ஓலைச் சுவடிகள் பற்றிய உண்மை!

147

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2

(25) ஓலைச் சுவடிகள் பற்றிய உண்மை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதாள வடிவினை தரிசித்த வேதியர் வேணுநாதர் ஓலைச் சுவடிகளின் ரகசியத்தை வேதாளத்திற்குக் கூறுமுன் அவரைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆவலுற்றார். அதனை மனக்குறிப்பால் உணர்ந்து கொண்ட வேதாளமாய் உருக் கொண்ட ஶ்ரீ நாகராஜபட் அவர்கள் தனது விருதாந்தத்தை சுருக்கமாகக் கூறலுற்றார். அது வருமாறு : பாரத தேசத்தின் தென்பகுதியை சோழமன்னர்கள் ஆண்டு வந்தனர். பிரசித்தி பெற்ற அருள்மிகு பரமேஸ்வரி உடனமர் ஶ்ரீ ஜவ்வந்தி நாதர் அருள் பிரவகிக்கும் பரமேஸ்வர ஆலயத்தின் ஸ்தானிகராக தெய்வீகக் கடமைகளைச் செவ்வனே செய்து வந்தேன். எனது ஒவ்வொரு செயலையும் ” ஈஸ்வரார்பணம்” என்று மனதினுள் சொல்வதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தேன். ஜென்ம வாசனை வந்துறுத்த திருநடை சாத்தப்படும் பொழுது கர்பகிரஹத்தினுள் இருந்து மெல்லிய குரலில், நிதானமாகக் கேள்வி பதிலாக உரையாடும் சப்தம் தீர்க்கமாக எமது காதுகளில் ஒலிக்கத் துவங்கியது. அதனை மறைந்திருந்து கவனித்துக் கேட்கத் துவங்கினேன். நடுஜாமம் வரை உரையாடல் நடை பெறும். அதைக்கேட்டு விட்டு ஈஸ்வரார்பணம் சொல்லித் திரும்பும் பொழுது ஒரு நிகழ்ச்சி நடந்தது. “இந்த ரகசியத்தை வெளியில் கூறுபவர்கள் தலைகீழாகத் தொங்கும் வேதாளமாகப் போகக்கடவது” என்ற சாபம் அசரீரியாகப் பலமாகக் கோயில் எங்கும் எதிரொலித்தது. பயந்து போய்த்தான் வீடு திரும்புவேன். காலதாமதமாக வருவதால் தினமும் எனது மனைவி சந்தேகம் கொண்டு, தாசிவீடு சென்று வருதாகக் கூறி சண்டை சச்சரவை உருவாக்கவே, எனது நிம்மதி பறிபோனது. ஆனால் பரமேஸ்வரன் பரமேஸ்வரி உரையாடலை அனுதினமும் நடுநிசியில் ஒட்டுக் கேட்பதை மட்டும் எம்மால் கட்டுப்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டு விட்டது.

மருத்துவம், மனோதத்துவம், பரிகாரங்கள், வானூர்தி இயந்திர சூட்சுமம், இருபத்தி நான்கு புதிர்கதைகள், அதற்குரிய விடைகள் என்பனவற்றை அறிந்து கொண்டு மகிழ்ந்தேன். ஆனால் சாபத்தை எண்ணித்தான் கலக்கமும் உற்றேன். எனது நந்நடத்தை மீதும், இறைவன் சேவையின் மீதும் எனது மனைவி பலமான குற்றச்சாட்டுகளைக் கூறியதால், எனக்கு ரோஷம் ஏற்பட்டு அவளிடம் உள்ளது உள்ளபடிக்குக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். இறைவனாரும், இறைவியாரும் உரையாடல் பற்றிக் கூறி இருபத்தி நான்கு புதிர் கதைகளை மட்டுமே கூறினேன். அதனையும் ஈஸ்வரார்பணம் செய்த நான், புதிருக்கு உரிய விடைகளை மறைத்து விட்டேன். அவளோ ஊர் முழுக்க சிவசக்தி உரையாடல் பற்றி கதை கதையாகப் பரப்பி விட்டாள். சாபம் வந்து பீடிக்காததால் மறு தினம் ஏற்படப்போகும் விபரீதத்தை உணராமல் ஆலயம் சென்றேன். அங்கு இறைவன் அசரீரியாக “நீதி ஒளி தீபம்” என்ற அரசியல் சட்ட நீதிகளை அடிப்படையாகக் கொண்ட நீதி பரிபாலனம் பற்றி விளங்கச் சொல்லினார். அடுத்த கணத்தில் சிவசாபம் பற்றிக் கொள்ள வேதாளமாக உருமாறித் தலை கீழாகத் தொங்கியபடியே ஈஸ்வரார்பணம் கூறி பகவனைத் துதித்தேன். சாபவிமோனம் அருளும்படி மன்றாடி வேண்டி கேட்டுக் கொண்டேன். சாபத்தையும் பகவானுக்கே ஈஸ்வரார்பணம் செய்ததால் இறையனார் அருளால் சாபவிமோனமும் கிடைத்தது.

” உஜ்ஜெய்னி பட்டணத்தை ஆளும் தெய்வீக அருள் மன்னன் காலன் என்ற கள்வனால் மரணத்தைத் தழுவும் பொழுது உமது உதவியினால் அவன் பிழைத்து எழுவான். அப்போதுதான் சாபத்திற்கு விமோசனம் கிட்டும். உமது வேதாள உடல் வானூர்தியாக மாறும். இருபத்தி நான்கு புதிர்க்கதைகளைத் தவிர மற்றவை உமக்கு நினைவில் இருந்து அழிந்து விடும். அவைகளைத் திரும்பப் பெற அங்கு ஶ்ரீ வல்லபரிஷி உமக்கு உதவி செய்வார். ஞாலசீலன் என்ற மாந்திரீகன் உம்மை அடிமை கொள்ள மன்னனைப் பயன் படுத்திக் கொள்வான். இருபத்தி நான்கு புதிர்க் கதைகளுக்கு மன்னனிடம் விடை உள்ளது. அதனைப் பெற்றவுடன் திரிகால ஞானம் உமக்கு ஏற்பட்டு “வேதாள் பட்” என்ற பெயருடன் அரசரது சபையில் நவரத்தினம் என்ற அறிவாளிகளில் முதன்மை பெறுவாய். அத்துடன் சாலி வாகனனால் யுத்தபூமியில் மரணவிதி விக்கிரமாதித்தியனுக்கு உடன் ஏற்படும். அங்கு பரகாயப்பிரவேசத்தில் மன்னனை இங்கு கொண்டு வந்துவிடு. இது வரலாறு கூறா மறைக்கப்பட்ட விதியாக ஏற்படட்டும். சேவை மனப்பான்மையுடன் கர்மபலனை ஈஸ்வரார்பணம் செய்திடும் வேதாளமே புறப்பட்டுச் செல்! செல்லும் போது சாபத்தால் வேதாளமாக மாறிவிட்ட உமது மனைவிக்கு ஆறுதல், தேறுதல் சொல்லி விட்டுப் போ!” என்ற உத்தரவு ஶ்ரீ பரமேஸ்வரரால் எழுந்ததால் வேதாளம் தலைகீழாக வானில் எழுந்து பறந்து மறைந்தது. நமக்கும் இதில் சேதியுள்ளது.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் –2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்,
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி – 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button