உலக தர்மத்தில் இருந்து வேறுபடாதே!

639

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

19•09•2017,

திங்கட்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(446) மனிதனே புனிதன் —

 உலக தர்மத்தில் இருந்து வேறுபடாதே!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விடுதியின் மேலாளர் கூறினார், ” மன்னித்துக் கொள்ளவும்.  அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து தாங்கள் தான் நாகராஜன் சுவாமி என்பதைப் புரிந்து கொண்டேன். நீங்கள் திரு SSM ஐயா அவர்களைப் பார்க்க வந்தவர் என்று  முன்பே  கூறியிருக்கலாம். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள், நன்றி ” என்றார். சிறிது நேரத்தில்  பவானி விடுதிக்கு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்க விடுதி மேலாளர் எடுத்துப் பேசியவர் மிகவும் பணிவைக் காட்டிப் பேசினார். ” ஆமாம் ஐயா, அவர் இங்குதான் இருக்கிறார்… நலமாக உள்ளார்… ஆகட்டும்… ஐயா அவரை அனுப்பி வைக்கிறேன், நன்றி ” என்றார். தொழில் அதிபர் திரு.SSM சுப்பிரமணியம்  ஐயா அவர்கள் குரலைக் கேட்டதுமே விடுதியின் மேலாளர் அதிர்ச்சி அடைந்து விட்டார். சிறிது நேரத்தில் காரை பெரிய மகனின் ஓட்டுனர் செலுத்திக் கொண்டு வந்தார். சுவாமியைப் புன்சிரிப்புடன் அழைத்துக் கொண்டு போனார். அது நமது சுவாமிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விடுதியின் மேலாளரிடம் விடை பெற்றுக் கொண்டார். அவரும் புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார். சுவாமி  பவானி என்ற ஊருக்குப் புதிய மனிதன் தான். அவ்வூரில் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் எல்லா விதமான நிகழ்வுகளுக்கும், உரிய பொருளை அறிந்து கொள்ளாதவர் தான். அவ்வூரின் சம்பவங்களின் உட் பொருளை அறிந்து கொண்ட பிறகும் அவைகளை ஒப்புக் கொள்ளாமல் மறுத்துக் கூறுபவர்கள் அவ்வூரில் மக்களுக்கு அந்நியராகப்போய் விடுகின்றார்கள் என்று சமுதாய இயலை வகுத்துத் தந்த  ஆன்றோர் பெருமக்கள் வெளிப்படையாகவே உரைத்துப்  போயினர்.

 

இவ்வுண்மையை சற்குரு நாதர் தமது சீடப்பிள்ளையும், மகன் ஸ்தானத்தில் வைத்து எண்ணும்  பாக்கியம் பெற்ற தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமிக்கு போதனை செய்துள்ளார். நமது சுவாமியை அழைத்துக்கொண்டு காவேரி நதியின் பழைய பாலத்தின் மீது சென்ற சிற்றுந்து, காவேரி நதியின் கிழக்குப் கரையை ஒட்டி வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில்  சென்றது. அதே வீதியில்  அழகிய பிள்ளையார் கோயில் ஒன்று கவனிப்பாரற்று காணப்பட்டது. சற்று நேரத்தில்  இரண்டு பகுதிகள் கொண்ட மிகப்பெரிய  வீட்டின் முன்பு வாகனம் நிற்க, சுவாமிக்கு முகமன் கூறி வீட்டினுள்ளே அழைத்துப் போயினர். வீட்டினை ஒட்டியபடியே, தனித்துச் சற்று உயரமாகப் படிகளுடன் கூடிய, விஸ்தீரமான பூஜை அறைக்குள் சென்றனர். தங்கவேல் ஒன்று பூஜை அறையின் மேடையில் சுடர்ந்து கொண்டிருந்தது. நமது சுவாமிக்கு நமஸ்காரம் கூறிவிட்டுத் தங்கவேலின் முன்பாக அனைவரும் அமர்ந்து கொண்டனர். “ஞானயோகி” என்று சற்குரு நாதரால் பின்னொரு நாளில் கூறப்பட்ட, திரு SSM சுப்பிரமணியம் ஐயா அவர்கள் சித்தாசனத்தில் அமர்ந்திருந்தார். அவருடைய  அருகில் அவரின் துணைவியார் திருமதி பங்கஜமம்மாள்,  தெய்வீகப் பொலிவுடன் காணப்பட்டார். ” வாப்பா தம்பி, வந்து ஐயா அருகில் அமர்ந்து கொள்” என்று அன்புடன் அவர் கூறினார். நமது சுவாமி  சற்றும் தாங்காமல் அவரது அருகில் அமர்ந்து கொண்டார். அந்தத் துணிவு ஞானயோகி அவர்களுக்குப் பிடித்துப் போனதால், மெல்லப்  புன்சிரிப்பு ஒன்றைக் காட்டினார். என்ன ஒரு தெய்வீகப் புன்னகை?  

 

கணவன் மனைவி இருவருக்கும் தான் எத்துணை பொருத்தம்? கடவுளுக்கு நன்றி கூறினார். தெய்வீக வழியில் செல்லும் ஆத்மாக்கள் அத்தனை பேருமே இறைவனது சோதனைக்குப் பின்பல்லவா ஆட்கொள்ளப் படுகிறார்கள்? என்னே இறை அருளின் கருணை! நிச்சயமாக இவர்கள் சோதனையில் சிக்கித் தவித்துக் கொண்டு தானிருக்க வேண்டும் என நமது சுவாமி  எண்ணிக் கொண்டார். சுற்றிலும் அமர்ந்து இருப்பவர்களை நமது சுவாமி பார்த்தார். செல்வச் செழிப்பு மிக்கவர்களாகத் தென் பட்டனர். அவர்கள் யார் என அறிமுகம் இல்லாததால் அனைவருக்கும் வணக்கம் கூறினார். அவர்கள் காட்டிய மரியாதையில் இருந்து நல்ல குணங்கள் கொண்டவர்களாகத் தென்பட்டனர். பெண்களைப் போன்றே ஆண்களும் நமது சுவாமியின் முகத்தை ஆவலுடன் நோக்கியபடி இருந்தனர். நமது சுவாமியின் எதிர்ப்பக்கத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டு இருந்தார். அவரது கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னியபடி, கைகளை நீட்டியபடி அமர்ந்திருந்தார். திடீரெனக் கண்களைத் திறந்து, “குரு தேவர் இவருக்குச் சாப்பிட முதலில்  பால் கொடுக்கச் சொல்கிறார் ” என்று கூறினார். சுவாமி இதனை எதிர்பார்த்தது தான். “பால் தருவார்கள்,  கொடுத்தால் சாப்பிடாதே” என்று எச்சரிக்கை செய்தவரும் அவர் தானே! பெரிய தம்ளர் நிறையப் பசும் பால் சுவாமியின் முன்னால் வைக்கப்பட்டது. “சாப்பிடுங்கள் ” என்று பல குரல்கள் ஒலித்தன!  

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

நன்றி! வணக்கம்! 

 

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! 

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button