பழித்துரைக்கும் அகங்காரம்.

615

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

16•09•2017,
வெள்ளிக் கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(443) மனிதனே புனிதன் —
பழித்துரைக்கும் அகங்காரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியின் அருகில் அமர்ந்து கொண்ட நால்வரும் அன்பான முறையில் வார்த்தை பேசிடாமல், வேண்டாத நபரிடம் வெறுப்புடன் பேசுவது போல் பேசினர். பேச்சிலிருந்து அவர்களின் குணவிசேஷசம் என்ன என்பதைப் புரிந்து கொண்டார். சுவாமி அவர்களிடம், “புதியவன் ஒருவன் ஏதாவது பற்றி விசாரிக்க வந்தால், இப்படித்தான் அவமரியாதையாகப் பேசுவீர்களா? இதைத்தான் உங்கள் குருநாதர் கற்றுக் கொடுத்தாரா? ” என்று கேட்டதும் திகைத்துப் போயினர். மேலும் சுவாமி, “பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ளா விட்டாலும் இகழ்ச்சி பேசுவது, நமக்கு நாமே தீங்கு செய்வதற்கு ஒப்பாகும். எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அல்லது எண்ணினாலும், உண்மை என்ற ஒன்றை மறந்து விடும் போது அதற்கு உண்டான பலனை இறை சக்தி நமக்குக் கொடுத்தே தீரும்” என்றதும் அவர்கள் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். “மனிதர்களுக்கு நன்மையைத் தருவதோ அல்லது தீமையை உண்டாக்குவதோ எனப்படும் சகல மாற்றங்களும், ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ளே இருந்துதான் அது இயங்கிக் கொண்டே இருக்கிறது. அவைகள் வெளிப்படும் போதுதான் மனித இயல்பை அறிந்து கொண்டிட முடியும் என்றனர் ஆன்றோர் பெருமக்கள். வலிமை மிகுந்த நல்ல மாற்றங்கள் தான் மனித சமுதாயத்திற்கு ஏற்றது. அதற்குத் தனிமனிதனின் நிலை உயர்வு அடைய வேண்டும் ” என்றார். இதனை அவர்கள் உணர்ந்து கொண்டதால் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அப்படி பவானிக் காரர்கள் நமது சுவாமியிடம் தியான சங்கத்தைப் பற்றிக் கூறிய கருத்துத்தான் என்ன?

அவர்கள் நமது சுவாமி அவர்களிடம், ” பைத்தியத்தின் முக்தி நிலைச் சங்கம் ” என்று கூறினார்கள். இது எவ்வளவு பெரிய இகழ்ச்சியான செயல். அகங்கார குணத்தின் வெளிப்பாடு இது என்பதால் நமது சுவாமி, ” ஆன்மிக வளர்ச்சியின் முழுமையை அடைய, உங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளவும் வேண்டும் ” என உணர்த்தினார்.
“ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் அல்லது பாமர ஜனங்களாக இருந்தாலும், தாங்கள் செய்து விட்ட குற்றம், குறைகளை தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற குடும்ப உறுப்பினர்கள் அல்லது தங்களது நண்பர்கள் மீதே திருப்பி விட்டு உத்தமர்களாக மாறி விடுவார்கள். தான் குற்றம் செய்து இருந்தாலும் அதற்குத் தான் காரணமல்ல அதோ அவர்தான் எனக் கூசாமல் கூறி வருவதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இன்னும் ஒருபடி மேலே சென்று, “உனது கோயிலை ஒன்பது வாரங்கள் வந்து சுற்றி வழிபட்டிருக்கிறேன். எனக்கு என்ன செய்தாய்? எனது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் நீதான்” என்று தெய்வத்தை நொந்து நிந்தனை செய்து வருவதும் வாடிக்கைதான் ” என்றார். தங்கள் குருவின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக தியான சங்கத்தைச் பற்றிக் கற்பனையாகக் கூறிவிட்ட, தவறான அபிப்பிராயத்தை அவர்கள் உடனே மாற்றிக் கொண்டு விட்டனர். வினை விதைத்தவன் வினையை அறுவடைசெய்திட வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

“மனித சமுதாயத்தில் எந்தவித உயர்ந்த நோக்கமும் இன்றியே அநேகம்பேர் அறிவின் ஒளி பிரகசிக்காத வாழ்வில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். லட்சியம் உள்ள ஆன்மிகவாதி செய்யத் துணியும் குற்றங்களைவிட, லட்சியநோக்கு இல்லாதவர்கள் பழிபாவங்களுக்கு அஞ்சுவதே கிடையாது. அவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தீமைச் செயல்களை வாழ்வில் துணிந்தே செய்து வருகிறார்கள். பிறர் மனம் நோகும் என்றெல்லாம் நினைப்பதற்கு அவர்கள் சிந்தனாசக்தி இடம் தருவதில்லை. அதுவே பொழுது போக்காக எண்ணி இருப்பதால்தான் சமுதாய சேவை என்பதை அறிந்திருக்க வில்லை . எனவே எதிர் காலம் என்பது வருத்தத்தைத் தருவதாக அமைந்து விடும்போது தான் எண்ணம் போல் வாழ்வு என உரைத்த உத்தமர்கள் பற்றிய எண்ணமே வருகிறது. இதனை வரலாறுகள் சுத்தமாகத் தெரிவிக்கின்றன. மனிதனிடம் ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாடுகளை, அவ்வப்போது நீக்குவதற்கு உதவியாக, ஆத்மபலம் பெற்றிட்ட அறிஞர் பெருமக்கள் செயல்பட்டுக் கடமைகளை ஆற்றியுள்தை சமுதாய சேவை என்றே, இயற்கையின் இயல்பிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் கருத்து என்னவென்றால் தனிமனிதன் தன்நிலையில் உயர வேண்டும், ஆத்மபலம் பெற வேண்டும் என்பதாகும்”‘
நமது சுவாமி அவர்கள் தங்கும் விடுதிக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். விடுதியின் மேலாளர் அலட்சிய நோக்கில் நடந்து கொண்டாலும், நமது சுவாமி அவருக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அன்று இரவில் கண்கள் இமையாது பிரார்த்தனை செய்திடும் அக்ஷி மார்க்க தியானத்தில் ஈடுபட்டு, மனமும் உடலும் சோர்வுறா நெறிநின்றார்

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button