கைலாய ரிஷிகளின் ஆலய சூட்சுமம்.

308

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•09•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(434) மனிதனே புனிதன் —
கைலாய ரிஷிகளின் ஆலய சூட்சுமம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” கைலாய ரிஷிகள் கூறுவது, “மனிதனின் உடலை இறைவன் படைத்து இயங்கச் செய்தார். அறிவு வளங்களை உண்டாக்கி அதன்படியே உலகில் உள்ள சகல ஜீவன்களையும் முன்னேற்றம் அடையச் செய்திட, அறிவாம் வேதங்களை உண்டாக்கித் தனது (இறைவனது) மேன்மையை மனிதன் அறியச் செய்தார். மனிதன் தனது பகுத்தறிவைக் கொண்டு முன்னேற்றம் அடைய வேதங்கள் உதவின. தனது ஆலயமாம் உடலினுள் உள்ள இதயவானில் இறைவன் அரசாட்சி செய்வதை அறிந்து கொண்டிட, யோக, ஞான, தவ, வித்தைகளைப் பயன்படுத்திய வர்கள் வழிகாட்டும் குருநாதர்கள் ஆனார்கள். வேதங்கள் அவர்களுக்கு உதவின. அவர்களே ஊண் உடம்பு ஆலயம் என்ற ரகசியத்தை அறிந்து கூறினார்கள். உடலைப் போன்றே ஆலயங்களும் இறையருளை வாரி வழங்கவே இயங்குகின்றன. இதனை வேத கால ரிஷிகளும் தங்களின் மெய்ப்பிக்கும் கருத்தால், ஆலயங்களை எடுப்பித்து உண்மைகளை உலகினுக்கு வழங்கினர். ஆலயங்களை இறைவனைப் பிரார்த்தனை செய்யும் புனித இடமாகக் கொண்டனர். அங்கு இவர்கள் கோடி சூர்யப் பிரகாசம் பொருந்திய, ஈடு இணையற்ற பராபரமாகிய இறைவனைத் தங்களின் தவத்தினால் அறிந்து கொண்டனர். அறியாமை இருளை நீக்கி, அறிவதற்கு அரிதாகிய பரம்பொருளை உள்ளத்தில் தெளிந்து வழிபட்டு அதனைக் கூறினார்கள். அமரவாழ்வு தரும் வழியை வகுத்துத்தந்தனர். அவ்வழிதனில் சென்று மரணமில்லாப் பெருவாழ்வை எய்தி ஆத்ம பரிபூரணத்துவம் பெற்றிட்டனர். ஞானியர்கள் இறைவனின் இடத்தின்றும் வெளிப்படும் பேரொளியானது, படைப்பு அனைத்திற்கும் ஒளி தந்து வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது” என்றார் நாகபாபா. மேலும் கூறுவார்,

“மாயை என்று வேதங்கள் வாயிலாக இறைவன் கூறியது இயற்கையைத்
தான். இந்த இயற்கையாகிய மாயையை ஆட்சி செய்து கொண்டு இருப்பது இறைவனே. பிரபஞ்சத்தைப் பொலிவுடனும், எழிலுடனும், வியக்க வைக்கும் ஆற்றல் சக்தியால் படைத்துக் காத்து வருவதும் அவரே. மனிதர்கள் இறைவனை வணங்குவதால் அவரின் ஆசிகள் கிடைக்கப் பெற்றுப் பரிபூரணப் பேரமைதி உள்ளத்தில் உண்டாகின்றது. மாயையால் மனிதனின் உயிர் கட்டப்பட்டுள்ளதை ஆத்ம ஞானியர்கள் அறிந்திருந்தனர். மனிதனின் இதயத்தில் இறைவன் என்றும் வாழ்ந்து வருவதால், அழிவில்லாப் பேரமைதி அங்கு என்றுமே நிலவுகிறது என்றனர்.. இதனை ஞானியர்கள் தவத்தினால் அறிந்து கொண்டனர். அறிந்து கொண்டு மரணத்தின்
தளைகளை இறையருளால் நீக்கிக் கொண்டு அவ்விறைவனுடன் கலந்து வாழச் சென்று விடுகின்றனர் ” என்றார் நாகபாபா.

“இக்கலியுகத்தில் எத்தகைய
அருமை, பெருமை வாய்க்கப்
பெற்ற குருவையும் மதிப்பவர்கள் இருப்பது அபூர்வமானதாக இருக்கும். அன்புடன் ஞானத்தைப் போதிக்கும் குருவை அவமதிப்பார்கள். குரு, சீடன் என்ற உயர்ந்த தன்மைகள் அற்றுப் போகும். குருகுலம் கல்வி முறைகள் கலியுகத்தில் இருக்காது. குரு என்பவரைத் தங்களது காரியங்கள் முடியும் வரை ஒரு கருவியாகப் பயன் படுத்திக் கொள்வார்கள். அன்பு கொண்ட உள்ளத்தினாலும், உண்மை வாக்கினாலும், உறுதி உடலாலும் குருவையே தியானிக்க வேண்டிய சீடன், நன்றி மறந்து குருத்துரோகம் செய்து மாபாதகன் ஆவான். ஆசிரியரும் தனது மாணவ மாணவிகளைத் தனது மகன், மகளாக எண்ணாமல் தரங்கெட்டுப்போவான். குரு குலக் கல்வி முறைகள் மாறி, நீதி, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி, அவைகள் புறக்கணிக்கப்பட்டு, பொய், சூது, வாது, களவு இவைகள் பெருகும். தர்மம் கடைப்பிடிக்கப்பட மாட்டாது. நீதிமான்கள், நல்லவர்கள், ஒழுங்கம் உடையவர்கள் புறக்கணிக்கப் பட்டு அசுரத் தன்மைகள் பெருகும். இது உலகை நேசித்த மகாத்மா ஸ்ரீ விஸ்வாமித்திர பிரம்ம ரிஷி கூறியுள்ள கலியுகத்தில் ஆன்மிகம் பற்றிய உண்மைக் கருத்தாகும்” என்றார். மேலும், “கலியுகத்தில் மக்களை இன்று நோக்கினால் அவர்களில் ஒரு சாரார், புண்ணிய பாவம் என்று கருதாமல் செல்வத்தைத் தேடுவதும், சத்தியத்திற்கு விரோதமாக போக பாக்கியத்தை தேடி விரும்பி அனுபவிப்பதும், சாஸ்திர சம்பந்தப்பட்ட உண்மைகளில் பட்டவர்த்தனமாக வெறுப்பைக் காட்டுவதும் ஆகிய பாவங்களில் உழல்வார்கள். மற்றொரு சாரார் வேதங்கள் இடத்திலும், அதனை விளக்கும் சாஸ்த்திரங்கள் இடத்திலும் விசுவாசம் இல்லாமல் இருப்பதும், திரவியங்களை மதிக்காமல் நாசம் செய்வதும், யாவரிடமும் துரோக சிந்தை மிகுத்தும், மன சாந்தி இல்லாமல், கோபமும், மூர்க்கத்தனமும் கொண்டு தனது இஷ்டம் போல் நடந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ” என்று கூறிவிட்டு. …..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button