மனிதனின் சௌபாக்கியமும் இறையருளே!

374

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2

 

(10) மனிதனின் சௌபாக்கியமும் இறையருளே!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நினைத்தமாத்திரத்தில் நினைத்தபடி உருமாற்றும் வித்தையைக் கற்றுக் கொண்டிருந்த மகான் வல்லபர், என்ன வடிவெடுத்து நின்று கொண்டிருந்தாரோ நாமறியோம். அந்தக் கொடுமையாளர்கள் தோள்களில் வல்லபர் கரங்கள் இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க, வலிதாளாமல் திரும்பிப் பார்த்த இருவரும் ஏதோ கொடுமையான பூதத்தைக் கண்டவர்கள் போல் பயந்து அலறிக் கொண்டும், அழுது அரற்றிக் கொண்டும் இருந்தனர். உண்மையாகவே அவர்கள் இருவரின் கண்களுக்கும் மகான் வல்லபர் பூதப்பைசாச பிரேதம் போல் உருமாறிக் காட்சியளித்துக் கொண்டும், அவர்களை விழுங்கி விடுவது போன்று பயமுறுத்திக் கொண்டுமிருந்தார். நமது சுவாமியின் மேலங்கியைப் பற்றிப் பிடித்து இழுத்தவன் தமக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் உச்சரித்தபடியே, சப்தமிட்டபடியே விழிபிதுங்கி மயங்கிச் சாய்ந்தான். மற்றொருவனோ பின்னங்கால்கள் பிடரியிலடிக்க ரயில் பாதையில் விழுந்தெழுந்து சப்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தான். தங்களது காலனி குடியிருப்புப் பகுதியில் அடாவடித்தனம் செய்து வந்த நபர் பயந்து சப்தமிட்டபடி ஓடுவதைக் கண்ட அதிகாலை நேர வியாபாரிகள் வியப்படைந்தனர். நமது சுவாமி என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொண்டு மௌனமானார்.

 

ரயில்வரக் காலதாமதம் ஆனதால் மீண்டும் சிமெண்ட் இருக்கையில் நமது சுவாமியும், வல்லபமகானும் அமர்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருந்தனர். மகான் கூறினார், “ஈஸ்வர குமரனே யாராலும் தடுக்க இயலாத செயல்கள் பற்றி மேலும் ஏதாவது கூற இருக்கின்றாயா?” என்று பவ்யமாகக் கேட்டபடி பார்த்தார். நமது சுவாமியும், “ஐயனே இவைகள் அனைத்தும் மகான்கள் உலகினுக்குக் கூறிய நீதியின் கருத்துக்களையே அடியேனும் ஞாபகப்படுத்திக் கொண்டுள்ளேன். மகளிரின் சித்தத்தில் ஓர் முடிவை எடுத்து விட்டார்களாயின் அக்காரிய சிந்தனையை யாராலும் தடுக்கவே முடிந்திடாது. அதனை உறுதி படுத்தும் விதமாக அநேக நிகழ்வுகளைப் பற்றியும் எடுத்தியம்ப முடியும். காலம் கருதி சலன சித்தம் பற்றி மேலும் கூற அடியேன் விரும்பவில்லை. தெய்வங்கள் கூட இதனைத் தடுக்கவே விரும்ப மாட்டார்கள். இது மகளிரின் விருப்பத்தைப் பொறுத்தே இயல்பாக நடந்து வரும் இச்செயலைத் தடுப்பார் யாருமில்லை. அவரவர்கள் தங்கள் சித்தத்தை முழுமையாக இறைவன் பால் திருப்பிட அனேக தெய்வாம்சங்கள் உலகில் நடை பெறும் ” எனக் கூறியதும் வல்லப மகான், “ஆஹா… அற்புதம் தாய் சக்தி, ரிஷி பத்தினி சக்தி உருவாக வேண்டிய, முக்கியமான அமைதி சித்தம், சலன சித்தத்தின் அடித்தளத்தை மாற்றி அமைப்பதால் கிட்டும் என்பதற்குப் பட்டும் படாமலும் சாதுர்யமாக நீ சொல்லிய விளக்கம் பாராட்டிற்கு உரியதே!” என்று கூறி ஆனந்தம் உற்றார்.

 

நமது நாகராஜன் சுவாமி அவர்கள்  மேலும் கூறுவார், “புனித மகாத்மனே ஒரு மனிதனுக்கு இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்கள் ஏற்பட வேண்டும் என்ற  ஆசியிருந்தால், அம்மனிதன் அடையக் கூடிய வளங்களை, நல்வாய்ப்புக்களைத் தடுப்பார் இவ்வுலகில் எவருமே இருக்க மாட்டார்கள் என்பது எனது முடிவும், நீதி வாக்கிய உண்மையுமாகும்” என்று கூறி முடித்ததும் சுவாமி, ஶ்ரீ வல்லப ரிஷி ஆகிய இருவரைச் சுற்றியும் ஆறுநபர்கள் வட்டமாக நின்று கொண்டிருந்தனர். மற்றும் இருவர் மயங்கிக் கீழே கிடந்த நபருக்கு மயக்கம் தெளிவிக்க  உதவிகள் செய்யவும், அவன் எழுந்து அமர்ந்து பயங்கரமாகப் பயந்து அலறினான். ஆறு நபர்களும் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் சற்றுக் குள்ளமானவன் கைகளில் மிளகாய்தூள் கொண்ட பையை வைத்துக் கொண்டிருந்தான். முகத்தில் வீசத் தயாராகி பையினுள் கையை விட்டுத் மிளகாய்த் தூளை அள்ளி எடுத்தான். மற்றவர்கள் கைகளில் கம்புகளும், சிறிய கத்திகளும் வைத்திருந்தனர். “இதோ இந்தப் பரதேசிக்கிழவன் தான் மாந்திரீகம் செய்து என்னைப் பயமுறுத்தினான்.  இவன் மண்டையைப் பிளங்களடா” என்று நீட்டிக் காட்டிய கையில் குண்டாந்தடி இருந்தது. தடி மெல்ல நெளிந்து கொண்டு இருந்ததை அவன் கவனிக்க வில்லை. ஆவேசமாக மிளகாய்த்தூளை அள்ளியவன் அதனைத் தனது நண்பர்கள் மீதே வீசவும், அவைகள் சிறு சிறு பாம்புகளாக மாறி அவர்கள் கைகளிலும், கழுத்திலும், கையில் வைத்திருந்த ஆயுதங்களிலும் சுற்றியபடியே சீறிக் கொண்டிருந்தன. அவர்கள் பயந்து அலறியபடியே நின்ற இடத்திலேயே நாட்டியம் பயில்வது போல் குதித்தபடி இருந்தனர். அவர்கள் இட்ட கூச்சலில் அங்கே ஜனங்கள் கூடி விட்டனர். மற்றவர் கண்களுக்கு பாம்புகள் புலப்படாததால், குதித்தபடி பயந்து சப்தமிடுவது வேடிக்கையாக இருந்தது!

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இனனும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button