உண்மையைச் சொல்லவா ! ?

247

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•08•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(426) மனிதனே புனிதன் —
உண்மையைச் சொல்லவா ! ?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியின் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையை விட வித்தியாசமானது என்று சற்குரு நாதர் கூறியது போல் பாட்டி திருமதி பொன்னம்மாள் நாச்சியார் அதனை ஆமோதித்தார். பிறகு தமது பேரனை சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் ஆட்கொண்ட விஷயங்களைப் பற்றி ஞாபகத்தில் கொணர்ந்து பேசத் துவங்கினார். அவரும் தமது பேரன் ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களை “மகனே” என்றும் “அப்பா”எனாறும் அழைப்பதை வழக்கமாக ஆக்கிக் கொண்டார். பாட்டியும் பேரனும் வீட்டின் பின்புறம் ஓங்கி வளர்ந்திருக்கும் இலவ மரங்களின் நிழலில் உள்ள சிறிய திண்ணையில் அமர்ந்து கொண்டனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் இருந்து மலர்களின் வாசனைகள் வந்து சூழவும், நமது சுவாமி தமது குருநாதரை எண்ணி சிந்தையில் இருத்தி ஆராதனை செய்யத் துவங்கி விட்டார்.” பிறரைக் காட்டிலும் உனது வாழ்வு வித்தியாசமானது” என சற்குரு நாதர் நமது சுவாமியின் காதில் மெதுவாகக் கூறியிருந்தார். அதனைப் பாட்டி தவத்திருமதி பொன்னம்மாள் நாச்சியார் அவர்களிடம் சொல்லி யிருந்தார். அதனை ஆமோதித்த பாட்டி அவர்கள், “ஆம், அதனை மறுக்க இயலாது. நாகு சுவாமி, அந்த நாளைய நாட்களை மறக்க இயலாதது. விக்ருதி வருடத்து ஆவணி மாதம், உத்ராடம் நட்சத்திரம் உனது ஜனனகாலம், இரவு அபிஜித் முகூர்த்தம் என்பதாக எனக்கு ஞாபகம். உனக்கு முன்னால் இரண்டு அன்ணன்மார்களைக் கால்வீக்கம் என்ற பெயரில் நமன் கொண்டு சென்றான். உடலை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போகும் போது தான் உயிர் உடலை விட்டு நீங்கி விடுகிறது. உனது உடலும் வீழ்ந்து, உயிரும் நீங்கி விட்ட பிறகும் ஆத்மாவில் இருந்து கொண்டு மரண தேவதையை உபாசனை செய்யும் பாக்கியம் உனக்கு இருந்துள்ளதாக குருநாதர் கூறியுள்ளார். கடும் பனி சூழ்ந்த மார்கழி மாதத்து ஹஸ்த்த நட்சத்திரம் அன்றே மரணமும் , அன்றே சற்குரு நாதர் ஆசியினால் உயிர் பெற்று எழுந்தாய். உயிரற்ற உனது உடலை சற்குருநாதரின் மடிமீது கிடத்தினேன். குழந்தை இறந்த துக்கத்தில் உனது தாயார் மூர்ச்சையாகிப் போனார்கள். நீ இறந்து விடவில்லை என்றும் மரணத்தை எண்ணி ஜெபம் நடைபெறுகிறது என்றும் கூறினார். மரணத்தை எண்ணி இவன் வலிமையை அடைவான் என்றார். அந்த சமயத்தில் எனக்கு அவர் கூறியது மனதில் தெளிவாக விளங்கவில்லை. இன்றோ ஒவ்வொரு கணமும் உனது மனப்போராட்டம் பற்றியே என்னை நினைக்கத் தூண்டுகிறது” என்றார். மேலும்,

“மற்றவர்கள் வாழ்வைவிட உனது வாழ்வு வித்தியாசமானது என்பதில் மாற்றுக் கருத்து ஏற்படக் காரணமில்லை. வேதம் மரணத்தை எண்ணி தியானம் செய்யுமாறு கூறுகிறது. உனது வாழ்விலும் அதுதான் செயல் படுகிறது. உனது ஆன்ம வலிமையை உணரமுடிகிறது. ஆனால் உனக்கு உதவ இயலாத எனது நிலையைப் பற்றி என்ன கூறுவது? பவானி செல்வாய் அப்பா. ஆறு ஆண்டுகள் உன்னை காண இயலாது என்றுதான் எனது உள்ளம் கூறுகிறது. தவ வேள்வி நடத்தப் போகும் உன்னை எண்ணிப் பூரிப்பு அடைகிறேன். உன்னுடன் இருக்கப் போகும் நாகலக்ஷ்மி அம்மனுக்கு ஆலயம் ஒன்று உருவாகும். இன்று அதனை மனக்கண்களால் காண்கிறேன். உனக்கு என்னுடைய பரிபூரண நல்லாசிகள்” என்று கூறித் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்து ஆசிகள் அருளினார். கட்டிலில் அடிபட்ட வலியுடன் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தனது தகப்பனாரின் அருகில் நமது சுவாமி சென்றார். கைகூப்பி வணங்கி நின்றார். பவானி சென்று வர உத்தரவு வேண்டும் எனக் கேட்டார். அவர் அதனை மறுக்கவும் இல்லை, ஆமோதித்துச் சென்று வா எனக் கூறவும் இல்லை. உனதிஷ்டம் என்று மட்டுமே சொன்னார். எழுந்து கட்டிலின் மீது வாய்ப்பாக அமர்ந்து கொண்டார்.

நமது சுவாமியைப் பார்த்து, “நாகராஜா உனது வாழ்வில் உன்னிடம் மிகப் பெரிய குறை உள்ளது. உன்னுடைய குறிக்கோளே உன் மனதை மிகவும் ஈர்ப்பதாக உள்ளது. உனது குறிக்கோளின் கன பரிமானம் கண்டு வியந்து போவதாகத் தெரிகிறது. அதனை அடைவதற்கான வழிவகைகள் மற்றும் வழிமுறைகள் இவைகளைப் பெரிதாக எண்ணாமல் விட்டு விடுகிறாய் என எண்ணுகிறேன். சில சமயங்களில் உனது சாதனைகளில் நீ தோல்வி அடையக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார். தோல்வி உண்டாகக் காரணமே உனது செயல்களில், அதன் வழிமுறைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான். உனது குறிக்கோளை அடைய நல்ல பாதையை வகுத்து அதனை முழுமையாகச் செப்பனிடு. பாதையைப் பலம் வாய்ந்ததாக ஆக்கு. பாதையை சரி செய்தால்தான் அறுவடை செய்த வெள்ளாமை ஒழுங்காகக் களம் வந்து சேரும். பலனும் கிடைத்து விடும்” என்றார். பாட்டி சற்று தூரத்தில் நின்றபடியே புன்னகை பூப்பது தெரிந்தது. தந்தை சுவாமி விவேகானந்தர் ரசிகர். உபதேசமும் பலமாகத்தானே இருக்கும். சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவர் அவர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button