மனிதனின் பாவத்திற்கும் இறைவனின் நாமத்திற்கும் யுத்தம்.

666

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(32) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

மனிதனின் பாவத்திற்கும் இறைவனின் நாமத்திற்கும் யுத்தம்.

′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′°′

“ஒழுக்கமும், அன்பும் கொண்ட ஶ்ரீராமரின் அவதார நோக்கம் ராவண வதமாக இருந்ததால், ஜெபதவம் மூலமாகவே அதற்குண்டான வாய்ப்புக்களை அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார். பாவங்கள் புரிவதும் கூட ஜீவர்களின் சுதந்திரமாக இறையருள் அளித்துள்ளது என்றும் ஆனால் மனிதனின் பாவங்களுக்கும், இறைவனுக்கும், என்றும், எப்போதும்  யுத்தம் நிச்சயமாக உண்டு என்கின்ற கருத்தை உடையவர் ராமர். எப்போது மனிதன் தான் செய்வது பாவகாரியங்கள் என்று உணர்ந்து கொண்டு, மனம் திருந்தி பாவ விமோசனமாக பகவானின் நாமத்தை விடாது ஜெபம் செய்து வந்தால், செய்த சகல பாவங்களும் நெருப்பில் இட்ட பொருள் போன்று பஸ்பமாகி விடும் எனறு  அடிக்கடி கூறி வந்தார். இது உண்மை என்பது வேதத்தில் இறைவன் சொல்லிய வாக்காகும். மனிதனின் இப்பிறவி மாத்திரமன்றி, ஏழேழு பிறவிகளிலும் செய்த சகல பாவங்களில் இருந்தும் காப்பாற்றும் ஆற்றல் சக்தி பகவான் நாமத்திற்கு உண்டு” என ஶ்ரீராமர்  அருளினார். ஒழுக்கமும், அன்பும் கொண்டு வாழும் மனிதனுக்கு பாவங்களில் இருந்து விடுதலையும் ராமநாம ஜெபம் தருவது உறுதி ” என்று ராம காவியம் எழுதிய ஆஞ்சநேயரின் கருத்தாகும். உலகாதயப் பற்றின் காரணமாக அறிவு மிகுந்த கைகேயியின் மனம் இறையருளின் சத்திய தர்மத்தை, நல்வழியை ஏற்க மறுத்தது. அது பகவன் ராமருக்கு சாதகமான விஷயமாகிப் போனது. ஆண்டவன் பேரில் மனதைச் செலுத்த அவள் அறிவு பயன்பட வில்லை. சத்திய தர்மங்களை அழிக்கக் கூடிய சக்தி கைகேயிக்கோ ஏன் கூனி மந்தரைக்கோ கூட கிடையாது. மௌனத்துடன் கொண்ட அன்பினால் இறையருள் ஆட்டுவிக்கிறது; இவர்கள் ஆடுகிறார்கள். எதனை எண்ணுகின்றோமோ அதுவே வாழ்க்கை  என்றனர் மகா ஞானியர்கள்.

 

ஶ்ரீ  ராமர் மகுடாபிஷேக வைபவ விழா நாள் குறித்து அயோத்தி நகர மக்கள் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். தசரதச் சக்கரவர்த்தியும்  இந்த நல்ல சேதியை முதலில் கைகேயினிடம் கூற அவள் வசிக்கும் அரண்மனையை நாடி சந்தோஷமாகப் போனவர் ஏமாற்றம் அடைந்தார். சேடிகள் அவரிடம் ராணி ஊடல் மாளிகையில் இருப்பதாகக் கூறியதும் துணுக்குற்றார்.  என்ன காரணமோ? என எண்ணியபடி அவளை சமாதானம் செய்யும் நோக்குடன் தயங்கிய படியே சென்றார். ஊடல் மாளிகைப் படியில் அரசன் தனது இடது காலை வைத்தவுடனேயே சுரீரென உள்ளங்காலில் தைத்தது. அது கைகேயியின் ஆபரணம். சனி நிலப்படியை மிதித்தவுடனே அரசனைப் பற்றிக் கொண்டு விட்டது. இந்த சனியின் ஆதிக்கத்துடன், முனிசிரேஷ்டன் சிரவணனைக் கொன்ற சாபமும் சேர்ந்து கொண்டு, புத்திர சோகத்துடன் அகால மரணமும் தசரதருக்கு நேர்ந்திட, கைகேயி மூலமாக காலன் தனது பணியைத் துவக்கி விட்டான். தனது காதல் மனைவியின் அலங்கோலநிலை கண்டு, மனம் பதறி, அவள் ஊடலைத் தீர்க்க எண்ணியவரிடம் தனக்குத் தரவேண்டிய இரண்டு வரங்களைத் தரும்படி வாக்குக் கேட்டாள் கைகேயி. ரகுகுலத்தில் சொன்ன சொல் தவறுவதில்லை என்ற உறுதியை மன்னனிடம் முதலில் பெற்றுக் கொண்ட கைகேயி, தனது மனதினை உறுதி படுத்திக் கொண்டு வரங்களைக் கேட்டாள். 

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தசரத மன்னன், “அடி பாதகி” என்ற கூக்குரலிட்ட படியே மயக்கமுற்றார்.

 

மயக்கம் நீங்கி அயர்ச்சி நீங்காத மன்னன் பரிதாபமாகத் தனது அன்பு மனைவியைப் பாரத்துக் கேட்டார், ” நமது குலத்தின் வழக்கப்படி மூத்தவன் ராமனுக்கன்றோ பட்டம் சூட்ட வேண்டும்?  பரதனுக்குப் பட்டம் சூட்டுவது முறையாகாதே! கைகேயி பிரிய ராமனை ஏன் விலங்குகள் வசிக்கும் வனமேக வேண்டும் என்கிறாய்?  வேறு வரங்கள் கேட்கக் கூடாதா? ” என்று கேட்டதும் நாகமெனச் சீறி அவரை ஏசினாள். அரசர் கெஞ்சினார்; அவள் விஞ்சினாள். பரதன் அயோத்தியை அரசாள, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனமாள வேண்டும் என்பதில் கைகேயி உறுதியாக இருந்ததால், அரசர், ” ராமா, ராமா” என்று கதறியபடியே மயக்கமுற்று வீழ்ந்தார். பட்டாபிஷேக விழாவினைப் பற்றி ஆலோசனை கேட்க வந்த அமைச்சர்  அரசர்படும் துயரத்தையும், கைகேயியின் கொடுமை மிகுந்த வரங்களை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவர், திகைத்து வந்தவழியே திரும்பிச் சென்றார். ராமனைக் காட்டிற்கு அனுப்பும் கைகேயியின் சூழ்ச்சி நகர் முழுவதும் வெகுவேகமாகப் பரவியதால், அவளை அனைவரும் வசைபாடித் தூற்றி சபித்தனர். முனிவரின் சாபமும் பலித்து விட்டது. மன்னர் படும் வேதனையைக் கண்டு கைகேயி சிறிதும் மனம் இரக்கப் பட்டாளில்லை.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள், 

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button