உணவே மருந்து, உணர்வே இறை விருந்து!

220

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

22•08•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(418) மனிதனே புனிதன் —-
உணவே மருந்து, உணர்வே இறை விருந்து!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆழியாற்றின் நீரினுள் இருந்து மணலை இரவும், பகலும் எடுத்து வந்து கரையினில் கொட்டிக் குவிக்க அநேக ஆட்கள் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். ஆட்களுக்கு நல்ல வருமானம் தரும் தொழிலாக அன்றைய நாட்களில் அது இருந்தது. மதிய நேரத்தில் மணல் லாரிகள் காப்பிக்கடைகள் முன்பாகப் பூவரசன் மரங்களின் நிழலில் நின்று கொண்டிருக்கும். ஓட்டுனர்கள் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் இறைச்சி உணவு உண்ணச் செல்வார்கள். பாரம் ஏற்றுபவர்கள் தூக்குப் பாத்திரங்களில் கொண்டு வந்த பழைய சோற்றை, மணலின் மீதோ, மரங்களில் சாய்ந்து கொண்டு மண் தரையிலோ அமர்ந்து கொள்வார்கள். காப்பிக் கடைகளில் இவர்களுக்கென்றே புளித்த மோரை விற்பனைக்கு வைத்திருப்பார்கள். வாழை மட்டையில் வைத்திருக்கும் எலுமிச்சை ஊறுகாய்கள், சிறிய நாட்டு வெங்காயம் மளிகைக் கடைகளில் வாங்கிச் செல்வார்கள். அவர்கள் அனைவரும் தூக்குகளை மடியில் வைத்துக் கொண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கிராமக் குழந்தைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு கோகுலும், மெளலியும் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பார் கள். அவர்கள் உடல் வலிமை மிகுந்தவர்களாக இருப்பதற்கு அவர்கள் சாப்பிடும் உணவு தான் காரணம் என்று கோகுல் கூறுவார். அப்படியானால் எனக்கும் அந்தச் சாப்பாடு வேணும் என்று மெளலி அடம் பிடிப்பார். சவுக்கைக் காட்டித் செல்லமாக மிரட்டி தம்பியைத் தாயார் முன்பு அழைத்துப் போவார். தாயார் சோற்றில் மோர் ஊற்றிச் சிறிய வெங்காயம் உரித்து வைத்து விளக்கின் முன்பாக வைப்பார்கள். குழந்தைகள், ” உணவைப் சாப்பிட வரவேண்டும்” என்று குலசாமி யை அழைப்பார்கள். “இறைவன் வந்து சாப்பிட்டாரா அம்மா “என்று பிரியமுடன் குழந்தைகள் கேட்க, “ஆம், சாமி சாப்பிட்டு விட்டார். இனி நீங்கள் சாப்பிடலாம் ” என்று தாயார் சொல்லிய பிறகு, அதனைப் பிரசாதமாக உண்ணுவார்கள். உணவு நேரத்தில் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகள் மனதில் ஆழப்பதிய வைத்தார்கள் திருமதி மீனாம்பாள் நாச்சியார்.

சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், அவர் காட்டிய வழியில் இறைவழிபாடும், அதற்குரிய பாடல்களை மாலை நேரத்தில் பஜன் செய்துவிட்டுப் பிரார்த்தனையிலும், தியானத்திலும் இருப்பது சுவாமி யின் குடும்பத்தினர் வழக்கம். இதனால் எந்தச் சூழ்நிலையிலும் எதனையும் எதிர்கொள்ளும் மன நிலை வாய்க்கப் பெற்றார்கள். ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதரிடம் பக்தி பூர்வமான அன்பைச் செலுத்தி, அவரைத் தங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது வரையிலும் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடின்றி, மனம் ஒன்றி, நேர் மறையான எண்ணங்களில் வாழ்வும் கற்றுக் கொண்டார்கள். இறைவனின் வழி சென்றால் பிறவாநிலை அடைந்து, இறவா நிலையில் இறைசக்தியுடன் ஒன்றிவாழவே என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்தார்கள். இறைவனை எண்ணித் தியானம் செய்வதைத்தான், அதனால் உண்டாகும் நன்மைகளைத்தான் சாகாக்கல்வி என்று அறிவுறுத்தப்படுகிறது. தீய குணங்களை நீக்கிய மனிதனின் உள்ளத்தில் என்றும், எப்போதும், அமைதி நிலவிக் கொண்டு இருப்பதினால் அவனுள் அடக்கம் உண்டாகும். அவனுள் இருந்த கவலைகள் அனைத்தும் இறை உணர்வுகளால் நீங்கி விடும். இறைவனது நாட்டம் ஒன்றே அவனது குறிக்கோளாகும். நமது சுவாமி அவர்களின் குடும்பத்தினர் இதனில் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தியானம் எதற்காக? ஏன்? செய்ய வேண்டும் என்ற வினாவினை ஸ்ரீ மீனாம்பாள் நாச்சியாரிடம், குழந்தைகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவர்கள் கூறிய பதிலைக் குழந்தைகள் புரிந்து கொண்டார் களா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களது செயற்பாடு அதனை நன்கு உணர்ந்து கொண்டவர்களாகவே காட்டியது. “ஒரு மனிதன் தியானம் செய்யும் போது அவன் தனது உள்ளத்தில் உணர வேண்டியது, ஆத்மாவாகப் பிரகசிக்கும் இறைவனைத் தான். மனிதன் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியதும் ஆத்மாவாகிய பராபரத்தைத்தான். சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டியதும் ஆத்மாவைப் பற்றித்தான். தியானகாலத்தில் நிலைத்து நிற்க வேண்டியதும் ஆத்மாவில் தான். இதனால் மனிதன் உலகம் அனைத்தையும் அறிந்து, உணர்ந்து, தெளிவு பெற்றவனாக மாறுதல் அடைகின்றான். ஆனால் மனிதன் உலகில் உள்ள அனைத்தும், இறைவனாகிய ஆத்மாவினின்றும் வேறுபட்டவை, என நினைக்கும் போது முதலில் கூறிய அனைத்தும் அவனைக் கைவிட்டு விடுவதும் உண்மை. எனவே கேள்வி ஞானமும், கேட்க வேண்டியதும், காண வேண்டியதும், சிந்தனைகளும் , உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவில்தான் நிலை பெற்று உள்ளது. அதுதகைய ஆத்மா இறைவனுடன் நிலை பெற்று உள்ளது “என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button