வல்லப ரிஷியும் ஈஸ்வர குமரரும்!

317

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 

 

(5) வல்லப ரிஷியும் ஈஸ்வர குமரரும்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் சுவாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவை அள்ளித்தந்தவர். மற்றவர்களிடம் அந்த எதார்த்தத்தை காணமுடியாமற் போனதற்குக் காரணம், அவர்களிடம் இயல்பாகக் குடிகொண்டுள்ள, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற குணமும், செயலும் என்பது பாட்டியின் கருத்து. நமது சுவாமி அப்போது மௌனத்தில் அமர்ந்து தியானத்தில் மனம் ஒரு நிலைப்பட்டு இருந்தபோது பாட்டி அவர்கள், “ஒரு துறவி உன்னைக் காண வந்துள்ளார். வாய்பேசாதவராக இருக்கின்றார். கடிதம் ஒன்றைத் தந்தார். அதில் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்குச் செல்லும் ரயி்லில் புறப்பட்டு வரவேண்டும் என்பது குருநாதரின் ஆணை! உன்னைக் காணவரும் தபஸ்வி எனது ஆணையை நிறைவேற்ற வல்லவர். என்னிடம் கேட்டு அறிவதைப் போன்றே அவரிடமும் அறிந்து கொள்ளலாம். அவரை நன்கு பயன்படுத்திக் கொள். மௌனத்தில் ஈஸ்வரர் தபஸில் இருக்கும் அவர் உன்னோடு மட்டுமே பேசுவார். நீ பவானி செல்லும் முன் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் அநேகம் உள்ளன. தாமதியாது அவருடன் புறப்பட வேண்டும்  என்பது குருநாதரின் உத்திரவு ” என்று பொன்னம்மாள் நாச்சியார் கூறியபடி இருக்கும் போதே துறவி அவர்கள் வீட்டினுள் வந்து விட்டார். வந்தவர் நமது சுவாமியின் முன்னால் நின்று கொண்டு, தியானத்தில் இருக்கும் அவரையே தனது கூர்மையான பார்வையால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பாட்டி அவரை நாற்காலியில் அமரும்படி கேட்டுக்  கொள்ளவே அவரும் அமர்ந்து கொண்டார். நமது சுவாமி கண்விழித்து அந்த முதிய துறவியை அன்புடன் பார்த்தார். சதுரவடிவ முகத்தில் ஜடா மகுடமும், மீசையும், குறுஞ் சிரிப்பும் தவழ, எதனைப் பற்றியும் கவலைப்படாதவராக, கம்பீரமாகத் தூய வெண்மை நிற உடையணிந்து தென்பட்டார்.

 

நமது சுவாமி அவரிடம், ” வணக்கம், வருக வேதாளமகரிஷியே” என்றபடி மௌனம் கலைந்திட எழுந்து கரங்கூப்பினார். அவரும் புருவம் உயர்த்தி ஆச்சரியப் பார்வை பார்த்தார். அவருக்கு மனதில் திருப்தி ஏற்பட்டு விட்டது. “இவன் குருநாதருக்கு ஏற்ற சீடன் தான். சாதனைகளால் நல்ல அனுபவத்தைப் பெற்றிருக்கிறான். இவனது நல்ல செயல்களினால் தேவையான நற்குணங்கள் இயல்பாகவே வந்து அமைந்திருக்கின்றன. இவனுக்கு உண்மையிலேயே தேவைக்கு அதிகமான சோதனைகள் ஏற்பட்டு, அதனால் இவன் சேவை மனப்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும். வாழ்க்கை இவனுக்கு அறிவின் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தெய்வீகத்தை வாரி வழங்கியுள்ளதை நன்கு உணர முடிகின்றது. நன்மைக்கும், தீமைக்கும் இவன் மனதில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வென்றதனால், கடமை விதியை, தான் உலகில் ஆற்ற வேண்டிய உண்மையின் நிகழ்வுகளை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் அஞ்சாமை பற்றிய உருவகம் இவனுள் தோன்றி வெளிப்படச் செய்துள்ளது. அதனால்தான் எமது குருநாதன் பெயரை முகமன் கூறி வரவேற்றிருக்கின்றான். எனவே தகுதியுள்ள நபர் என சற்குருநாதர் இவனைத் தேர்வு செய்திருக்க வேண்டும். கர்மா என்ற இறை அமைதிக்கும், காரியம் என்ற புறநிகழ்வினுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்ட புனித ஆத்மனைக் கண்டு கொண்டதற்குப் பெருமகிழ்வை எய்துகிறேன்” எனத்துறவி எண்ணமிட்டார். பாட்டி அறையை விட்டு வெளியே சென்ற பிறகு துறவி நமது சுவாமியிடம் பேச ஆரம்பித்தார்.

 

“வணக்கம் ஈஸ்வரகுமரா! வேதாள மகரிஷி என்று அழைத்தீர்கள் அல்லவா? அவர் எனது குரு ஆவார். எனது பெயர் வல்லபர். உனக்கு எனது குருநாதரின் அருளாசி இருப்பதனால் உன்னை நான் அழைத்துப் போக வந்தேன். எனது ஒரு வினாவிற்கு நீ விடை கூற வேண்டும்! அறிவாளியான ஒரு மனிதன் தவறுகள் செய்யும் போது அவனைத் தடுத்து நிறுத்த யாரால் முடியக் கூடும்? யோசியாமல் உடனே பதில் கூறு” என்று துறவி கேட்டுக் கொண்டார். அதற்கு சுவாமி, ” வணக்கம் வல்லபரே! அறிவு பெற்ற அறிஞன் ஒருவனுக்கு வேண்டுவது,  சலனம் இல்லாத அமைதி அவன் உள்ளத்தில் என்றென்றும் குடி கொண்டு விளங்க வேண்டும். அறிஞனிடம் உள்ளவற்றை அவனைக் கேட்காமல் பிறர் அபகரிக்கும் செயலினால் மட்டுமே அவன் தவறிழைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அறிஞன் தவறு செய்வது  இறை சிந்தனை தரும் அமைதியை இழந்த போதுதான். அதனால் சம்மந்தப்பட்டவர்களின் அநேக தலைமுறைகள் பாதிப்புக்கு ஆளாகும். இறைவனது பார்வை ஒன்றே துன்பம், துயரங்களை நீக்கி அறிஞனின் அறிவைப் பாதுகாக்கும் ” என்றார். துறவி வல்லபர் மீண்டும் ஓர் விளக்கம் தரவேண்டும் எனக் கேட்டுவிட்டு, “எது அபாயகரமானது? என்றார். 

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் 

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button