ஆலால முனிவர் கூறும் உண்மை!

302

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ  ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி  ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(10)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ஆலால முனிவர் கூறும் உண்மை!

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஶ்ரீமந் நாராயணனாகிய நம்பெருமாள் தேவாதிகளையும், தபஸ்விகளாகிய ரிஷி, முனிவர் சிரேஷ்ட பெருமக்களை நோக்கி, “உலகினோர்க்கு தெய்வீக நல்வழியை வழி காட்டும் மெய்யன்பர்களே! இறையருளினை உபாசனை செய்து வரும் மக்களின் மீது, அடாத செயல்களை விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தானவர் ராஜன் ராவணனுக்கு, அவன் விரும்பியபடியே அப்பாவி மனிதனாக அவதாரம் எடுத்து, அவனுக்கு சம்ஹார இஷ்டபூர்த்தியைத் தந்துவிட எண்ணியுள்ளோம். எமக்குத் துணையாக ஆதிஷேசனும் அவதாரம் எடுப்பார்.  மகாதேவரும் எமக்கு உதவிட மானுட வானரமாக அதியற்புத ஆற்றலுடன் அவதாரம் எடுத்து வருகின்றார். ஆகவே கவலையை விட்டொழித்து உங்களது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருவீர்களாக! ” என்றுரைத்துக் கனிவுடன் அனுப்பி வைத்தார். அனைவரும் நிம்மதியுடன் தத்தமது இருப்பிடம் ஏகினர். கைலாயவாசி ஆலால முனிவர் அனுமனைச் ‘சிரஞ்சீவி ‘  என்று ஆசியருளிய தேவாதி தேவர்களிடம் மேலும் கூறுவார், ” அறிவுசால் தேவர்களே, நீங்கள் ஒரு உண்மையை அறிந்து கொண்டால் மாத்திரமே உங்களின் மனச் சோர்வு நீங்குவதுடன், சந்தேகத்தின் பிடியில் இருந்தும் விடுபடுவீர்கள். அதனை உங்களுக்கு உரைக்கின்றேன் கேட்பீர்களாக! “

 

“ஒரு சமயம் பார்வதிதேவி, தனது துணைவர் மகாதேவருடன் சேர்ந்து திருமலையில் உள்ள உல்லாசவனம் ஏகி,  வானரங்களாக மாறி விளையாடி மகிழ்ந்திருக்க எண்ணம் கொண்டார். தவத்தினில் ஆழ்ந்திருந்த ஈஸ்வரர், பார்வதி தேவியின் எண்ணத்தை அறிந்து கொண்டார். அந்த சமயத்தில்தான்  சிவபக்தன் கேசரி தனக்கு ஒரு வாரிசாக  சத்புத்திரன் வேண்டி தவம் செய்து கொண்டிருந்தான். சிவம் அவன் முன் தோன்றி, விதிப்படி இந்த ஜென்மத்தில் பெண்மகவு மட்டுமே உண்டாகும் என்றும், அவனது மகளுக்கு ஆண் சந்ததி கிடைக்க அவள் தவமது புரிந்து பராக்ரமுடைய வீரக் குழந்தையை ஈன்று உவப்பாள் என ஆசி வழங்கியிருந்தார். அதன்படி பார்வதி தேவியின் இச்சையைப் பெண்ணாக சிருஷ்டித்து, கேசரிக்கு மகளாகப் பிறக்கும்படி அனுக்கிரகம் செய்தார். அதன்படி பார்வதி தேவியின் அம்சமாக கேசரிக்கு அஞ்சனாதேவி பிறந்தாள் ”  என்றார்.

 

மேலும் ஆலால முனிவர் கூறுவார், “பூலோகத்தில் முறையாகச் செய்யப்படும் யக்ஞங்களில் தரப்படும் அவிர் பாகங்களை, மனமுவந்து ஏற்று அருள் புரிந்திடும் தேவாதி தேவர்களே! கேசரிக்கு மகளாகப் பிறந்த பார்வதியின் அம்சமாகிய சக்தி, அஞ்சனை என்ற பெயர் நாமமுடன் வளர்ந்து வந்தாள். வனவாழ்வில் ஆசை கொண்ட அவள் உரியகாலப் பக்குவ வயதில் பூப் பெய்தினாள். அவளைத் தகுந்த காலத்தில் ஆட்கொள்ள எண்ணிய மகாதேவர், அழகும், பராக்ரமும், வீரமும் கொண்ட வானர வாலிபனாகத் தோற்றம் தாங்கினார். எப்போதும் வனங்களில்   சஞ்சாரம் செய்து வரும், பார்வதிதேவியின் அம்சமாகிய அஞ்சனாதேவியின் முன்பாக வானரவீரன் தோன்றினார். வியப்பின் மிகுதியில் நாணமுற்ற தேவியின் உள்ளத்தில், தெய்வீக வானர வீரனின் கம்பீரத்தோற்றம் பதிவாகியது. கனிவுடன் நோக்கிய  வானர வீரனைப் பார்த்து அன்பு மேலீட்டால், பார்த்தது பாரத்தபடியே நின்று விட்டாள். பிறகு ஒருவரை ஒருவர் மனம் தெளிந்து அறிமுகம் செய்து கொண்டனர். அவ்வீரனைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தனது பெற்றோர்களிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர்களின் ஆசியுட ன் திருமணமும் செய்து கொண்டாள். சந்தோஷமான வாழ்வு வாழ்ந்த அவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாக வில்லை. காரணம், ஜென்ம வாசனை காரணமாக உண்டான மிருகவடிவு கொண்டு பதியுடன் வாழும் இச்சைதான். அது நீங்கிட அவள் திருமலையில் தவம் புரிந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதை தருமதேவதையே ஒரு பெண் வடிவில் வந்து உணர்த்தி விட்டுச் சென்றது” என்றார்.

 

அப்போது  நாரதமகரிஷி, ” முனிவர் பெருமானே திருமலையில் நடந்த  உண்மைகளை தேவர்கள் அறியக் கூறுவீர்” என்றார். அதற்குக் கைலாய ஆலால முனிவர், “பூலோக மக்களைச் சிறப்புடன் பரிபாலனம்  செய்திட இறை அருள் சக்தியினால் படைக்கப்பட்டுள்ள தேவாதி தேவர்களே! இதனைக் கேட்ட பிறகாவது உங்களது சந்தேகம் நிவர்த்தி ஆகுமென எண்ணுகிறேன்” என்றுரைத்து விட்டு, ஆதியோடு அந்தமாக விளக்கத் துவங்கினார். பார்வதி தேவியின் அம்சமான அஞ்சனாதேவி, சிவனருள் அம்சமான ஆஞ்சநேயரைத் தனது மணிவயிற்றில் தாங்கி தவமிருந்த உண்மைகள் அனைத்தையும் விளக்கினார். அந்த சமயத்தில் மகாதேவர் தனது தவமூச்சில் சதா ஓடிக் கொண்டிருக்கும் வாயுதேவனைத் தனது முன்னால் எழுந்தருளச் செய்தார்.  

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாச்சி


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button