பசி, தாகம், உறக்கம் அற்ற நிலை?

213

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•09•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(431) மனிதனே புனிதன் —-
பசி, தாகம், உறக்கம் அற்ற நிலை?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மகனே கேள், “இறைவனைப் பற்றுக்கோடாய்க் கொண்ட மனிதனின் உடல் ஒரு நாள் இம் மண்ணில் வீழ்ந்து விடலாம். ஆனால் இறைவன் அருளால் அவனது ஆன்ம உடல் அழிவற்றதாய், ஒளி மிகுந்ததாய், பெருநிலைப் பராபரமாய் எழுகின்றது. இறையருள் பெற்ற ஒளியாத்மாக்கள் வானின்ப உலகினுக்கும், அதையும் தாண்டி பேரின்பப் பேரிடங்களுக்கும், அதற்கும் அப்பால் ஆன்ம விடுதலைக்கும் அழைத்துச் செல்லும் பலவண்ணங்கள் நிறைந்த, நீண்ட நெடும் ஒளிப்பாதையைக் கண்டு கொள்கின்றனர். அகத்தில் ஒளி உடையவர்களாய் இறையருள் பெற்ற ஆத்மாக்களில் சிறந்த நற்செயல்கள் புரிந்தோர், அறிவைப் பின்பற்றிச் செல்வோர் ஆகியவர்கள் ஒளிப்பாதையை நோக்கிப் போகும் பொழுது, இருள் சூழ்ந்த ஆழமான இடங்களில் விழுந்து விடும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. அப்போதுதான் இறை நம்பிக்கையால் பெற்ற அருளால்
அவர்களின் அகத்தினுள் உருவான ஒளியைக் கொண்டு, மீண்டும் பேரின்பப் பெரு நிலைக்கு அழைத்துச் செல்லும் பலவண்ண ஒளப்பாதையை அடைந்து பயணம் மேற்கொள்ளுவார்கள். ஆன்ம விடுதலை பெற்று விடுவார்கள். ஆனால் அறியாமையில் மூழ்கியவர்கள் மரணத்திற்குப் பின்னர், ஆழம் மிக்க காரிருள் வான் மடுக்களில் வீழ்ந்து அதில் இருந்து விடுபடமுடியாமல், அவ்விடங்களில் துயரத்தை அடைகிறார்கள். புரியாத புதிர்கள் நிறைந்த மனித வாழ்வில், ஆத்மாவை அறிந்து கொண்டு அதன் அகஒளியில் திழைப்பவன் எவனோ, அவனுக்கே படைப்பின் உலகு திறக்கப்பட்டு, உன்னதமான அழிவில்லாப் பெரு நிலையை அடைந்து வாழ்கிறான். இதுவே வேத வாக்கியம்” என்றார்.

இளம்துறவி அவரிடம், “தங்களின் பெயர், பூர்வீகம் பற்றியும், தங்களின் குரு நாதரின் பெயர் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா ” என்று பெரியவரிடம் கேட்டார். பெரியவர் கூறுவார், ” மகனே, நான் கைலாய யாத்திரை சென்ற போது பலமுறை அவரை நான் கண்டிருக்கிறேன். பார்வதி குண்டத்தின் அருகே அமர்ந்து அவர் தவம் செய்யும் கம்பீரத்தை நேர்த்தியைப் பார்த்துள்ளேன். அவரை அருகே நெருங்க முயன்று இயலாமல் திரும்பி இருக்கிறேன். பார்வையில் பட்டு மறைந்து போகும் அதிசயத்தைக் கண்டு வியந்து போயிருக்கிறேன் பைராகிகள், நாகர்கள் இவருக்குக் காட்டும் மரியாதை அலாதியானது. எனது அருமை சற்குருவை நேரில் சந்தித்துப் பேசும் பாக்கியத்தைக் கல்கத்தா காளி கோயிலின் கடற்கரைப் பகுதியில் தான் அடைந்தேன். என்னால் அவருடைய தேஜஸ் முன்பாக நிற்க இயலாமல் தவித்துத் தான் போனேன். பிறகு அவறே என்னை அருகில் அழைத்துப் பேசினார். “நீ யார்? என்னிடம் உனக்கு என்ன வேண்டும்? “என்றார் அந்த ஈஸ்வர குரு. அதற்கு நான், “அதனைத் தான் நான் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஓர் அநாதை” எனப் பதில் சொன்னேன். அவர் ஈஸ்வர சொரூபமாய் எனக்குத் தெரிந்தார். எனது கால்களைப் பார்த்துவிட்டு, “நீ நாகபாபா வா?” எனக் கேட்க ” ஆம்” என்றேன். “என்னிடத்தில் உனக்கு என்ன காரியம் ஆகவேண்டும்?” என்று அந்த ஈஸ்வர சொரூபம் கேட்டது. “என்னைத் தங்களின் சீடனாக அங்கீகரிக்க வேண்டும் ” எனப் பணிவன்புடன் கேட்டுக் கொண்டேன். அவர் பதில் கூறாமல் தீர்க்கமாக என்னை உற்றுப் பார்த்தார். அன்று முதல் பல ஆண்டுகள் அவருடன் இருந்தேன். எனது ஈஸ்வர குருநாதர் உணவு உண்டு நான் பார்த்ததில்லை. உறங்குவதும் இல்லை. எந்த நேரமும் தவம் செய்து கொண்டே இருந்தார். அவருடன் இருந்ததாலேயே எனது ஆற்றல்கள் மேம்பாடு அடைந்து வந்தன. அவருடன் பல இடங்களுக்குச் சென்று அநேக ஞானியர்களின் ஆசிகள் பெற்றேன். இமயமலைச் சாரல்களில் அவருடன் திரிந்த எனக்கு இயற்கையின் இயல்பை உணர்ந்து கொள்ள முடிந்தது.”

“ஒரு முறை அவர் கங்கை நீருக்குள் இறங்கி மூழ்கினார். அவர் நீரை விட்டு வெளியே வரவில்லை. நீருடன் கலந்து விட்டாரா? என நினைத்தேன். மாலை நேரத்தில் நீரைப் போன்று ஒரு உருவம் நீரை விட்டு வெளியேறி வந்தது. அந்த அதிசய காட்சியைக் கண்டேன். அங்குள்ள பாறையில் அமர்ந்து கொண்டது. நானும் விறகுகள் எடுத்து வந்து தீ மூட்டிவிட்டு குளிருக்கு இதமாக அமர்ந்து கொண்டேன். நீர் வடிவில் இருந்த உருவம் எழுந்து நெருப்பை நெருங்கித் தன்னையும் நெருப்பு வடிவமாக மாற்றிக் கொண்டது. பஞ்ச பூதங்களின் வடிவங்களாக தன்னை மாற்றிக் கொள்வது யார்? என்று அறிந்து கொண்டிடத் துடித்தேன். பிறகு உறங்கிப் போனேன். அதிகாலையில் ஈஸ்வர குருநாதர் அதே பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். நேற்றைய தினம் நான் கண்ட தெல்லாம் கனவு போல் தோன்றியது. அவர் என்னிடம்
ஒரு வார்த்தை கூட உரையாடிய தில்லை. எல்லாமே மெளனமாகக் காலம் நகர்ந்து சென்றது. இப்போது எனக்குள் யாரோ அழைப்பது போல் தோன்றியது. எனது குருநாதர் தான் மனதினுள் பேசினார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன் .


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button