சுயநலம் கலந்த பொது நல சேவை!

169

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(27) சுயநலம் கலந்த பொது நல சேவை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதாள்பட் முகத்தை வியப்புடன் நோக்கிய வேதியர் ஶ்ரீ வேணுநாதர் மேலும் அவர் கூறுவதை உன்னிப்புடன் கவனிக்கத் துவங்கினார். “சேவை மனப்பான்மையுடன் வாழ்க்கையைக் கொண்டு செல்ல எண்ணுபவர்கள் வாழ்வு முழுவதும் சேவையே பிரதானம் என்ற செயல் புரிவது மிகவும் கடினமானது என்பதை உணர்ந்தே இருப்பார்கள். காரணம் அவர்களின் பொது நலசேவையில் தங்களது சுயநலனும் கூட கலந்தே இருப்பது தான். தன்னலம் சேராத பொதுநலன் என்பதற்கு உரிய சாத்தியக் கூறுகள் எதுவுமே அரிதான ஒன்றே! அந்த அரிய செயல் வாழ்வில் ஏற்பட வேண்டும் என்றால், தினமும் அதற்குரிய சங்கல்பம் செய்துவரல் அவசியம். எனது செயலில் மிகவும் அதிகமான பற்றுகளற்று காரியம் ஆற்றுவேன்! தன்னலமே இல்லாத சேவை எனது மூலமாக இவ்வுலகில் நடைபெற ஆவல் மிகக் கொண்டுள்ளேன்! எனது தூய்மை மிகுந்த சேவைகள் அனைத்தும் ஈஸ்வரார்பணம் செய்து இறையருளுடன் வாழ்வாங்கு வாழ்வேன்! என்பதாக இருக்க வேண்டும். அதனால் பொது நலனும், சுய நலனும் வெவ்வேறாக உள்ளவை ஒன்றாக இணைவதனால் ‘நமது சேவை’ என்றாகி விடும். நமது சேவையுடன் இறைவனையும் சேர்த்துக் கொண்டு நீ வேறு, நான் வேறு அல்ல என ஒன்றி விட வேண்டும். இந்த வகையில் தான் இயற்கையின் இயல்பில் மனம் லயமானேன். பிறகு மெல்ல, மெல்ல ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிருஷ்டியில் ஐக்கிய நிலை அவனருளால் எம்முள் விளைவானது. உலகில் உள்ள சகல படைப்புக்களும் ஒன்றினில் ஒன்று இணைந்தே இருக்கும் படியாகப் படைக்கப் பட்டிருப்பதால், எம்முள் உள்ளவற்றை நினைந்து மகிழ்ச்சி அடைகிறேன். நடுநிலைமை கொண்ட மனது ஏற்பட்டதனால் எமது புலன்கள் அனைத்தையும் உள்முகமாகச் செலுத்தும் பாக்கியம் உண்டானது. உண்மையான சேவையில் ஆன்ம திருப்தி ஏற்படுவதை எம்மால் உணரவும் முடிகின்றது” என்றார்.

வேதியர் ஶ்ரீ வேணுநாதர், இறையருளாசி பெற்ற வேதாள்பட் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த அன்புடன் நன்றி கூறினார். பிறகு மன்னனை மந்திரவாதியின் சூழ்ச்சியில் இருந்து வேதாளம் காப்பாற்றியது எப்படி? என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கு வேதாள்பட் பதில் கூறினார். “ஐயா வேணுநாதரே கேளும். மன்னவன் சிறந்த அறிவாளியாகவும், கிரகிக்கும் ஆற்றல் சக்தி மிகுந்தவராகவும் இருந்தார். ஞான சீல மாந்திரீகன் அகோர யாகம் செய்திட 999 அரசர்களின் தலைகளை கொணர்ந்து வந்து சேகரித்துள்ளான். ஆயிரமாவது தலை கொய்வது ராஜனே உம்முடையது. நீ உனது சமயோஜித புத்தியால் தீயசக்தி பெற்ற ஞானசீலனை அழித்துவிடுவாய். அதனால் மக்களுக்கும் நன்மையே ஏற்பட உமக்கும் தெய்வீக அருள் கிட்டும் என்று கூறினோம். அதன்படியே மாந்திரீகன் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் முறை எப்படி என்று மன்னனுக்கு செய்து காட்டிய போது , வாளால் அவனது தலையைத் துணித்தான் விக்கிரமாதித்தியன். ஞான சீலனின் மாந்திரீகத் தண்டமும், வாளும் மன்னனது உடமையாயின. இன்னும் ஒரு சேதி உண்டு. அது என்னவெனில் மதியூகி பட்டி அவர்கள் உஜ்ஜெய்னி மாகாளிப் பட்டினம் அமைக்க இடம் தேடிய போது, அவரையும் சந்தித்து விஸ்தீரமான நகர் அமைக்க உதவிகள் புரிந்தோம். இன்னும் மன்னனது ஆயுள் பரியந்தம் உடன் இருந்து சேவைகள் செய்து வருவது எமது லட்சியமும், பாக்கியமாகும்” என்று நிறைவு செய்து விட்டு, ” அன்பரே வேணுநாதரே, உமக்கும் ஒரு முக்கிய செய்தியைக் கொணர்ந்திருக்கிறேன் ” என்றார். தனக்கு உரிய செய்தி என்றதும் எந்த ஒரு அதிர்வும் வியப்பையும் வெளிப்படுத்தாத வேதியர் வேணுநாதர் வேதாள்பட் சொல்வதை மிக அமைதியாகச் செவிமடுத்தார். “வேதியரே உமக்குக் காலன் என்ற காட்டுக் கள்வனை பற்றிய உண்மை தெரியுமா? ” என்றார் வேதாள்பட்.

“மற்றவர்களைத் தனக்கு அடிமை கொள்ளச் செய்திடும் மாந்திரீக வசீகரம் இருப்பதால் தம்பனவசியன் என்ற மற்றொரு பெயரும் உண்டு” என பதில் உரைத்தார் வேதியர். சிரித்தபடியே வேதாள்பட், ” ஈவிரக்கமின்றிப் பெண்களைக் குழந்தைகளை யாகத்தில் நரபலியாகக் கொடுத்து வருவதால் அவனுக்குத் தம்பன வசியன் என்னும் பெயர் ஏற்பட்டது. நீர் வசிக்கும் இடத்தில் புதையல் பானைகளை கண்டெடுத்த உமது குடும்பத்திற்கு ஆபத்து அவனால் காத்திருக்கின்றது. நகரத்திற்கு உள்ளே குடும்பத்தினரை அழைத்துச் சென்று விடுங்கள் ” என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அதற்கு நன்றி கூறிய வேதியர் பிறகு மௌனமாக அமர்ந்து இருந்தார். பிறகு , “அது தான் எங்களின் விதி என்றால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டும். சந்தோஷமான மரணத்தை எதிர்பார்த்த எங்களுக்கு தாங்கள் கூற வந்த துர்மரணத்தையும் பகவான் விட்ட வழியென ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்,
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி — 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button