடியும். இன்றேல் புகழ் குன்றி அவனியில் உள்ளோர் தூற்றுவர் என்றாள்.”

காளியம்மையின் உத்தரவைப் பெற்று விட்ட சாலிவாகனன் கொலை வாள் விக்ரம மன்னனின் சிரசைக் கொய்து கொண்டு போய் உஜ்ஜெய்னி பாதாளக் காளி கோயிலில் பூஜை செய்து கொண்டு இருந்த மகாராணியின் மடியில் போட்டது. பிறகு மண் உருவ விக்கிரமாதித்திய மன்னன் உருவைச் சிதைத்தது. ராணிகள் அலறும் ஓலம் வின்னைத் தொட்டது. மன்னனது சபை நவரத்தினங்கள், மற்றும் விக்கிரமாதித்திய பட்டங்கள் பெற்ற அரச குலத்தினர் வந்து உஜ்ஜெய்னி சேர்ந்தனர். அடுத்த ராஜபட்டம் சூடிக்கொள்ள வேண்டிய குமார குப்த விக்கிரமனை தலைநகர் பாடலிபுத்திரத்தில் இருக்க வைத்தனர். அக்கால வழக்கப்படி ஜோகர் என்னும் மிகப்பெரிய அக்கினி குண்டத்தை வளர்த்தி எரியும் நெருப்பில் ராணிகள் மற்றும் இஷ்டப்பட்ட சேடியர்கள் வீழ்ந்து உயிர் துறந்தனர். நாகர் குலத்தில் இருந்து வந்த பட்டத்து ராணி விக்கிரமாதித்தியன் சிரசைக் கையில் ஏந்தி மாகாளியம்மனைத் துதித்துவிட்டு அக்கினி குண்டத்தினுள் மௌனமாக இறங்கி உயிர் நீத்தாள்” என்று கூறிய வேதாள ரிஷி மௌனமாக இருந்தார். எதிர் காலத்தில் நடை பெறப் போகும் நிகழ்ச்சிகளைக் கேட்டு கண்களில் நீர் சொரிய ரிஷியின் கரங்களைப் பற்றிக் கொண்ட வேதியர் வேணுநாதர் அவருக்கு நன்றி பாராட்டினார். பிறகு பாகியான் பற்றியும் கூறுங்கள் எனக் கேட்டுக் கொள்ள, அதற்கு மிகச் சுருக்கமாகப் பதில் கொடுத்தார் வேதாள ரிஷி. அவன் எனக்கு தகுதி வாய்ந்த சீடனாக மாறி சித்தன் நிலை எய்துவான். அநேக அமானுஷ்ய விஷயங்களை, மூலிகை மர்மங்களை அறிந்து கொண்டு தனது தேசம் செல்வான்” என்றார்.

விக்கிரமாதித்தியன் தலையைக் கையில் பிடித்தபடி பட்டத்து ராணியும், மற்ற ஏனைய ராணிகளும் ஜோகர் செய்வதற்கு முன்பு விக்கிரமாதித்தியன் உடல் கொண்டு வரப்பட்டு அக்கினி குண்டத்தினுள் வைத்து எரியூட்டப்பட்டது. கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையினைக் கற்றறிந்த மதியூகி பட்டியோ மாற்று உடல்கள் கிடைக்கும் போது அதனுள் வாழ்ந்து தமிழகத்தில் பேரூர் பட்டீஸ்வரம் என்னும் இடத்தில் ஜீவசமாதுவில் உலகம் உள்ளவரை தவத்தில் இருக்கப் போகின்றார். மன்னன் விக்கிரமாதித்தியன் மீண்டும் பிறப்புக்கு வந்து ராஜவம்சத்தின் மற்றோர் கிளையில் பிறந்து, சிறு வயது முதற்கொண்டே துறவு வாழ்க்கை வாழ்ந்து சரவணபெலகுலா எண்ணும் இடத்தில் குரு உபதேசம் பெற்று உடலை ஒடுக்கி தவம் புரிந்து வருவார். ஜைனமதத்தின் முக்கிய குருநாதராக, ஓர் நல்ல வழிகாட்டியாக விளங்கி வரப்போகின்றார். அடியேனும் இப்போது மன்னன் விக்கிரமாதித்தியனுக்கு உடன் இருந்து அநேக உதவிகள் புரிய உத்தேசித்துள்ளோம் ” என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button