அறிந்தோர்க்குப் பவானி சங்கமம்.

512

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

14•09•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(441) மனிதனே புனிதன் —
அறிந்தோர்க்குப் பவானி சங்கமம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பவானியில் இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகள் நதிதேவதைகளாக இங்கு ஒன்று கூடி சங்கமம் ஆகின்றது. மூன்று நதிகளும் மூன்று வழிகளைக் காட்டுகின்றன. இச்சை என்னும் நதி பக்தியின் மேன்மையைக் காட்டி “அன்பில் ஒன்று படுதல்” என இயம்புகிறது. இரண்டாவது கிரியை என்னும் நதியானது கர்மாவைச் சுட்டிக்காட்டி, “செயலோடு ஒன்றுதல்” என்பதனை விளக்குகிறது. மூன்றாவது மறைமுக நதியானது ஞானத்தை அறிவிப்பதாக, அறிவின் முதிர்ச்சியில் “ஒளியோடு ஒன்றுபடுதல்” என சங்கமேஸ்வரர் ஆலயத்தில் காவேரி, பவானி, சரஸ்வதி எனப்படும் மூன்று நதிகள் கூடுதுறையில சங்கமமாகி முழக்கமிடுகின்றன. அறிவின் விருத்தியை நாடி வருபவர்கள், தோஷங்கள் தீரப்பரிகாரம் தேடி வருபவர்கள் மற்றும் புண்ணியம் பெற ஓடி வந்து செய்த பாவத்தை இங்கே விட்டுவிட்டுச் செல்பவர்கள் என எண்ணிக்கை என்பதில் அடங்காதோர் கோடி கோடி. அன்பர்கள், அறிவாளிகள், பற்றுக்களுடையோர் எனப்பட்ட அநேக மக்கள் ஒருங்கு கூடிச் சங்கமிக்கும் இடம் இதுவே ஆகும். நல்லோர், தீயோர் அவர் அவர்களின் எண்ணப்படி வாழ வைத்து அருள் தந்து செயல் உறுகின்ற தெய்வீக சக்தி மகிமை பொருந்திய இந்தச் க்ஷேத்திரம் இனிதாய் விளங்கி வருவதால், உணர்வு நிலை அறியாத பக்தனுக்கு பவானி ஓர் அதிசயம் என்றால் அது மிகையாகாது. உண்மைக் காரணம் உலக மக்களை நேசித்த விஸ்வா மித்திர பிரம்மரிஷி தவம் புரிந்து ஸ்ரீ காயத்திரி சக்தி தேவியின் தரிசனம் பெற்றதும் பவானியில்தான். மற்றொன்று ஆதி சங்கமேஸ்வரர் ஆலயம் அநேக தெய்வீக ரகசியங்களை உள்ளடக்கிக் கொண்டு அமைதியான மோனதவத்தில் ஆழ்ந்து இருக்கின்றது. ஸ்ரீ சங்கமேஸ்வரர், அறியாமை இருளை அழித்து, என்றும் அழிவே இல்லாதவராய், பக்தர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கும் ஸ்தலம் பவானி. அநேக ஞானியர்களும், தவயோகினிகளும் பவானியை நாடி வந்து செல்கின்றனர்.

நமது சுவாமி பவானி வரும் சேதியை , ஞானயோகி திரு SSM சுப்பிரமணியம் அவர்களுக்கு, அவரது புத்திரி திருமதி வேணியமாள் காமாட்சி சுந்தரம் அவர்கள் வாயிலாகத் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. ஞானயோகியை சந்தி்ப்பதற்கு முதல் நாளே புறப்பட ஆயத்தமானார். தாயார் திருமதி பாப்பம்மாள் அவர்களின் உத்தரவைப் பெற்றுக்கொண்டார்.
ஞானத்தின் வடிவமாக விளங்கும் பாட்டி திருமதி பொன்னம்மாள் நாச்சியார் அவர்களின் உத்தரவைத் நாடிப் போனார். பாட்டி அவர்கள் கல்லா ஞானத்தைப் பெற்றவர். சித்தர் தம் அருளைப் பெற்றவர். அவரை நமது சுவாமி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அவரோ, ” மகனே நாகராஜா, உனது உடலினுள் அமைந்துள்ள ஐந்து பொறிகளையும், வெளிப் புலன்களின் ஆசைகளில் இருந்து அடக்கி வைக்க வேண்டும். உன்னுடைய ஆற்றல்கள் அனைத்தையும் ஒளி அறிவினைப் பெற வேண்டி முயற்சி செய்து கொண்டு இருப்பாய். மனதையும் மனதின் எண்ணங்களையும் ஒருமுகப் படுத்தி, ஆகாய கேந்திரத்தில் செலுத்திக் கொண்டே இருப்பாய். மனதும், பொறிகளும் அடக்கிய ஒருமையில் நிலை பெற்று இருப்பாய். சற்குரு நாதர் அருளாசியினால் நீ பாடிய இறை சக்தியின் பாடல்களை சமயம் வாய்க்கும் போதெல்லாம் பாடி மகிழ்வாய். தியானத்தின் பிரார்த்தனையில் லயமாகி இன்புற்று ஆத்மாவின் கனலையும், குளிர் தென்றலையும் அனுபவிப்பாய். அதனையே பலம் வாய்ந்த அடித்தளமாகக் கொள்வாயாக. எப்போதும் புத்துயிராய் விளங்கிக் கொண்டே இருந்தால் நம்முடைய கடந்தகால வினைப் பயன்களில் இருந்து விடுபட்டுத் தூய்மை நிலை அடைந்து வாழ்வோம்” என்றார். நல்ல ஒரு ஆசீர்வாதம் சுவாமி பெற்றார்.

பவானி புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு அநேகமாக விஷயங்கள் நாசூக்காக, சமாதி யோகத்தில் இருந்த சற்குரு நாதரால் உணர்த்தப்பட்டது. ” அவர்கள் அங்கு சத்தியம் வாங்கிடப் பால் தருவார்கள். சாப்பிடப் பால் கொடுத்தால் எனது உத்தரவின்றி சாப்பிட்டு விடாதே ” என அறிவுறுத்தினார். அதன் காரணம் நமது சுவாமி அவர்களுக்குப் புரியவில்லை. தனது பாட்டி அவர்களிடம் விளக்கம் கூறும்படி கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்டு பாட்டி, “மகனே அவர்கள் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலபேரை நம்பி ஏமாந்து போய் இருக்கலாம். சிலர நம்பிக்கை துரோகம் செய்திருப்பார்கள். அதன் காரணமாக முதலில் சாப்பிடப் பால் தருகிறார்கள். பால் சாப்பிட்டவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்பது வழி வழியாக வந்த ஒரு நம்பிக்கை. சற்குரு நாதரின் வார்த்தைகளுக்கு அநேக அர்த்தங்கள் இருக்கும். எனது உத்தரவு இன்றி சாப்பிடாதே என்பதில் இருந்து புனிதமான அர்த்தம் மறைந்துள்ளதை எனது மனது நன்கு உணர்கிறது. எனவே உள்ளத்தைக் தெளிவாக வைத்துக் கொண்டு புறப்படு ” எனத் தெளிவாக உரைத்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button