மனம் நிறைவாக இருக்கிறது.

593

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

23•09•2017,

வெள்ளிக்கிழமை,

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி.

 

(450) மனிதனே புனிதன் —

மனம் நிறைவாக இருக்கிறது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

” இன்று தான் எனது மனம் நிறைவடைந்து உள்ளது. நாகராஜன் சிறிது காலம் பவானி வந்து தங்கியிருக்க முடியுமா?  எனது ஆன்மிக சந்தேகங்கள்  அனைத்தும் விலக, எனது அறிவு துலக்கம் பெற, நீங்கள் மனது வைத்து நமது சங்கத்திற்கு வர வேண்டும். உங்களால் நிச்சயமாக முடியும்” என்று அன்புடன் கூறினார். சிறிது நேரம் மெளனமாக வீற்றிருந்த திரு SSM ஐயா அவர்கள் நமது சுவாமியிடம் தனிமையை ஏற்படுத்திக் கொண்டு, “நாகராஜன் முக்கியம் வாய்ந்த ஒரு கேள்வி. நமது தியான சங்கத்திற்கு இப்படியோர் நிலை ஏற்படக் காரணம் என்ன? நிச்சயமாக எனது பிழையென ஏதும் இருக்க இயலாது என நம்புகிறேன். நீங்கள் குருதேவரிடம் தொடர்பு கொண்டு விடையறிந்து கூற முடியும் என நினைக்கின்றேன் ” என்று சொல்லிவிட்டு சுவாமியின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அவரது பார்வை மிகவும் தீட்சன்யமாக இருந்தது. நமது சுவாமி அவர்கள் அவரிடம், ” உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நன்மைகளை மட்டுமே இங்கு தியான அன்பர்கள் தொண்டாற்றிடச் செய்திட வேண்டும் என்பதற்காக, உங்களால் உருவாக்கப்பட்டது சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம். இங்கிருப்பவர்களுக்கு , இங்கு தியானம்  செய்திட வரும் அன்பர்கள்  ஆத்மவலிமை பெற்று, மிகுந்த வல்லவர்களாக, தங்களது ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துபவர்களாகத் திகழ வேண்டும் என்ற  எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும்! ” என்றார்.

 

மேலும் கூறுகையில், ” தியான சங்கத்தை முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பு, உங்களுக்கு ஏற்படவில்லை. உங்களைப் போலவே மற்றவர்களும் கவனித்துக் கொள்வார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒரு ஆன்மிக இயக்கம் சோதனைக்கு உட்படுகின்றதென்றால், நீங்கள் அறியாத வகையில் சுயநலமிக்க போக்கு அங்கே விஷமிகளால் விதைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆன்மிக இயக்கம் வெற்றி பெறுவது தன்நலம் கருதாத அன்பர்களின் மனத்தின்மையால் அற்புதமாக வளர்ந்து வருவதுடன், ஆன்மிக வாழ்க்கையும் சிறப்படையும். ஆன்மிக அன்பர்கள் தனது சுயநலமிக்க நோக்குடன்  நல்லவழி காட்டும் ஓர் ஆன்மிக இயக்கத்தையும், குரு பக்தியையும், தன்னுடைய இஷ்டப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணும் போதுதான் இத்தகைய செயல்கள் நடைபெற்று விடுவதும் உண்மைதான். உண்மையான ஆன்மிக இன்பமானது பணத்தைச் செலவழித்துத் தான் பெறவேண்டும் என்பதில்லை. பட்டம், பதவி, செல்வம் மற்றும் அழகிய தோற்றத்தை வைத்து மனிதர்களைக் கணித்துவிட முடிவதில்லை.  செய்திடும் பயனைக் கொண்டுதான் மதிப்பு உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு. பணத்தைச் செலவு செய்து, ஆன்மிக இயக்கத்தை உருவாக்கியும் அதனால் நீங்கள் தேடும் பேரின்பம் கிடைக்காமல் தடை உண்டானதன் காரணத்தைக் கேட்கின்றீர்கள்! அதற்கான காரணத்தைக் கூறிவிடுகின்றேன். அதனால் ஞானம் பெற்ற நீங்கள் சினம் கொள்ளக் கூடாது” என்று சொல்லி அவர் முகத்தை உற்று நோக்கினார் நமது சுவாமி.

 

குழந்தையைப் போன்று அவரது முகத்தில் தான் எத்தனை சாந்தம். உண்மையான ஞானம் பெற்றவர் என்பதற்கு புறச்சான்று அகத்தின் மேன்மையைக் காட்டியது. மெளனமாகப் புன்னகை புரிந்தார். அதனைப் பார்த்த சுவாமி, “நமது தர்மங்களில்  கூறப்பட்டுள்ள உண்மையை உரைக்கின்றேன், பொருத்தருள்க! நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர்களுடன் நட்புறவு கொள்ளல் வேண்டும். உடனுக்குடன் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதமின்றிச் செய்துவிட வேண்டும். செல்வங்களைச் சம்பாதிக்க ஆசை கொண்டவன் சோம்பேறியாக இருக்கக் கூடாது. நமக்குப் பக்கபலமாக இருக்கின்ற, அறிவுசார்ந்த பலம் கொண்டவர்களின் உண்மையை அறியாமல் அவர்களை இகழக் கூடாது. புகழுக்காக ஆசைப்பட்டு நல்லவர்களைப் பகைத்துக் கொண்டு, எதிரிகளுடன் உறவாடக் கூடாது.  குருநாதனின் உபதேச வார்த்தைகளையோ, ஆன்றோர்கள் ஆன்மிக நூல்களில் கூறியுள்ள உண்மைகளைத் தனக்கு  இஷ்டப்பட்ட காரியங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. மனசாட்சிக்கு விரோதமான செயல்களைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. இவைகளில் கவனம் இன்றேல் நமது நல்ல நோக்கத்தை  உடைத்துவிடத் தீமை எண்ணம் உள்ளவர்கள், நல்லவர்கள் போல் நம்மிடையே உலவக்கூடும். பிறரை நம்பிச் செயல்படுவதைவிட, உங்களை நம்பிச் செயற்பட்டால் நல்ல வழிகாட்டியாக இவ்வுலகில் நீங்கள் திகழ முடியும். எனது வந்தனங்களை ஏற்றுக்கொண்டு விடை தாருங்கள்” என்று கூறிவிட்டுத் தனது கிராமத்திற்குப் பயணப்பட்டார். பவானிப் பயணம் நமது சுவாமிக்கு நல்ல நண்பர் ஒருவர் கிடைத்தார். அவரது அன்பும் ஆதரவும் பாக்கியமாக சுவாமி எண்ணினார். அவரே RB.

 

(மனிதனே புனிதன் வரலாற்றின் முதல் பாகம் நிறைவு பெற்றது. இரண்டாம் பாகம் மெய்யன்பர்களின் ஆன்மிக ஆற்றலை வளர்ச்சி பெறவைக்க வருகின்றது. உங்களின் ஏகோபித்த வரவேற்பினுக்கு நன்றி– சுவாமி)

 

ஈஸ்வர குமாரரின் உண்மைத் தொண்டன்

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button