அசுர குணம் என்றும் மாறாது, திருந்தாது !

289

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(19) நாகவனம் பள்ளிகொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

அசுர குணம் என்றும் மாறாது, திருந்தாது !

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 

அசுர குணம் பெற்றவர்கள் தங்களை விடவும் அறிவு பெற்றவர்களைக் கண்டால் எதிரிகளாக எண்ணிப் பகையுறுவார்கள். தெய்வீக பக்தி உடையவர்கள் மற்றும் ஆன்மிகப் பெருமக்களை மிகவும் சந்தேகக் கண் கொண்டு கணிப்பார்கள். மிக நல்ல சிந்தனைகளுக்கு எதிர்ப்பதமாக சிந்தனை கொள்ளும் இவர்களால் எந்நேரமும் மற்றவர்களுக்கு அபாயம் இருந்து கொண்டே இருக்கும். உலகத்தில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் அறியாமை, தகுதியின்மை, பொறுமையின்மை இவைகளை அசுர குணம் உடையவர்கள் எதிர் கொள்வார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை என நினைப்பார்கள். அற்பமான சிலவற்றையும், விரும்பத்தகாதன பலவற்றையும்,  ஏன்? அத்தனையும் சிறப்பானதாக எண்ணி ஆசை கொள்வார்கள். கேவலம் மிருகப் பிராயமான  சுகத்தை சுகம் என  எண்ணி சுகிப்பார்கள். சிற்றின்ப வேட்டையில் மனத்தை முழுவதும் செலுத்துவார்கள். உண்மைப் பொருளான ஆத்மநிலையைக் காப்பாற்றிக் கொள்ளத் துணிவு கொள்ள மாட்டார்கள். ஆசைகளை அதிகரிக்கச் செய்யும் வழிகளில் மனதினைச் செலுத்தி அகங்காரம், ஆணவம், அதிகாரத்துடன் வாழ்வார்கள். சத்தியத்தையும் கூட சமயம் கிடைக்கும்படி நேர்ந்தால் சந்தோஷத்துடன் துறப்பதுடன், அதன் காரணமாகக் கர்வமும் கொள்வார்கள். மனதினைச் சுத்தமாகவும், சுதந்திரம் உள்ளதாகவும் வைத்துக் கொண்டால்  மட்டுமே உண்மைப் பொருளை அடைய முடியும் என்பதை அசுர குணத்தைக் கொண்டவர்கள் உணர மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்திருந்த நளமகா முனிவர் ராவணசம்ஹாரம்,  ஶ்ரீமந் நாராயணன் அவதாரமாகிய ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கரங்களால் நடை பெறப்போவதையும், அதற்காக விபீஷணன் உதவப் போவதையும், தனது ஞான திருஷ்டியினால் உணர்ந்து கொண்டார்.

 

நளமகா முனிவர் பிரபஞ்சப் படைப்பின் மீது மிகவும் மரியாதை உடையவர். படைப்பின் உன்னத அம்சமான உடலைப் பாதுகாக்கும் வித்தையை அறிந்து கொண்டு, அதனை முற்றும் பயன்படுத்தும் வழிவகைகளைப் போதித்தவர். உடலைப் பயன்படுத்தும் போது மனமும், அறிவும், புலன்களும், பொறிகளும் தேய்ந்து கொண்டே இருக்கும். அத்துடன் உடலில் குற்றம், குறைகளுடன் வேற்றுமைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனைத் தூய்மைப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அறிந்தவர். தவம் செய்து வருபவர்களுடைய பொறிகளும், புலன்களும், அறிவும், மனமும் புதிப்பிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன! அந்த தவத்தை வேள்வி என சான்றோர்களால் கூறப்பட்டது. மனித சமுதாயமும் அப்படியே தான் புதிப்பிக்கப் பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். நன்றிக் கடன் பட்டுள்ள சமுதாயம், தான, தர்மங்களால் தான் நிறைவாகப் புதுப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன! தான தர்மமும் ஒரு சிறந்த வேள்விதான்! அதனைப் போலவே பூமியின் சத்துக்கள்  கனிம வளங்களாகவும், பயிர்த் தொழில்  மூலமாகவும் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு விட்டால் அவற்றை ஈடு செய்யப்பட வேண்டும். அதற்கு முறையான வேள்விகள் நடத்தப்பட்டு வந்தால் பூமியின் சத்துக்கள் ஈடு செய்யப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி  வேள்விகள் செய்வதனால் உண்டாகும் நன்மைகளை எடுத்துக்கூற ராவணனும், விபீஷணனும் கேட்டுக் கொண்டனர்.

 

செல்வத்தினாலோ, அதிகாரத்தினாலோ அமரவாழ்வை எவரும் அடைந்துவிட  முடியாது. அது இறைவனது நாட்டத்துடன்  தியாக மனப்பான்மையினால்  சித்திப்பது. அதனைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ராவணனுக்கு ஏற்படவும் இல்லை; ராம பாணத்தால் தான் அவனுக்கு அமரவாழ்வு  கிடைத்திடும் வாய்ப்பு ஏற்பட்டதா? என்ற கேள்விக்கும் விடையை அறிந்தாரில்லை! ஆனால் அசுர குணம் என்னவோ திருந்தி வாழ்ந்திட சந்தர்ப்பங்கள் அநேகம் இருந்தும், ஆணவத்தால்  அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுத்த ராவணேஸ்வரன் கிளை  விபீஷணனைத் தவிர அனைவரும் பூண்டோடு அழிவுற்றனர். அப்பாவி ராஜகுமாரனாக இவ்வுலகில் அவதாரம் எடுத்த நம் பெருமாள், ராவணவதத்திற்காக மிகச் சிறந்த வில்வீரனாக உருவெடுக்கச் சந்தர்ப்பங்கள் இயற்கையாகவே அமைந்து விடுகின்றது. ராமாவதாரத்தின் உண்மையான  இயல்பைக் கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். அவர் ஆற்றிய சாதாரணச் செயல்கள் அனைத்துமே சமுதாயத்தில் அவரை மிகப் பெரிய மனிதனாக, ஆற்றல் மிக்கவராகத் தெய்வீகமாகப் போற்றுவதற்கு உரியவராக வெளிப்படுத்தியது. அனைவரையும் அன்பினால் வசப்படுத்தி உலகில் உன்னதமான தெய்வீக நிலையில் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இடம் பெறுகின்றார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button