உண்மையைக் காட்டவல்ல தூயமனம்!

344

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•09•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(437) மனிதனே புனிதன் —
உண்மையைக் காட்டவல்ல தூயமனம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானி அவர்கள் பேசிக்கொண்டு இருப்பது எண்ணங்களே அற்ற ஓர் தூய்மையான மனதில் இருந்து என்பதை நமது சுவாமி அறிந்து கொண்டார். அறியாமை இருளை அறிவின் ஞானத்தால் அகற்றி விட்டு, அவ்விரண்டையும் கூட விட்டு விட்டு, எப்போதும் இறைவனைப் பற்றுக்கோடாகப் பற்றிக் கொண்டு இருப்பவர் எவரோ அவருக்கே இத்தன்மை சாத்தியம். அவர்களுக்கே கூட இறைவன் சிலவற்றை மறை பொருளாக வைப்பதும் (காரண, காரிய, செயல் உண்மை) இறைவனை வழிபடும் மக்களின் நன்மையின் பொருட்டே! ஞானி அவர்கள் கூறுகிறார், “நாகராஜா சுவாமி இது இறைவனை உணர்ந்த ஆத்மார்த்த பக்தனின் செயலாகிய ‘தன்உணர்வு நிலை.’
இதனை சாந்தம் அல்லது அமைதி நிலை என்றும் கூறுவர். தவத்தின் போது ஐம்புலன்களும், தனது செயல்படும் பாதையில் அங்குமிங்கும் அலைந்து திரியாமல், உறங்கி விடாமல், விழிப்புணர்வுடன், தன்னைச் சுற்றிலும் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கவனித்த வண்ணம், அனைத்தையும் அறிந்து கொண்டு, தன்னுணர்வுடன் உணர்வு பூர்வமாக நிலையாய் இருக்கின்ற அமைதி நிலையே ஆகும். இதனைத்தான் மகான்கள் ஆன்மவிழிப்பு நிலை என்று கூறினார்கள். மனிதன் உள்ளினுள் உறங்கும் ஆன்மா விழிப்படைந்து, தன் உணர்வுடன் இயங்குகின்ற போதுதான் சக்தியின் முழுமையாக இறை நிலையாய் அது துலங்குகின்றது. அப்போது மனதின் வாயிலாகத் செயல்பட்டுக் கொண்டிருக்கும், ஐம்புலன்களின் கதவுகள் அடைக்கப் படுகிறது. அதனால் மனதின் ஆற்றலை எத்தகைய செயலுக்கும் பயன்படுத்தினால் அக்காரியம் வெற்றிகரமாக அமையும். ஆன்மிக சாதனையாளர்கள் இப்படித்தான் வெற்றி இலங்கைச் சுலபமாக அடைந்தார்கள்.”

” உயர்ந்த உன்னதமான தெய்வீகமான யோக நிலையைப் பெற்றவர்கள், அனுதினமும் தொடர்ந்து யோகப் பயிற்சி களைச் செய்து வரவேண்டியது அவசியமான செயலாகும். மனம், புத்தி இவைகள் அறிவுடைய தன்மையாக மாறி ஆற்றல்கள் மேம்பாடு அடைந்து விட்டிருக்கும். இந்த நிலையில் யோகியானவன் மிக மிக கவனமாகக் தொடர்ந்து யோகதவப் பயிற்சியில் ஈடுபட்டு அதனை(வெற்றியை) நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் தனது நிலையில் இருந்து மற்றொன்றை(வீழ்ச்சியை) நிச்சயமாக அடைந்து விட வேண்டியது நேரிட்டுவிடும். யோகியின் வெற்றியை, அவனது அனுபவங்களை மனங்கடந்த எந்த அறிவினாலும் ஒரு போதும் மற்றவர்களிடம் விளக்கம் கூற முடியாத செயலாகும். யோகி தனது ஆன்மானுபவங்களைத் தன்னுடைய இருதயபூர்வமாக உள்ளத்தினால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். கற்ற கல்வியினால் அல்லாது இஃது இயல்பான உணர்வினால் அறிவது என்பதே வேதத்தின் வாக்காகும். இறுதி “உண்மை” எனப்படும் இதை அறிந்து உணர்ந்து கொண்டவனே வெற்றியாளன். ஒரு ஆன்மிகவாதி மிகவும் சுலபமாக இறையருளைப் பெற்றுவிட முடியும். இதற்கு மூன்று அருட்படிக்கட்டுக்களைக் கடந்து செல்ல வேண்டியதாயிருக்கிறது.
முதலில் அனுபவத்தை ஏற்படுத்தும் இறையருளாகிய ‘உண்மை’ என்றும், எப்போதும் ‘இருக்கிறது’ என்ற நம்பிக்கை கொண்டு அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இரண்டாவது உண்மையின் ‘உண்மை’ நிலையை மிகுந்த நம்பிக்கையுடன் ‘இருக்கிறது’ என உணர்ந்து கொள்ள வேண்டும். மூன்றாவது இறைவனின் ‘உண்மை’ அனுபூதி நிலையாக என்றும் ‘இருக்கிறது’ என்றும், அது இயல்பாகவே தனக்குள்ளே வளர்ந்து வருகிறது என்ற அதீத நம்பிக்கையைக் கொண்டு, ஒரு வெற்றியாளன் செயல்பட வேண்டும்” என்று ஞானி தனது உள்ளத்தில் இயல்பாக வெளிப்படும் ‘உண்மையை” நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் வெளிப்படையாகப் பேசினார். அன்று முழுவதும் அவர் கிராமத்தில் தங்கியிருந்து நமது நாகராஜன் சுவாமியைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். நமது சுவாமி அவர்களிடம் ஞானி, “மறைக்கப்பட்ட கோயில் வெளிப்படுவதற்கு, மறைக்கப்பட்ட தவத்திரு நாகராஜன் சுவாமி தான் வரவேண்டும் என ஸ்ரீ அகத்தியர் பெருமான் ஏட்டில் எழுதி வைத்து இருப்பதை அறிவேன். இதன் சூட்சுமத்தை நீங்கள் அறிவீர்கள். எனது எண்ணத்தின் ஈர்ப்பு சக்திக்கும் அப்பால் இது மறைக்கப்பட்டிருக்கிறது. இதன் உண்மையை நான் அறியக் கூறுங்கள் சுவாமி ” என்று அவர் கேட்கும் பொழுது நமது நாகராஜன் சுவாமி அவர்களின் காதில் தெய்வீக நாதம் ஒலிப்பது கேட்கத் துவங்கியது. அத்துடன் அந்த செய்தி சற்குரு நாதரிடம் இருந்து நமது சுவாமிக்குத் துல்லியமாகக் கேட்டது. “மகனே நாகராஜா, மறைக்கப்பட்ட ஸ்ரீ ராமர் காலத்திய, ஸ்ரீ அனுமான் தவம் புரிந்த குகையுடன் கூடிய பரிகார ஸ்தலம், 2005 – ஆம் ஆண்டு வெளிப்படும் வரையில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். நீ ஞானியை வெள்ளிங்கிரி மலைக்குப் போய் தவம் புரியச் சொல்வாய். பவானி சென்றாலும் , மெய்யறிவினால் மெளனம் காப்பாய் ” என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button