தகப்பனார் தடை விதித்தார்.

266

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

28•08•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(424) மனிதனே புனிதன் —
தகப்பனார் தடை விதித்தார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“அறியாமை இருள் மனிதரின் எண்ணங்களில் பற்றிக் கொண்டு விட்டால் அவர்களை அது முழு மூடர்களாகவே மாற்றிவிட முயற்சி செய்யக் கூடும். இருள் சக்தியானது வீட்டினுள் நுழைந்து விட்டால், அதனை வெளியேற்றுவது என்பது மிகுந்த பிரயர்த்தனமாகி விடும். இருள் சக்தி என்பது பற்றி
நமது புராணங்களில் கூட பதிவு செய்து உள்ளார்கள். சிவனது ஒளி மிகுந்த கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவி மூடியதால் உண்டானதே இருள் என்னும் அறியாமை மாயையாம். இந்த மாயை இருள் சக்தியை நெருங்கிச் சென்று விடும் தெய்வீகத்தைக் கூடப் பற்றிக் கொண்டு விடும் என்றால் சாதாரண ஜனங்களை என்னபாடு படுத்தும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? எதிர்மறையான எண்ணம் மிகுந்த மக்களை அறியாமை இருள் பற்றி விட்டால், அதனால் உண்டாகும் மனரீதியான உளைச்சல்களும், உடல் ரீதியான தொல்லைகளும் ஏற்படும். மேலும் எதிர்மறை யான எண்ணங்களே தொடர்ந்து ஏற்பட்டு, தெய்வீக நாட்டம் குறைந்து விடும். இதற்கு உண்டான பரிகாரத்தைக் கேட்டால் ஆச்சரியம் தான் அடைவீர்கள். இந்த இருள் சக்தியானது இறை நம்பிக்கை உடையவர்களை, தைரிய குணம் பெற்றவர்களை, உறங்கும போது விளக்கு வெளிச்தத்தில் உறங்குபவர்களை, ஜெபம் செய்து வருபவர்களை இது நெருங்குவது இல்லை. பயந்த சுபாவம் உள்ளவர்களை இது பற்றிக் கொள்ளும். எனவே இறை நம்பிக்கையுடன் கூடிய ஜெபம் செய்து வர வேண்டும்.”
(பரிகாரம், பித்ருக்கள் மற்றும் குலசாமி சம்பந்தப்பட்டது)

“எங்கே சென்றாலும் ஜெபமுடன் தான் செல்ல வேண்டும். தவத்தில் காற்றை உண்ணும் போது ‘ஈஸ்வர’ சிந்தனையுடன் உண்ண வேண்டும். இதனை நினைவுடன் கடைப் பிடித்து வருதல் என்பது உனக்குத் தகும். எக்காரணம் கொண்டும் பவானியில் நீ யார் ? என்பதை மட்டும் மறந்தும் வெளிப்படுத்தி விடக்கூடாது. நீ அறியாத பிள்ளை போல்தான் இருந்து வர வேண்டும். அவர்கள் கேட்டால் தான் பதில் கூறவேண்டும். பழனி சமாதியில் எனக்குப் பூஜைகள் புரிந்து வரும் நடராஜா சுவாமி உன்னைப் பார்க்க பவானி வருவார். உன்னை முழுமையாக நடராஜா அங்குதான் அறிந்து கொள்வார். அகத்திய முனிவரும் சிறுவனாக மாறி உன்னைக் காண பவானி வந்து உனக்கு முக்கிய செய்தி தருவார். நாகலக்ஷ்மி தேவி தரிசனமும் உனக்குக் கிடைக்கப் பெறும். சூரியனைத் தியானிக்கும் போதெல்லாம் எனது அருளாசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அறியாமை இருளில் மூழ்கிய மக்கள் உன்னை அடித்து, மிரட்டிப் பணியவைக்க எண்ணுவார்கள். அது நடை பெறாது. இழப்புத்தான் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். எது நடந்தாலும் மனம் கலங்காது இருப்பாய். உன்னை ஆட்கொள்ள வருவோம்.” இந்த செய்தி கிடைத்ததும் நமது சுவாமி பிரார்த்தனையில் அதிக நேரம் கவனத்தைச் செலுத்தி வரலானார். பவானி சென்று வர தனது தாயார் மூலமாக அனுமதி பெற முயற்சி செய்தார் சுவாமி. “விவசாயத்தை ஓழுங்காகக் கவனிக்கச் சொல்” என்ற ஒற்றை வரியில் அவரிடமிருந்து பதில் கிடைத்தது. அந்த சமயத்தில் மிக அதிகமாக மழை பெய்து வயல் வெளிகளுக்குச் செல்லும் பாதை எங்கும், சேறும், சகதியுமாக இருந்தது. நமது சுவாமியின் தகப்பனார் தமது நண்பர்கள் பலரிடம் தனக்கு வாய்த்த மகன் உபயோகமற்றவன் என்று கூறிவிட்டு, தனது ஆதங்கத்தைத் தணித்துக் கொண்டு வெகு வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று களர்மண் சேறு நிறைந்த பாதையில் வண்டி சறுக்கிக் கீழே விழுந்து அடிபட்டுப் பலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார் வரும் போது மகனை வைதபடியே வீட்டிற்குள் வந்தவர் அப்படியே படுக்கையில் சாய்ந்து விட்டார். மறுநாள் காலையில் அவர் தனது மனைவியை அழைத்து, “அவன் எங்கு போக விரும்புகிறானோ போய்க் கொள்ளட்டும். அவனைத் தடுத்ததால் தான் நான் இவவளவு பெரிய துன்பத்திற்கு ஆளாகிப் போனேன். போகச் சொல்” என்று கூறிவிட்டு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார்.

திரும்பவும் நமது சுவாமி அவர்களுக்கு சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்களின் கட்டளையும் , உபதேசமும் கிடைக்கப் பெற்றது. அதுவும் உடனடியாக அவர் கூறுகின்ற சில இடங்களுக்குச் சென்று கவனித்து வரச் சொன்னார் .
குயவர் மண் கலயங்கள் செய்யும் இடத்துக்குச் சென்ற சுவாமி களிமண்ணைச் சக்கரத்தில் செய்யும் நேர்த்தியை கவனித்தார். குயவரின் கவனம் முழுக்கச் செய்யும் பணியில் மட்டுமே இருந்தது. அடுத்து தச்சுப்பட்டறைக்குச் சென்றார். அங்கும் மரவேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தன. கருமான் பட்டரை சென்று அங்கு சாணை பிடிக்கும் பணியில், அருவாளைத் தீயில் இட்டு எடுத்துத் தட்டும் ஓசை ஒலித்துக் கொண்டே இருந்தது. வயல்வெளி சென்றபோது உழவு செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அவரவர்கள் அவரவர் வேலையில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றியது

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button