இறைவனின் கட்டளையை யாராலும் தடுக்க இயலாது!

334

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2

 

(9) இறைவனின் கட்டளையை யாராலும் தடுக்க இயலாது!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பலநாயக்கன்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சியை  அடைய ஐந்துகல் தூரம் இருக்கும். அதனை நோக்கிப் பயணம்  செய்து கொண்டிருந்த இருவரும் சற்று இளைப்பாற , ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் இறைவனை எண்ணி ஜெபம் செய்து கொண்டிருந்தனர். ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த மகான் வல்லபர், “ஶ்ரீ ஈஸ்வரகுமரனே, உலகில் நடைபெறும் சில செயல்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறப்படுபவை எவைகள்? ” என்றார். நமது சுவாமி, “மகாத்மனே, நாம் புரிந்து கொள்ளவே முடியாத சில செயல்கள் அனைத்தும் இறைவனது அருளால் நடை பெற்றுக் கொண்டே உள்ளன. இதனைத் தடுப்பதும், தடுக்காததும் அனைத்தும் மனிதனது எண்ணத்தைப் பொறுத்தது. ஆனால் இந்தச் செயல்களைப் பற்றி மனிதர்களின் கருத்து ஒன்று உண்டு. அது ‘ஆண்டவனே அறிவான் ‘ என்ற வார்க்தை தான். இன்று இயந்திர சாதனங்களின் இயக்க வேகத்தை அறியப்பயன் படுத்தப்படும் வார்த்தை ‘குதிரை வேகம்’. குதிரையின் வேகத்திற்கு ஈடாக, இதற்கு மாற்றாக வேறெதனையும், அநேகமாகக் கூறப்படுவதில்லை. இதனைத் தடுக்கவோ, மாற்றவோ இதுவரையிலும் யாராலும் இயலவில்லை. அதனைப் போன்றே மழைக் காலங்களில் நீருண்டு, கருத்துத் திரண்ட மேகங்களின் மோதலினால் ஏற்படும் உராய்வில் உண்டாகும், நேர்மறை, எதிர்மறை அமில சக்திகள்,   ‘இடி முழக்கம் மற்றும் ஒளி வீசும் மின்னல்களை உண்டுபண்ணுகின்றன. அந்தக் காலகட்டங்களில் தான் புதிய புதிய உயிரணுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த இயற்கையின் நியதியான இடி, மின்னல் சக்தி ஆற்றலையும், அவைகள் வெளிப்படுத்தும் செயல் நிகழ்வைத் தடுக்க யாராலும் சாத்தியப்படவில்லை.”

 

“மேகங்கள் மழையாகப் பொழிகின்ற போது, ‘இடிமின்னல்’ ஏற்படுத்தும் புதிய உயிரணுக்கள் மழைநீருடன் கலந்து  பூமிக்கு வருகின்றன. இவைகளை இயற்கையின் நியதியோடு கலந்து வாழும் தெய்வங்கள் கூடத் தடுக்க மாட்டார்கள். ஏனெில் இயற்கையானது இறையருளின் கருணையின்படியே ஒன்றுடன் ஒன்று சார்ந்தே உலகில் இயங்கிக் கொண்டு உள்ளன. இதுதான் இயற்கையின் விந்தை! இதில் மற்றொன்று ‘மழையின்மை.’ மழை பெய்யாமல் இயற்கையில் ஏற்படும் கடும்வறட்சி நிலைதான். பயிர்பச்சைகள் வாடும் நிலைக்கு நீர் வறண்டு போவதும், காற்றில் ஈரப்பதம் அற்று வெய்யிலின் வெப்பத்தால், உடல் உபாதைகளுள் குறிப்பாக நரம்பிழுப்பு வலிப்பு நோயை ஏற்படுத்துகிறது. இவ்வளவு கடுமை மிகுந்த சூழலைச் சமாளிக்கும் யுக்திகள் ஓரளவு பலனைத் தந்திருந்தாலும், இறைவனது அருள் ஒன்றைத் தவிர வேறு யாராலும் இதனை மாற்றி அமைக்க இயலாது. அதனைப் போன்றே இடைவிடாமல் பெய்து கொண்டே இருக்கும் பெருமழையைத் தடுக்க உலகினர் கடைப்பிடிக்கச் செய்து வந்த யுக்திகளும் கூடத் தக்க பலனைத் தந்துவிட வில்லை என்பது கண்கூடு. வெப்பசலனம் என்றுதான் விஞ்ஞானம் விடை கூறுகின்றது. பெருமழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியதால் ஏற்பட்ட துன்பங்களுக்கு இறையருள் நாட்டம் உடையவர்களால், சேவை மனப்பான்மை கொண்டு உதவிக்கரம் நீட்டப்பட்டது ” என்றார் நமது சுவாமி.

 

அப்போது அதிகாலை நேரம். பொள்ளாச்சி ரயில்நிலையத்தை இருவரும் அடைந்திருந்தனர். பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் சிறிதளவு நிதியுதவி தந்து இருந்ததால் பயணச்சீட்டு இரண்டு பழனி வரை செல்லப் பெற்றுக் கொண்டனர். ரயில்வண்டி வரச்சற்று தாமதம் ஆனதால் ஓடுபாதையின் கிழகோடியில்  போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் இருவரும் அமர்ந்து கொண்டனர். அப்போது தாட்டியான இருநபர்கள் வந்து இருவரின் எதிரே தரையில் அமர்ந்து கொண்டனர். காடு போல் வளர்ந்த முடி, மதுவுண்ட போதையில் குளறியபடியே பேசத்துவங்கினர். வல்லபர் மகான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை ஏதோ கஞ்சாத்தூள் விற்கும் ஆசாமி என நினைத்து, ” டேய் பொட்டலம் இருக்கா?” எனக் கேட்டபடி ஒரு நாலணா நாணயத்தை அவர் மடிமீது விட்டெறிந்தனர். நமது சுவாமி அவர்களிடம் வேடிக்கையாகப் பேசஎண்ணி, “இருந்தாலும் அது உங்களுக்குக் கிடைக்காது” எனக் கூறியதும் அவர்கள் மிகுந்த கோபம் உற்றனர். உடனே எழுந்து, “டேய் என்ன சொன்னே?” என்று ஆவேசமாகக் கத்திக் கொண்டே ஒருவன், நமது சுவாமியின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப் பிடித்து முறுக்கேற்றிப் பிடித்து இழுத்தான். மற்றொருவன் இடது கரத்தைப் பற்றித் திருப்பினான். வலியிலும் சுவாமி குபீரெனச் சிரித்து விடவே, வல்லபர் மகான் தனது இரும்பை ஒத்த இருகரங்களாலும் அவர்களது  தோளைப் பலமாகப் பற்றிக் கொள்ளவே வலியால் துடிதுடித்து சுவாமியை விட்டு விட்டனர். திரும்பிப் பார்த்து அதிர்ந்து போய் அலறினர்! 

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2 இன்னும் தொடர்ந்து வரும்.)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button