காண்பது கனவா? அன்றி நனவா?

210

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2

(24) காண்பது கனவா? அன்றி நனவா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாடலிபுத்திரத்தில் இருந்து உஜ்ஜெய்னிப் பட்டினம் திரும்பி வந்து கொண்டிருந்த வேதியர் வேணுநாதர், வசனகிரியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்ற குணவதி நதிக்கரையில் அந்த அதிசயக் காட்சியைக் கண்ணுற்றார். நிலவின் ஒளி போன்ற வண்ணம் கொண்ட ஓர் பிராமணரின் உடல் தலைகீழாக, அங்குள்ள ஆலமரத்தில் தொங்கியபடியே ஊசலாடிக் கொண்டிருந்தது. தான் காண்பது கனவா? அன்றி நனவா என்று எண்ணிய வேதியர் வேணுநாதர், அவ்வுடலைக் கீழே இறக்கி பச்சிலைகளைப் பரப்பி அதில் கிடத்தினார். வேதத்தில் கூறப்பட்ட சில தெய்வீக மந்திரங்களைக் காதில் ஓதினார் . சிறிது நேரத்தில் அவர் கண்விழித்து எழுந்து வேதியருக்கு நமஸ்காரம் செய்தார். அவரைக் கண்கள் இமையாது பார்த்த வேணுநாதர், ” ஐயனே, தாங்கள் யார்? இந்நிலை தங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன?” என வினவினார். அதற்கு அவர், ” வேணுநாதரே தங்களுக்கு ஓர் செய்தியைக் கூறுவதற்கு வந்திருக்கிறேன். விக்கிரமாதித்திய வேந்தனுக்கு அருகில் இருக்கும் பாக்கியம் பெற்ற தாங்கள், எம்மை ‘வேதாள் பட்’ என்று அறிந்து கொள்ளுங்கள். சிவன் சாபத்தால் வேதாளமாக மாறிய எனக்கு விமோச்சன காலமும் விரைவில் வரப்போகிறது. நீங்கள் தங்கியிருக்கும் நந்தவனத்தில் உள்ள பூமிக்குள் இருந்து மூன்று தங்கக் குடங்களை புதையலாக வெளியே எடுத்து அரசுக்கு ஒப்படைத்தீர் அல்லவா? அதனால் தம்பனவசியன் என்ற காட்டுக் கள்வனால் உமக்கும் உனது மனைவிக்கும் ஆபத்து வரவிருக்கின்றது. குடங்களில் இருந்ததை எமக்குக் கூற முடியுமா? ” எனக் கேட்டார்.

வேணுநாதரோ, ” வாருங்கள் வனகாளி அம்மனைத் தொழுது விட்டு உமக்கு விளக்கம் கூறுகிறேன்” எனப் பதில் கூறியபடியே வேதாள் பட்டுடன் கோயிலை அடைந்தார். வேதமந்திர ஒலிகளினால் அம்மையைப் பூஜித்து விட்டு அருகில் உள்ள குகையின் வாயில் அருகே அமர்ந்து கொண்டனர். வேதியர் அவர்கள் வேதாள்பட்டிடம்,” தங்களின் திவ்ய வேதாள வடிவத்தை தரிசிக்க விரும்புகிறன் ” என்றதும், ” எனது கேள்விக்குப் பதிலை யாம் தெரிந்து கொண்டதும் அவசியம் தாங்களும் அறிந்து கொள்ளலாம்” என வேதாள்பட் கூறினார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு புதையல் கிடைத்த விருத்தாந்தங்களை வேதியர் வேணுநாதர் சொல்லத் துவங்கினார். அதன் விபரம் இதுவே! விக்கிரமாதித்திய வேந்தன் கொடையாக நல்கிய நந்தவனம் உஜ்ஜெய்னி நகருக்கு வெளிப்புறத்தில் நேர்த்தியான சிறு மனையுடன் விளங்கியது. வேதியர் வேணுநாதர் அங்கே நகரில் இருந்து வரும் அனேகக் குழந்தைகளுக்கு வேதபாராயணம் சொல்லி வைத்தார். அவரது மனைவி ரேவதியம்மாள் அங்குவரும் அதிதிகளுக்கு சிறப்புடன் அன்னதானத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர்களது பெண் குழந்தை புஷ்பவதி வேதபாராயணம் கற்றுக் கொள்வதுடன் நந்தவனத்தில் பச்சிலை மூலிகைகளைப் பயிர் செய்து அங்குள்ள மருத்துவ விடுதிக்குத் தந்து உதவிகள் புரிந்து வந்தாள். அற்புத மூலிகைப் பயிர்களை நடவு செய்யும் இடத்தில் அக்குடும்பத்தினர் மூன்று தங்கக் குடங்களை பூமிக்குள் இருந்து எடுத்தனர். அக்காலத்தில் புதைபொருட்கள் அரசுக்கு உரியது என்ற சட்டசாசனம் இருந்தது. விக்கிரமாதித்திய வேந்தன் நாடாறு மாதம் பாடலிபுத்திரத்திலும், காடாறுமாதம் உஜ்ஜெய்னி நகர வனத்திலும் வாழ்ந்து வந்தான். இது அமானுஷ்ய சக்திகளை அறிந்து கொள்ளும் அவாவினாலும், வனபத்திர காளியின் அருளினாலும், அவ்வருளை அடையக் கடுந்தவம் புரிந்ததினாலும் கிடைக்கப் பெற்றான். தங்கள் மன்னன் காடாறுமாதம் ஆள உஜ்ஜெய்னி வனம் வந்த போது, அரச மாளிகையில் வைத்து அவரின் முன்னிலையில் புதையல் பானைகளை வேணுநாதர் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். வேந்தனின் சகோதரர் பட்டியும் உடனிருந்தார்.

அவர்களின் நேர்மைக்கு நன்றி பாராட்டிய மாமன்னர் பானைகளைத் திறக்க உத்தரவு செய்தார். பணியாளர்கள் அவைகளின் பூட்டுக்களை உடைத்து மூடிகளைத் திறந்து அகற்றினர். பட்டி ஒவ்வொரு தங்கக் குடத்தினுள்ளும் இருப்பதை வெளியே எடுத்து மன்னர் முன்னிலையில் ஓர் பட்டு விரிப்பின் மீது வைத்தார்கள். உஜ்ஜெய்னி அரச மாளிகையில் அன்று தாங்கள் காண்பது கனவா? அன்றி நனவா? என்ற பிரம்மிப்பில் ஆழ்ந்து போயினர். இரண்டு தங்கக் குடங்களில் இருந்து வெளிப்பட்ட சொக்கத் தங்கப் பாளங்களும், காசுகளும், ஒளி வீசும் நவரத்தினங்களும் காண்போர் கண்ணையும், கருத்தையும் கவருவனவாக இருந்தன. மூன்றாவது குடத்தினில் இருந்து பட்டுத்துணியில் பத்திரமாகப் பொதிந்து முடிந்து வைக்கப்பட்ட ஏதோ ஒரு பொருளும், இரண்டு ஓலைச் சுவடிகளும் வெளிப்பட்டதை பட்டி, விக்கிரமாதித்தியன் இருவரையும் ஈர்த்தன.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button