மனத்தூய்மையே சிறந்த பொருள்.

206

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•08•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(425) மனிதனே புனிதன் —-
மனத்தூய்மையே சிறந்த பொருள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“கடுமையாக உழைக்கும் மக்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? “— சற்குரு நாதர். “அன்பு மிகுந்த சற்குருவே உழைப்பாளிகள் தாங்கள் செய்யும் தொழிலின் மேல் உள்ள ஆசையினால் குளிப்பது, உண்பதெல்லாம் மறந்து பணி புரிகிறார்கள். செய்யும் வேலையில் கருத்தாக இருக்கிறார்கள், ஐயனே “— நமது சுவாமி. ” வேறு ஏதாவது உட்கருத்து அதில் உள்ளதாக எண்ணம் உனக்குத் தோன்றுகிறார்? சொல்” — சற்குருநாதர்.
“ஆமாம் வாய்மை மிகுந்த சற்குருவே! அவர்கள் எந்தத் தொழில் எதன் மீது செய்தாலும் அதுவே சிறந்த பொருள் என்று ஆர்வத்துடன் பணி புரிவது புரிகின்றது ஆசானே “— நமது சுவாமி.
“நல்லது மகனே, தொழிலாளர்கள் தாம் செய்திடும் தொழிலில் கொண்டுள்ள ஆர்வத்தைத் தெரிந்து கொண்டாய். தொழிலாளி தான் வேலை செய்திடும பொருளைவிடச் சிறந்தது இல்லை என்று எண்ணுவதைப் போலவே, உன்னிடமும் ஒரு சிறந்த பொருள் இருக்கிறது. கவனி அதன் பெயர் மனத்தூய்மை. ஏன் அதில் உனக்கு ஆர்வம் இல்லையா? ” — சற்குரு நாதர்.
“எமக்கு நல்வழியைக்
காட்டும் சற்குருநாதரே, வேதாந்த தேசிகரே. உழைப்பாளிகளுக்குத் தனது வேலையில் ஆர்வத்தைப் போன்றே, என்னிடத்தில் உள்ள சிறந்த பொருளான மனதின் தூய்மைமையில் அதிக ஆர்வம் உள்ளவனாகவே இருக்கிறேன் சுவாமி. அதில் பற்று உள்ளதால் அதனால் விளையும் நன்மைகள் பற்றி அறிய விரும்புகிறேன் சற்குருவே “— நமது சுவாமி.
” மகனே நாகராஜா, தருமமே செய்யாதவர்களுக்குப் பணத்தில் மிகுந்த ஆசை இருக்கும். தனது பெருமையை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவதைக் கேட்க முகஸ்துதிப் பிரியர்கள் ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு இவர்களது நோக்கங்களில் இருக்கும் ஆசையினால், இவர்கள் விரும்பிய பொருளை அடைவதற்காக இவர்களும் உண்பதையும், உறங்குவதையும் கூடத் துறக்கத் துணிவார்கள். இவர்கள் விரும்பும் பொருளைக் காட்டிலும் உனது மனத் தூய்மையே மிகவும் சிறந்தது. நீ பவானி செல்லும் போது இந்த அரிய பொருள் உனக்கு எல்லா விதத்திலும் உதவிகள் புரியும் ” என்ற சற்குரு நாதரின் உபதேசம் நமது சுவாமிக்கு ஊக்கம் தருவதாக இருந்தது.

மேலும் சற்குரு நாதர் கூறுவார், “மகனே, இந்த உலகத்தில் உள்ள ஜடப்பொருட்கள் மற்றும் பகுத்தறிவைப் பெறாத ஜீவன்கள் அனைத்தினிடமும் நீ அறிவுடனும், பெருந்தன்மை உடனும் நடந்து கொள்ள வேண்டும். உன்னைச் சந்திக்க வரும் மக்களுக்கு, ஆறுதல், தேறுதல் கூறுபவனாகவும் விளங்கி வரவேண்டும். மற்றவர்கள்- சுவாமி கருத்துக்கு மதிப்பளித்து ஒத்துப் போகவும். மிகவும் முக்கியமான ஒன்று உண்டு. அது, எந்தக் காரியத்தில் நீ ஈடுபட்டாலும் ஒவ்வொரு முறையும் ஈஸ்வரரைத் தியானித்துச் செயல்பட வேண்டும். தியானத்திற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. மனம் சில நிமிட நேரம் அறநெறிகள் தவறாது நிற்க வேண்டும், அது போதும். அதனால் உனது செயல் மிகவும் எளிதானதாக ஆகி விடும் ” .
” அவ்வாறே நடந்து கொள்கிறேன் ஐயனே “எனப் பணிவுடன் நமது சுவாமி கூறினார்.
சற்குரு நாதர், “மனத்தூய்மை பற்றி அறிந்து கொண்டாய். இனி மனச்சாந்தி பற்றிப் பேசப் போகிறேன், கவனித்துக் கேட்பாயாக” என்று கூறிவிட்டு நமது சுவாமியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவரது தீட்சண்யப் பார்வை ஒருவித அமைதியை சுவாமிக்குத் தந்தது.

சற்குரு நாதர் கூறுவார், “மற்றவர்களுடைய வாழ்க்கைக்கும், உன்னுடைய
வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை நீ உணர்ந்திருக்கின்றாயா? அறிவுடையோர் உலகத்தின் உட்பொருளைத் தெரிந்து அதனுடைய இயல்பு என்ன என்பதை அறிந்து கொள்பவர்கள், நாமும் அதன் ஓர் அங்கம் என்று உணர்ந்து அதனை எப்போதும் மறவாமல் இருக்க எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வெளிப்புறத்தை விட்டுவிட்டுத் தன்னுடைய உள்ளத்தையே கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மனம் சாந்தமடைந்து விடும்.” நமது சுவாமி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து சற்குருநாதர் பேசினார். ” மகனே நாகராஜா, தனது உள்ளத்தையே கவனித்து வந்து அதனால் மனச்சாந்தி பெற்றவர்களுக்கு ஓர் அபூர்வ சக்தி கைவரப் பெற்றிருக்கும். உலக இயல்பை அறிந்து கொண்ட அவர்களுக்கு மற்றவர்கள் உள்ளத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலும் கைவரப் பெற்றிருக்கும். அறிந்து தான் காரியம் நிறைவேற்றப்பட்டதா? அல்லது அறியாமல் செய்தார்களா? என்பதை உடனே தெரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளத்தை கவனித்துக் கொண்டிருப்பவர்களே அடைவர்.
இனி உனது செயல் என்னவென்று தெரிந்திருப்பாய்.
உள்ளத்தைக் கவனி, சாந்தமடைவாய். உலகத்தின் இயல்பில் நீயும் ஓர் அங்கம் என்பதை மறந்து விடாதே” என்றார் ஸ்ரீ சற்குரு நாதர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button