கைலாயம் சென்ற ஞானி!

374

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•09•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(438) மனிதனே புனிதன் —
கைலாயம் சென்ற ஞானி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி மெளனத்தைக் கலைத்து, ” ஐயா ஞானி அவர்களே. ஒவ்வொரு மனிதனும் தனது நிலையை அறிந்து கொண்டு, அதில் இருந்து ஒருபடி முன்னேற்றம் அடைய முயலவும் வேண்டும். மீண்டும் படிப்படியாக முன்னேறி தான் தனது லட்சியத்தையும் அடைந்துவிடவேண்டும். தனது அறிவை விருத்தி செய்ய முயல வேண்டும். உறுதியுடைய மனதில் அமைதியைை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மனிதனின் அறிவு தெய்வீகத்தில் பொருந்தியிருக்க வேண்டும். ஒரே நிலையான, உறுதியான புத்தி, செயல்படும் போது, பேசும் வார்த்தைகள் அர்த்தம் உள்ளதாக வெளிப்படும். மெளனமான ஜெபத்தால் மனிதனின் செயல்கள் வெற்றி உடையதாக மாறி விடும். ஓ ஞானியே நீ வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று, அர்ஜூனன் தபஸ் செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற இடம் நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு வரும் தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு சித்தருடன் ஐந்து ஆண்டுகள் தவம் புரிந்து வரவேண்டும். ஐந்து ஆண்டுகள் சென்றபிறகு ஆறாவது ஆண்டில் கண்பார்வை வரப்பெற்று விளங்குவீர்கள். அன்று பெளர்ணமி தினமாக இருக்கும். அனைத்து ஆன்மிக பக்தர்களும் காணும்படி காலை சூரிய உதயம் தொட்டு மாலை வரையில், கண் பார்வை வரப் பெற்ற புறக்கண்களால், சூரியனை உற்று நோக்கும் வித்தை கைவரப் பெற்றிருக்கும். அன்றைய தினத்தில் நானும் வெள்ளிங்கிரி மலைக்குச் வந்து ஸ்ரீ மனோன்மணித் தாயார் சந்நிதி அருகே மீண்டும் உங்களைச் சந்திப்பேன். நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையை உங்களது திருவாக்கினால் யாம் கேட்டு மகிழும் பாக்கியத்தைப் பெறுவோம். உணவு உண்ட பிறகு உங்களது வெற்றிப் பயணம் இனிதாகத் துவங்கி வாழ்த்துக்கள் ” என்றார் ஸ்ரீ நாகராஜன் சுவாமி.
மனப்பக்குவம் உடைய அவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

கிராமத்தில் இருந்து பண்ணையகாரர் திரு.காளியப்பன் தலைமையில் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று, மூலிகைகள் கொணர்ந்து வரும் பயணக் குழுவுடன் சேர்ந்து ‘ஸ்ரீ ஞானி ‘ அவர்கள் புறப்பட்டுச் சென்றார். மூன்று நாட்கள் சென்ற பிறகு பயணக் குழு திரும்பி வந்து, அதிசயக்கத் தக்க தகவலுடன் சுவாமியிடம் வந்து கூறினர். பண்ணையகாரர் திரு காளியப்பன் அவர்கள் ஞானி அவர்களால் அதிர்ச்சி அடைந்து இருந்தார். பண்ணையகாரர் கூறிய தகவலின் சுருக்கம் இது தான். “வணக்கம் சுவாமி. எங்களுடன் வந்த ஞானி அவர்கள் கண்பார்வை அற்றவர் என்று எங்களால் நம்பவே இயலவில்லை. நாங்கள் செல்லும் போது தனது நண்பரின் கையைப் பற்றிக் கொண்டு எங்களின் பின்னால் வரும் அவர்கள், நாங்கள் வெகு தூரம் சென்று ஓய்வு கொள்ள அமரும் முன்பு ஸ்ரீ ஞானி அவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று அங்கே இருக்கிறார். அதனைக் கண்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். எங்கள் கண்களை எங்களால் நம்ப இயலவில்லை. அவர் மலைப் பயண காலத்தில் எதுவுமே சாப்பிடவில்லை. சுவாமி இருக்கும் மலைக்கு முன்பே ஸ்ரீ அர்ஜூனன் தபசுப் பாறை அருகே ஒரு வயோதிகர் மயிர் வளர்ந்து ஜடைமுடியாகி தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு கிடக்க நின்று கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் பெருநரிகள் நான்கைந்து படுத்துக் கிடந்தன. ஞானியுடன் வந்த நண்பரையும் நாங்கள் காணவில்லை. அவர் எங்கு தான் சென்றாரோ? ஞானி அவர்களின் உடைகளைக் களைந்து கோவணம் மட்டுமே தரிக்கச் செய்து, ஜடாமுடிப் பெரியவர் அழைத்துப் போனார். அங்குள்ள பெருநரிகளைக் கண்டு பயந்தே போனோம். அவைகள் பிரியமுடன் சப்தம் இட்டபடி ஞானியின் பின்னால் சென்றன. பெரியவர் ஞானியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். ஞானியின் முகத்தில் சாந்தம் நிறைந்த ஒளி பிரகாசத்துடன் துலங்கக் கண்டோம். எங்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் காட்டினுள் மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தோம். நன்றி சுவாமி ” என்றார். பிறகு அவர்கள் விடை பெற்றுச் சென்ற பிறகு நமது சுவாமி தியானத்தில் ஆழ்ந்து போனார்.

இரவு மழைக்கால அறிகுறியும், இடியும், மின்னலும் போட்டா போட்டியிட்டுக் கொண்டு இருந்தன. ஆனால் மழை மட்டும் பெய்யவில்லை. இரவு மூன்று மணிக்கும் மேல் ஆழியாற்றில் பேரிறைச்சலுடன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திரளாக ஊர்மக்கள் கூடி விட்டிருந்தனர். கணத்திற்குக் கணம் வெள்ளம் உயர்ந்து கொண்டே வந்தது. ஆற்றோரம் இருந்த குடிசைகள் அனைத்தையும் வெள்ளம் கொண்டு சென்றது. நீர்ப் பிடிப்பு வனப்பகுதி எங்கும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெள்ளம் வடிந்த பாடில்லை. விடிந்த பிறகு ஆத்துப் பொள்ளாச்சி வயலில் இருந்து பருவகாரன் ஆறுமுகம், விருப்பம் இல்லாத செய்தியைக் கொண்டு வந்தார். “அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை வெள்ளம் கொண்டு போனது. அது போதாது என்று…..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி !வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button