விக்கிரமாதித்தியன் சொர்க்கம் ஏகியது

284

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(32) விக்கிரமாதித்தியன் சொர்க்கம் ஏகியது
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கால வெள்ளத்தால் மறைக்கப்பட்ட அநேக உண்மைகளை ஶ்ரீ வல்லபருக்கும், வேதியர் வேணுநாதருக்கும் வேதாள ரிஷி எதிர்காலத்தில் நடைபெறப் போகும் ரகசிய நிகழ்வுகளைக் கூறிக் கொண்டிருந்தார். “சைமபுரி (மைசூர்) நாட்டின் விஸ்வநாத மன்னன் குப்த மாமன்னனுக்கு ஆண்டு தோறும் அடங்கிய சிற்றரசாகக் கப்பம் செலுத்தி வந்தான். சாலிவாகனன் யுத்த மந்திரி பதவி ஏற்றதும் கப்பம் கட்டுவதை நிறுத்தி விட்டான். அதனால் குப்தப் பேரரசுக்கும், சைமபுரி(மைசூர்) தேசத்திற்கும் யுத்தம் மூண்டது. கோர யுத்தம் நடை பெற்றது. யுத்த மந்திரி சாலிவாகனன் மண்ணால் செய்த ஆயிரக்கணக்கான பூத பைசாச வன விலங்குகளுக்குத் தனது சக்தியைக் கொண்டு உயிரூட்டினான். உயிர் பெற்ற அசுர விலங்குகள் விக்கிரமாதித்தியன் படைகளை துவம்சம் செய்தன. மகாராஜன் விக்கிரமாதித்தியனே நேரில் யுத்தம் புரிய வேண்டிய சூழ்நிலை உருவாகியது. வேதாள ரிஷி விக்கிரமாதித்தியன் போன்ற பிரதியைக் களிமண்ணினால் செய்து உயிர் கொடுத்தார். அதனை உஜ்ஜெய்னியில் பூமிக்குக் கீழே உள்ள காளி கோயிலில் தேவியின் முன்னே அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும் படி ஏற்பாடு செய்தார். அந்தப்புறத்தின் ராணிகளும் மன்னனது வெற்றிக்கு அங்கேயே காளி பூஜை செய்தனர். இப்படி நடந்து கொண்டிருக்கையில் அங்கே யுத்த களத்தில் விக்கிரமாதித்தியன் போன்றே அநேக மாய உருவங்களை மண்ணால் சிருஷ்டித்து போர்களத்தில் யுத்த மந்திரி சாலிவாகனனை எதிர்த்துப் போரிட வைத்தார். தான் கடைப்பிடித்த வழியில் எதிரி அமானுஷ்ய தாக்குதலில் ஈடுபட்டது கண்டு அதிர்ச்சியில் அவன் உறைந்து போனான். இவ்வளவு ஆற்றல் சக்தி விக்கிரம ராஜனுக்கு எப்படி ஏற்பட்டது என்ற தயக்கத்தோடு மனம் கலங்கினான்.”

“விக்கிரமாதித்திய மன்னனுக்கு வானுலக அமராபதி பட்டிணத்து மன்னன் தேவர்கள் ராஜன் பேசும் பதுமைகள் உடைய அரிய சிம்மாசனத்தைப் பரிசாகத் தந்திருந்தான். அதனை யுத்த காலத்தில் மதியூகி பட்டியும், வேதாள ரிஷியும் வேதியர் வேணுநாதர் நந்தவனத் தோட்டத்தில் யாரும் அறியா வண்ணம் பூமிக்குள் பாதுகாப்பாக மறைத்து வைத்தனர். பிறகு மதியூகி பட்டியும், விக்கிரமாதித்திய ராஜனும் யோக நிஷ்டையில் வனபத்திர மாகாளியம்மன் சந்நிதியில் அமர்ந்து கொண்டனர். இந்திரலோக வானுலக விமான ஊர்தி வந்திறங்கி அவர்களின் உயிராத்ம சக்திகளைக் காளியம்மையின் ஆசியுடன் விண்னுலகு கொண்டு சென்றது. யுத்த களத்தில் சாலிவாகனனுக்கு தம்பன வசியனின் மாந்திரீக குரு உதவிக்கு வந்தார். வேதாள ரிஷி உண்டாக்கிய மாயப்படை வீரர்கள் மற்றும் அமானுஷ்ய உருவங்களை மறைந்து போகச் செய்தார். உண்மையான போர்க்கள வீரர்கள் மீண்டும் யுத்தம் செய்து மாண்டு வீழ்ந்து கொண்டிருந்தனர். யுத்த களத்தில் தீரன் விக்கிரமாதித்தியனைக் காணாத யுத்த மந்திரி சாலிவாகனன் தான் ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் மண்ணினால் ஓர் கொடூர ஆயுதத்தை உருவாக்கி, அதற்கு சக்தி தந்து விக்கிரமாதித்தியன் சிரசை அறுத்து அந்தப்புற ராணிகள் மடியினில் போட்டுவர உத்தரவு பிறப்பித்தான். அது வெகுவேகம் கொண்டு உஜ்ஜெய்னி மாகாளிப் பட்டிணம் வந்தது.”

விக்கிரமாதித்தியன் எதிலும் ஆராய்ந்து பார்த்து முடிவினுக்கு வரும் விவேகத்தை, இறைவன் சிந்தனையுடன் பயபக்தியுடன் உபயோகித்து வந்தவன். அதுவே அவனை காக்கின்ற பெரும் துணையாக இருந்தது. இயற்கை தருமத்திற்கும்,அவனுடைய சரீரத்திற்கும் மாறுபட்ட எண்ணங்கள் மனதினில் மறுபடியும் தோன்றாதவாறு, அதனைத் தள்ளிக் காப்பாற்றியதே இந்த விவேகமே! ஒவ்வொரு செயலிலும் விஷயங்களை நிதானித்து ஆராய்ந்து வந்தவன். அரசில் ஜனங்களுடன் மிகவும் அன்பாக நெருங்கிப் பழகு வந்தவன். நல்ல மனதுடன் அறிவு சார்ந்த குருநாதர்களை ஆதரித்து, அவர்களின் வழிகாட்டுதல்கள் படியே நன்மையை நலன் கருதி அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தவன். இறைசக்தியில் மாறாத பக்தியுள்ளவனாக வாழ்ந்தான். உலகத்தில் அவனுக்கு நன்மையையும், சுகத்தையும், சந்தோஷத்தையும் தந்தது எதுவெனில், அவனது நீதி, நேர்மை, சத்திய தர்மம், தெளிந்த புத்தி, தைரியம், சாந்த சித்தம் இவைகளே. விக்கிரமாதித்தியன் தனது வாழ்வில் தான் பெற்ற அனைத்தையும் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டவன். அவன் செய்த எல்லாக் காரியங்களிலும் முக்கியம் வாய்ந்தது எதுவெனில் இறைவனை விடாது சிந்தித்து நன்றியுடன் நடந்து வந்தான். அதனால் வானவ தேவர்களுடன் வாழும் பாக்கியத்தைப் பெற்றுய்தது நல்லோர் ஆசியும் இறையருளுமாகும். இனி சாலிவாகனன் விக்கிரமாதித்திய மன்னனுக்கு அனுப்பிய கொலை ஆயுதம் செய்த செயலைப் பார்ப்போம்.”

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button