வேதங்கள் உரைக்கும் சற்குரு நாதர்.

329

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் -2

(1) வேதங்கள் உரைக்கும் சற்குரு நாதர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சகல ஜீவன்களின் சரீரங்களில் ஞான சொரூபமாகவும், ஹிருதயக் கமலத்தில் ஆத்மாவாகவும் வியாபித்தும், மாயாப் பிரபஞ்சத்தின் உள்ளும், புறமும் நிறைவாக வீற்றிருந்து ஆட்சி புரியும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, அருள் பெற்றவர்களே சற்குரு நாதர்கள். மக்களை என்றென்றும் இறைவழியில் வழி நடத்திட இவர்களின் வாயிலாகவே நல்வழியின் உபதேசங்களை இறையருள் வழங்கிக் கொண்டே உள்ளது. அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவென்னும் பரஞ்ஜோதியை உள்ளத்தில் ஏற்றி வைத்து, இறைவனருளை வாரி வழங்கும் வள்ளல் பெருமக்களே சற்குரு நாதர்கள்! ஶ்ரீ ஈஸ்வரபட் சற்குரு நாதர் அவர்களின் சித்தம் என்றென்றும்  பராபரம் என்று அறியப்படும் இறைவனுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒன்றியிருந்தது. பிரபஞ்ச இறைப்பற்றில் என்றும் உள்ள உறுதியுடன் கூடி இறைவனுடன் கலந்து மகிழ்ந்து, என்றென்றும் மரணமில்லாப் பெரு வாழ்வில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஶ்ரீ ஈஸ்வரபட் சற்குருநாதர் என்று நமது நாகராஜன் சுவாமி அடிக்கடி  எங்களிடம் கூறிக் கொண்டு இருந்தார். அத்துடன் இன்னொன்றையும் அவர் அடிக்கடி கூறிவந்தார். “எங்களுக்குக் கிடைத்தது போல் சற்குரு நாதர் வேறு யாருக்குக் கிடைப்பார்? ” என்கின்ற வார்த்தைகளே அவை! இதனை ஏன் கூறினார் என்று முதலில் புரிந்து கொள்ள இயலவில்லை. அது சாதாரண வார்த்தைகளே அல்ல என்பதைப் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்  எனக்கு வாய்த்தது! மன உளைச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி இருந்தேன்.  அக்கால கட்டத்தில் நமது நாகராஜன் சுவாமியை எண்ணியபடி  இருப்பேன். அதிகாலை நேரத்தில் அவரது குரல் கேட்கும். வீட்டின் கதவைத் திறந்து பார்த்தால் ஈஸ்வர குமாரர் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருப்பார். 

 

எனக்கு ஏதாவது மனபிரம்மையோ என்று எண்ணி கண்களைத் தேய்த்து விட்டுக் கொள்வேன். நமது சுவாமி என்னை வெளியில் வரச் சொல்வார். நானும் அவர் பின்னால் செல்வேன். ஏதாவது ஒரு இடத்தில் அல்லது கோவில் முன்பு அமர்ந்து கொள்வோம். நமது சுவாமியே பேசத் துவங்குவார். ” மேகநாதன் உங்களுக்குள் உள்ள சக்தியை நீங்கள் இன்னமும் உணராமல் இருந்து வருகின்றீர்கள். உணர்ந்து கொண்டால் உங்களது மனநிம்மதியைப் பாழ்படுத்துகின்ற, எந்தவொரு விஷயத்தையோ அல்லது பொருளையோ, நீங்கள் விலக்கிக் கொள்வது எத்தனை எளிதானது என்பது உங்களுக்கு உண்மையில் புரிய வந்திருக்கும். உங்களது புத்திசாலித் தனத்தை நீங்கள் உபயோகிக்கா விட்டாலும் பரவாயில்லை! அதனைப்பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை! ஆனால் உங்களிடம் எத்தனையோ நற்குணங்கள் நிரம்பியுள்ளன. அவைகளை உபயோகப்  படுத்திப் பாருங்கள். அதனால் உண்மை மிகுந்த வாழ்வில் வாழம் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்து விடும். நடை, உடை, பாவனைகளில் பெருந்தன்மையும் அதனால் வெளிவட்டாரங்களில் நற்பெயரும் ஏற்படும். எத்தகைய மனவருக்தம், உடல் வருத்தம் ஏற்பட்டாலும் அதனைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை உண்டாகி விடும். புத்தி கூர்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உங்களால் முடியும் படியான நல்ல தீர்வுகள், நல்ல குணங்களினால் எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கும் அல்லவா!” என்றார். நான் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

 

மேலும் நாகராஜன் சுவாமி கூறினார், “மேகநாதன், உங்களுக்கு என்ன குறை? வாழ்வில் உங்களுக்கு முடியாத காரியம் என்று ஏதாவது இருக்கின்றதா? இன்ப வாழ்வின் மனைவி, மக்களை வெறுத்து, இயற்கையுடன் கூடிய சந்தோஷத்தையும் உடன் விடுத்து, இப்படி தாடி, மீசையுடன் வெறுப்புணர்வுடன் உங்களால் இருக்க முடிகின்ற போது, இறைவன் தந்த உண்மையான வாழ்வில் வாழ முடியாதா? நற்குணங்களை நன்கு பயன் படுத்துவதில் யாராவது சிக்கனம் பார்க்கச் சொன்னார்களா?  உங்களையே நம்பி வாழும் குடும்பத்தினருடன் சண்டை, சச்சரவு செய்யும்படிக்கு, வெளியில் இருந்து யாராவது தூண்டுகின்றனரா? இல்லை, வேறு ஏதாவது  உடலில்  குறைபாடு ஏற்பட்டுள்ளதா? உங்களிடம் இல்லாத அறிவை உபயோகப்படுத்தும்படி  யாராவது சொன்னார்களா?  தியானப் பயிற்சியைக் கற்றுக் கொண்ட நீங்கள்  அதனைப் பயன்படுத்தி, நல்ல நுட்பத்தைப் பெற்று, நற்குணங்களின் வாயிலாக அடையக் கூடிய நன்மைகளை அடைவதை ஏன் விட்டு விட்டீர்கள்? உங்களுக்குள் உள்ள ஆற்றலை உணர்ந்து கொள்ளுங்கள் ” என்றபடி  எனது முகத்தையே உற்றுப்பார்த்தபடியே இருக்க, சுவாமியின் பார்வை தீக்ஷ்ண்யத்தை என்னால் தாளமுடியாமல் கண்களை மூடிக் கொண்டேன். எனக்குள் மனஅமைதி ஏற்படுவதையும், இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாவதையும் உணர முடிந்தது. சுவாமி அவர்கள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டார். வீடு திரும்பியதும் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

 

(மனிதனே புனிதன் வரலாறு -2 இன்னும் தொடர்ந்து வரும்}

 

வணக்கம், நன்றி!

ஶ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன், மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button