கைவரத்தக்க பொருளே அருள் ஞானம்.

286

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•09•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(432) மனிதனே புனிதன் —
கைவரத்தக்க பொருளே அருள் ஞானம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“இறைவனாகிய பராபரம் எப்போதும் பிறவாத மகா ஆத்ம சக்தியாய், யாவற்றிற்கும் தலைவனாய், உயிரின் உணர்வு நிலையாய் மனிதனின் இதய வானில் வாழ்கிறான் என்று அக ஆத்ம ஞானம் பெற்ற ஞானியர் கூற்று. அத்தகைய ஒப்பில்லா இறைவனைப் புலனடக்கத்திலும் உலகப்பற்றைத் துறப்பதினாலும்,
தவம் புரிவதனாலும், தான தருமங்கள் செய்வதினாலும், புனிதமான வேள்விகளை இயற்றுவதனாலும், புனிதமான வேதங்கள் வாயிலாக வாசிக்கும் திறத்தாலும், அன்புடன் கூடிய பிரார்த்தனை வணக்கங்கள் மூலமாகவும் அடைந்து விட முடியும் என்கின்றனர் இறை அன்பர்கள்! உண்மைதான். இறைப்பற்று வந்தபோது புறப் பற்றுக்கள் நீங்கி விடும் என்கிற அசையா நம்பிக்கையில் தான் இறைவனை நோக்கித் தங்கள் பிரயாணத்தைத் துவங்கி விடுகின்றனர். இறைவனைத் தவிர உலகில் வேறொன்றையும் அத்தகைய புனிதர்கள் நாடுவதில்லை. அவர்கள் மூச்சில் இறை ஜெபத்துடன் கூடி உயிர் உணவை நுகர்கின்றனர். ஒரு போதும் பிறவாதவனும், எப் போதும் முதுமை அடையாத வனும், மரணமில்லாப் பெருவாழ்வில் திளைப்பவனும், பிரபஞ்சத்தின் பரம் பொருளும், அச்சத்தைப் போக்குபவனும், அழிவில்லா அமரத்துவத்தைத் தந்து ஆதரிப்பவனும் ஆகிய பராமரத்தைப் புகலிடமாய்க் கொண்டு விடுகின்றனர். ” இந்த ஞான விஷயங்களை முற்றிலும் கிரகித்துக் கொள்ளும் மனநிலையில் இளந்துறவி இல்லாததால், மீண்டும் மீண்டும் குருநாதருடனான அனுபவங்களையே கேட்கத் துவங்கினார். அதனைப் பற்றியும் எடுத்துக் கூறலானார். “எனது மனதினுள் குருநாதர் நினைப்பது கேட்கத்துவங்கி விட்டது. இதற்குக் காரணம் மனதினுள் மெளனமாக பராபரமாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்து, ஆத்ம தவம் புரிந்ததால் அந்த ஆற்றல் ஏற்பட்டது. இன்னும் ஒன்றை எனக்குள் ஏற்படுத்தினார். வெப்ப சக்தியை உறைந்த நீராய் விளங்கும் பனிக்கட்டிக்குள் இருந்து ஈர்க்கும் மெளனஜெப முறையை மனதினுள் போதித்தார். பஞ்சபூதங்களுக்குள் மையத்தில் மறைந்துறையும் சுடாத வெப்ப சக்தியை ஈர்ப்பினுள் கொணரும் முறையை நாவசையா ஜெபத்தில் போதித்தார். அதனால் சரீரம் காற்றினில் மிதந்து மறையும் ஆற்றல் தன்மை உண்டானது. கிருஷ்ணபரமாத்மா இக்கலையில் வல்லுனராகத் திகழ்ந்தவரே!” என்றார்.

இளந்துறவி நாகபாபாவிடம், “ஐயனே தாங்கள் திண்டுக்கல் வந்து தங்கியிருப்பதின் மர்மம் என்னவோ? ” எனக் கேட்டார். அதற்கு நாக பாபா, “சற்குரு நாதர் தென்திசை நோக்கித் தமிழகம் புறப்பட்டு வந்தார்.எனது பயிற்சி பூர்த்திக்குப் பிறகு தமிழகத்தில் நாகர் கோயில் அருகே உள்ள மருந்துவாழ் மலைக்குப் புறப்பட்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர் எனது குருநாதர். நான் முதியவன் ஆயினும் என்னைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். எனது சற்குரு நாதர் அப்போது மிகவும் இளைஞனாக இருந்தார். தனது முதுமைக் காலத்தில் பழனியில் அவர் ஜீவசமாதி அடைய விரும்பினார். காலத்தைக் கடந்து வாழும் அவர் ஜீவனில் முழுமையாகக் கடவுளின் அருள் மட்டுமே நிரம்பியுள்ளது. அவர் தனது உண்மைச் சீடர்களுக்கு மெளனமாகவே அனைத்தையும் போதிக்கும் வல்லமை உடையவர். இதுவரையிலும் தீமைசக்திகளால் அவரை நெருங்க இயலவில்லை. தீமையை அகற்றும் சக்தி பெற்றவர். பாவத்தால் அவரை எதிர்க்க முடியவில்லை. சற்குரு நாதர் பாவமனைத்தையும் எரித்து விடுகின்றார். காம மோக தாபக் குரோதங்களை அவர் வென்று விட்டவர். சந்தேகம், ஐயப்பாடுகளுக்கு அப்பால் பயணத்தைத் தொடருபவர். சற்குரு ஈஸ்வரர் எப்போதும் அழிவில்லாப் பராபரமாகிய இறைவனுடன், மரணமில்லாப் பெருவாழ்வில் ஆத்ம உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். காலா காலங்களில் என்றும் வாழும் தகுதியை இறைவன் அருளால் எனக்குப் பெற்றுத் தந்தவர். அவரது சீடர்களுக்கு இவ்வுலகில் மரணத்திற்குப் பிறகும் இறைவனுடன் கலந்து வாழுகின்ற பாக்கியம் உண்டு எனப் புரியும்படி கூறினார். ”

ஆர்வம் மிகுதியில் இளந்துறவி,
“நாக பாபா சுவாமி இனித் தங்களின் நிலைப்பாடு என்ன என்று கூறமுடியுமா? ” என்று கேட்க அவரும், “எனது சற்குரு நாதர் ஒரு வருட காலத்திற்குத் தனது ஜீவசமாதியில் பஞ்சாக்கினி தவத்தை அனுஷ்டித்துக் கொண்டு இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார். அகஸ்தியரும் தனது ஏட்டுச் சுவடியில் தெய்வீகப் பரிகார ஸ்தலம் 2005 -ஆம் ஆண்டில், பொள்ளாச்சிப் பகுதியில் வெளிப்படப் போவதையும் ,அருகே தோப்புமலையில் சித்தர்கள் ஸ்ரீ வித்யா பீடத்தை ஏற்படுத்தி அதில் பரிகாரஸ்தலம் வெளிப்படப் பிரார்த்தனை மற்றும் யக்ஞங்கள் நிறை வேற்றுவதைக் குறித்துள்ளார் . அங்கு நான் அடிக்கடி சென்று வந்து கொண்டு இருக்கிறேன். ஆகாயசித்தனும் அப்பகுதியில் பிறந்து வளர்ந்து வருகிறான். மேலும்…”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button