ஆதியில் சிவராத்திரி வழிபாடு

418

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2

 

(8) ஆதியில் சிவராத்திரி வழிபாடு

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஶ்ரீ வல்லபருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டுப் பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில் நமது நாகராஜன் சுவாமி மெதுவாகச் சென்று கொண்டிருந்தார். அன்று மஹா சிவராத்திரி இரவு. பயணக் களைப்பு தோன்றாதிருக்குமாறு துறவி முற்காலத்தில் சிவராத்திரி வழிபாடு மகிமை பற்றி எளிய முறையில், அன்புடன் கூறிக்கொண்டு வந்தார். “அனுதினமும் சிவாலயம் சென்று மகிழ்வுடன் வழிபட்டு வருகின்ற அன்பர்கள் சிவராத்திரி அன்று,  சகலத்தையும் படைக்கின்ற சர்வேஸ்வரா! கருணையே வடிவான ஈஸ்வரா! அன்பு குணமுடைய இறைவா! அழகே வடிவெடுத்த ஈஸ்வரா! தானும் வளர்ந்து பிறவற்றையும் வளர்ச்சி நிலையடையச் செய்கின்ற ஈஸ்வரா! சகல சௌபாக்கியங்கள் நிறைந்த ஈஸ்வரா!  நான் உமக்குரிய பக்தன்! என்னுடைய உள்ளத்தில் நீ வீற்றிருக்கின்றாய்! எனது உடல், பெருள், ஆவி அனைத்தும் உம்முடையதே! எடுத்தபிறவி கடைத்தேற வேண்டும் ஈஸ்வரா! சிவராத்திரி விரதம் தடையின்றிக் கடைப்பிடிக்க அருள வேண்டும் ஈஸ்வரா !  தீமை குணங்கள், தேவையற்ற பழக்க வழக்கங்கள் நெருங்கிடாமல் காக்க வேண்டும் ஈஸ்வரா! தீய எண்ண குணங்கள் கொண்டோர் எங்களை விட்டு விலகிச் சென்றிட அருள்வீர் ஈஸ்வரா! என்று சங்கல்பம் செய்து கொள்வது அக்காலத்திய வழக்கமாகும்” என்று கூறிவிட்டு நமது சுவாமியின் முகத்தை உற்று நோக்கினார். 

 

நாகராஜன் சுவாமி அவருக்கு நமஸ்காரம் கூறிவிட்டு அவர் கூறுவதைக் கவனமுடன் கேட்கத் துவங்கினார். ” நான்கு ஜாம காலத்திலும், பால், தயிர், நெய், கருப்பஞ் சர்க்கரை, இளநீர் மற்றும் தேவையான அபிஷேகப் பொருட்களும், அரிசி, அவல், கோதுமை, உளுந்து, பயறு வகைகள் மற்றும் ஏழு விதமான தானியக் கலவைகள் கொண்ட அக்ஷ்தைகள், புதிய வஸ்த்திரங்கள், அறுகு, ஆத்தி, வில்வம், சதபத்ரம், நறுமணமலர்களுடன் தாமரை புஷ்பங்கள், சுத்தன்னம், பரமான்னம், நெய் சேர்ந்த பலகார வகைகள், சகலவித கனி வர்க்கங்கள், பாயச வர்க்கங்கள், மற்றும் தாம்பூல தக்ஷிணைகளுடன்  அக்காலம் போன்று இக்காலத்திலும் மிகச் சிறப்புடன் பூஜை, புனஸ்காரங்கள் நடைபெற்று வருகின்றது வரவேற்கத் தக்கதுதான். ஆனால்…….” என்று கூறிவிட்டு மௌனம் கொண்டார். நமது சுவாமியோ, “மகாத்ம சக்தி பெற்ற பரமஞானியே, தங்களது மௌனத்திற்குப் பொருள் விளக்கம் சொல்லுங்கள் ஐயா ” என்று கேட்டுக் கொண்டார். புன்னகை புரிந்த ஶ்ரீ வல்லபர் சற்று நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, ” ஈஸ்வரகுமரனே அக்காலத்தில் சிவராத்திரியை மிகுந்த விஷேசமாகக் கொண்டாடிய பக்தர்களுக்கு சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கப் பெற்றனர். ஆயுளாரோக்கியத்தை இறைவன் அள்ளி வழங்கினார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது!” என்றார். 

 

“அக்காலத்தில் சிவராத்திரி அன்று நான்கு ஜாமபூஜை காலங்களில் கல்வியில் சிறந்த அறிஞர் பெருமக்கள், வேத பண்டிதர்கள், கலைஞர் பெருமக்கள், புலவர்கள் இவர்களுக்குத் தக்க மரியாதைகளும் பரிசில்களும் வாரிவழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வறியவர்கள் மற்றும் சிவாலயத்தை நாடிவரும் அனைத்து பக்தர்களுக்கும் நான்கு ஜாமங்களும் வழிபாடுகள் செய்த பிறகு  போஜனங்கள் நிறைவாக வழங்கப்பட்டது. அன்னதானச் சிறப்புக்கள் மிக்க சிவராத்திரி பற்றி ஈஸ்வரனே ஶ்ரீமந் நாராயணனுக்கு அழகாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்” என்று முடித்தார் ஶ்ரீ வல்லப ரிஷி. நன்றி கூறிய நமது சுவாமியினிடம்  மகான் மேலும் , “ஶ்ரீ ஈஸ்வர குமரனே கடவுளால் உருவாக்கி, உலக நடைமுறைப் படுத்தப்பட்ட சில செயல்கள் உண்டு. அவைகளை உலகில் யாராலும் தடுக்க முடியாது. ஏன் பகவான் இடும் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் கூடத் தடுக்க மாட்டார்கள். அதனைப் பற்றி நீ அறிந்திருக்கின்றாயா? ” என்று சிரித்தபடியே துறவி மகான் வினவினார்.  நமது சுவாமி, ” ஆம் பெருமானே அதனைப் பற்றி சற்குருநாதர் ஶ்ரீ ஈஸ்வரர் எமக்கு அருளியுள்ளார் என்றார். மேலும் சுவாமி, “அதனைப்பற்றிக் கூறும் முன் உங்களைப் பற்றிய ஒரு உண்மையை அறிய விரும்புகிறேன்” என்றார். துறவி, ” நல்லது அப்படியே ஆகட்டும், கேள்” என்றார். உயரமான ஜடாமகுடத்துடன் நடமாடும் உங்களை யாருமே கவனிக்காமல் போவதன் காரணத்தை அறிய விரும்புகிறேன் மகானே ” என்றார். அதற்கு, ” அப்படியா ! நான் உனது கண்களுக்கு மட்டுமே உண்மைத் தோற்றத்தில் காணப்படுகிறேன். மற்றவர்களுக்கு யாம் சாதாரண மனிதன் போல் தென்படுவதால் அப்படியும் நீ கூறுவது போல இருக்கலாம் ! யாரறிவர் இறைவன் திருவருளை? ” என்று கூறிவிட்டு உணர்ச்சியற்ற முகத்துடன் அமைதியானார். அந்த வித்தை தான் என்ன? என்று சுவாமி எண்ணினார்.

 

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M. மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button