விரும்பாமல் வருகின்ற மணிமுடியும்! ராஜ்ய பாரமும்?

389

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(27) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

விரும்பாமல் வருகின்ற மணிமுடியும்! ராஜ்ய பாரமும்?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஶ்ரீராமர் வாழ்வின் நன்நெறிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் அனைத்திலும் நம்பிக்கையுடன் கூடிய வைராக்கியத்தை வாழ்க்கையில் கடைப்பிடித்து, வெற்றி பெற்று விடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பது ஞானியர்கள் வாக்காகும். உலகினை உளம் நிறைந்த அன்பினால் வசப்படுத்தி வாழ்பவர்கள் நிச்சயமாகத் தன்னைத் தானே வென்றவராகவே இருப்பார்கள். அப்பாவி மனிதனாக அவதாரம் எடுத்த ராமர் தன்னைத்தானே வென்று விட்டதாலும், அனைவரையும் அன்பினால் வசப்படுத்தி வென்று விட்டதாலும், உலகில் உள்ள  எந்தவொரு மனிதனும் அவர் மீது  அதிகாரம் செலுத்தவே இயலவில்லை! காரணம் ஶ்ரீராமர் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் மரியாதை செலுத்தியவர். தவறுகள் இருந்தால் பிறர் மனம் நோகாமல் நல்ல வழிகளைச் சுட்டிக் காட்டி ஆலோசனைகளைக் கூறுபவர். அதனால் தான் ஶ்ரீ ராமர் சக்கரவர்த்தித் திருமகன் என்று போற்றப்படுகிறார். சக்கரவர்த்தி என்பது இறைவனைக் குறிக்கும். பரமாத்ம சொரூபம் மனிதப் பிறவியில் கள்ளங்கபடமற்ற, தெய்வீக நிலையில் தோன்றியதால் அவர் “இறைவனின் குமாரர்” என்பதாக, “சக்கரவர்த்தித் திருமகன்” எனப் போற்றப் படுகின்றார். இதனை மறுக்க இயலாது. காரணம் சகல புவனங்களை ஆளும் சக்கரவர்த்தியாகிய இறைவன் என்றும் எப்பொழுதும் துக்கமற்றவனாகவே வேதங்களால் வர்ணிக்கப்படுன்றான். ஆனால் பூவுலகை ஆட்சி செய்த சக்கரவர்த்தி தசரதனோ ஆசையும், சாபமும், துயரமும் நிறையப் பெற்றிருந்தவராகவே கூறப்பட்டுள்ளார். 

 

 ராவணனை வென்ற பிறகு ஶ்ரீராமர் இவ்வுண்மையைத் தனது அருமை பக்தன் அனுமானிடம் கூற, அவரும் இக் கருத்தை ஏட்டில் பதிவு செய்து உள்ளார். “மனிதனின் உடலுக்கு வாழ்வில் ஏற்படுகின்ற  இன்ப துன்பங்கள் அனைத்துமே சந்தர்ப்ப சூழ்நிலைகளால், புறத்தில் இருந்து வந்து மனதினில் அமைகின்றன! ஆனால் அவைகளுக்கும் ஆன்மாவிற்கும் எவ்விதமான தொடர்பும், சம்பந்தமும்,  உண்டாவதில்லை. நாம் விரும்பினாலன்றி அவை ஏற்படுவதுமில்லை. மனிதனின் இன்பதுன்பங்கள் அனைத்தையுமே, உடலை விட்டு வேறுபடுத்தி அறிந்து கொண்டு, உள்ளத்தை என்றும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாதனையில் வெற்றி பெறுவது தனது ஐம்புலன் அடக்கத்தால் மட்டுமே! இந்த சாதனையைப் புரிந்து செயற்பட்டு வருபவர் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வார்கள்” என்றார். இதன்படியே அனுமானின் சாதனைகள்  அனைத்தும் தொடர்ந்து வெற்றியையே பெற்று வந்தன. இனி சிவபக்தனாக விளங்கிய தசரதச் சக்கரவர்த்தியின் உள்ளத்தில் தனது தவப் புதல்வர்களாகிய இளவரசர்கள், ராமன், பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகிய நால்வரில் அயோத்தி மக்களின் உள்ளம் கவர்ந்தவனும், தனது மூத்த மகனும், பட்டத்திற்கு உரிமை உடையவனுமாகிய ஶ்ரீ ராமருக்கு மணிமுடி சூட்டி மகிழ  ஆசை கொண்டார். தமது கருத்தை தனதுடன் இருக்கும் அமைச்சர் சுமந்திரர் மற்றும் தனது குலகுருவாகிய வஷிஷ்டரிடத்திலும் தெரியப்படுத்த விருப்பம் உற்றார். அவர்களை முறைப்படி வரவழைக்கச் செய்தார். முன்நிறுத்தி அவர்கள் முன்னால் அக்கால வழக்கப்படி  முதலில் விநாயகர், குருபகவான், மற்றும் குலதெய்வத்திற்கு பூஜைகள் நடைபெற ஏற்பாடுகளுக்கு உத்திரவிட்டார். 

 

பூஜைக்கு வேண்டிய வாசனாதி திரவியங்கள், நறுமண மலர்கள், கமுகு, மா, வாழை மரங்கள் கொண்டு பூஜிக்கப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீகமாக அலங்கரிக்கப்பட்டன. நானாவிதப் படையல்களும், பூஜைகளும்  சிறப்புற நடத்தி வைத்து மகிழ்ந்தார் தசரதச் சக்கரவர்த்தி. அத்துடன் நகரில் உள்ள ஆலயங்களின் தேவதைகள் மற்றும் நாகர்களுக்கும் சிறப்புடன் பூஜைகளுடன், நேர்ச்சைக் கடன்களும், அந்தணர்களுக்கு தக்க தானங்களும் அவர்கள் மனம் மகிழும்படி  நிறைவேற்றி வைக்கப்பட்டன.

குலகுரு வஷிஸ்டர் நல்லாசிகளுடன், சக்கரவர்த்தி அவர்களின் கருத்தை, அமைச்சர் சுமந்திரர், ஶ்ரீராமர் பட்டாபிஷேக வைபவம் குறித்த செய்தி மடலை வாசித்த பின்னர் சபையோர் முன்னால் வெளியிடப் பட்டது. நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது, அந்தப்புரத்தில் அவ்வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் அதுவே தசரத சக்கரவர்த்தி அவர்களுக்கு துக்க சாகரமாக மாறித் தன்னை, தனது இன்னுயிரைப் பலி கெள்ளப்போகும் என்பதை அப்போது அவர் அறிந்தாரில்லை. கூனி மந்தரையின் வடிவத்தில் விதியானது விழாவை முறியடிப்பேன் என சூளுரை பகர்ந்து, இதோ கைகேயியின் அந்தப்புரத்தினுள் மனங்கொதித்துக் கருவியபடியே செல்கிறது. 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button