கலியில் ஆன்மிகவாதியின் நிலைப்பாடு.

255

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•09•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(435) மனிதனே புனிதன் —
கலியில் ஆன்மிகவாதியின் நிலைப்பாடு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“கலியுகத்திலும் உண்மையான ஆன்மிகவாதிகளின் புத்தியானது தர்ம அனுஷ்டானத்தில் நிலை பெற்று இருக்கும். தங்களுக்குப் பாவத்தைச் சேர்க்காத, துன்பம் தந்திடாத செல்வத்தைத் தேடி அடைவார்கள். வேதங்களில் கூறப்பட்டுள்ள, வாழ்வினுக்குத் தேவையான கர்ம காரியங்களை விரும்பிச் செயல்படுத்துவார்கள்.
காற்றுமண்டலத்தைத் தூய்மை செய்திடும் மகா யக்ஞங்களைச் செய்து உலக மக்களுக்கு உதவிகள் செய்வார்கள். இல்லற வாழ்வில் சாத்வீகமான போக பாக்கியங்களை விரும்பி அனுபவித்து வருவார்கள். பிறவித் தளைகளில் இருந்து விடுபடத் தானதர்மங்கள் செய்து,
இறைவனைப் பிரார்த்தனை தவத்தில் ஆராதித்து வருவார்கள். ஆன்ம லாபத்திற்கு உதவிகள் செய்யாத ரஜோ, தாமச குணங்களிடத்தில் சேராதிருந்து, அவைகளை வெற்றி கொள்வார்கள். இவர்கள் பிரகாசம் உடையவர்களாய், களங்கமற்றவர்களாய் இருப்பார்கள். பஞ்சேந்திரியங் களுக்கு இவர்கள் மனம் எப்போதும் விஷயங்களைத் தெளிவாகத் தெரிவிக்கும். அத்துடன் நிர்மலமாயிருக்கின்ற அநேக தெய்வீக விஷயங்களை அறிவிற்கு அறிந்திடச் செய்யும் சக்தியின் ஆற்றலைப் பெருகச் செய்து கொண்டிருக்கும். நன்மைகளை உருவாக்கித் தருவது உண்மையான ஆன்மிகச் செயலாகும் ” இவ்வாறு ஸ்ரீ விஸ்வாமித்திர பிரம்ம மகரிஷி உறுதிபடக் கூறியிருக்கிறார் என ஸ்ரீ நாகபாபா நமது சுவாமியிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்ரீ நாகபாபா சிரித்தபடியே ஒன்று கேட்டார், “உடலைச் சட்டை என்று சித்தர்கள் ஏன் சொன்னார்கள்? ” அதற்கு நமது நாகராஜன் சுவாமி, ” ஆத்மாவை மூடிக்கொண்டு இருக்கும் சட்டையே மனித உடல் என்பது சித்தன் வாக்கு ” என்றார். “நல்லது, மனித உடலுக்குள் நிழல் போல மறைந்து கொண்டு இருக்கும் உறு பொருளைப் பற்றி
நமது ஞானியர்கள் கருத்து என்ன? ” என பாபா கேட்டார். நமது சுவாமி, “அதனை சற்குரு நாதரிடம் அறிந்து கொண்டிருக்கிறேன். அதனை உபாசனை செய்திருக்கிறேன். அதனால் பயத்தை வென்றிருக்கிறேன். பிறப்பினில் இருந்தே அது நம்மை நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். உபாசனைக்கு உரிய அந்த நிழலின் பெயர் “மரணம்” என்ற மந்திரம் ஆகும் எனத் தெளிந்தேன். இதனை ஜெபிப்பவர்கள் மனதில் இருந்து அச்சம் அகன்று, ஆயுள், ஆரோக்கியம், நலன்கள் பல கூடும் ” என்றார்.

சிறுவயது முதற்கொண்டு உண்மையின் உண்மையை சற்குரு நாதர் நமது சுவாமிக்கு விளக்கி வந்துள்ளார். உண்மை என்பது உயிராற்றல். அவற்றின் பேருண்மை என்பது பராபரமாகிய இறைவனே. அவரை ஆத்மாண்டவன் என்று உன்னத ஞானியர்கள் வெளிப்படுத்தி வாழ்ந்தார்கள். “ஓம்” என்ற உன்னத உணர்வு நிலையில் பரிணாமத்தின் இறுதியில் அன்பு மயமான பராபரத்தில் திழைத்தார்கள். நமது சுவாமியிடம் விடை பெற்றுப் போகும் முன்பு ஸ்ரீ நாக பாபா ஜி அவர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அது என்னவென்றால் காற்றில் மிதந்து மறையும் வித்தையைத் தன் முன்னால் செய்து காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு அவர், “நாகராஜா சுவாமி என்னால் இதனை உங்கள் முன்னால் செய்து காண்பிப்பதால், என்னவகை உபயோகம் யாருக்கும் கிடைக்கும்? நமது சற்குருநாத சுவாமியைத் தவிர வேறொன்றும் தேவையில்லை என்று கூறியவர் தாங்கள். எவ்வித சித்துக்களையும் விரும்பாத ஒரே ஆத்மா என்று உங்களைக் காண விரும்பி வந்துள்ளேன். எனக்கு இனி புறப்பட்டு மருந்து வாழ்மலை செல்ல வேண்டும். நான் சென்று வருகிறேன் “என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றார். சுவாமியின் பாட்டி ஸ்ரீ பொன்னம்மா நாச்சியார் மெல்ல தனது பேரனின் பக்கத்தில் வந்து நின்று, ” ஸ்ரீ நாகபாபா சொல்லி விட்டு போன கருத்தின் பொருளென்ன? ” என்றார்.

நமது சுவாமி சிரித்துக்கொண்டே,
“பாட்டி, அவர் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாததன் காரணம் அவர் தனது சற்குருநாதரின் மீது கொண்டுள்ள உண்மை பக்தி தான். அவர் தனது தெய்வீக சக்தியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்றவர்களின் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் விதமாக உதவிகள் செய்து வருகின்றார். மனத்தூய்மை யுடன் அவர் வாழ்ந்து வருவதே மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காகத்தான். அதனை அவர் மிகச்சிறந்த வழிபாடாக எண்ணிச் செயல்படுகிறார் ” என்றதும் பாட்டி அவர்கள் “உண்மை, அவர் சித்தன் நிலை பெற்றவரே ” என ஆமோதித்தார்.
தெய்வீகத் தன்மை என்பது பொது நலத்தின் வெளிப்பாடு. இதுவே இறைவனின் சக்தி ஆற்றல். தீமை சக்தி என்பது சுய நலத்தின் வெளிப்பாடு. இரண்டிற்குமே சமமான பலம் இருந்தாலும், இறைவனது புனிதமான தெய்வீக ஆற்றல், தீமைசக்திக்கு இல்லாததால் படைப்பின் ஆற்றல் அதற்குக் கிடையாது. தெய்வீகத் தன்மை கொண்டு அறிவின் ஆற்றலை, வித்தைகளை மனிதன் அடைவதுதான் உத்தமம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button