முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

615

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(15)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ  செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உண்மைப் பொருளை நாடி தவவாழ்வில் ஈடுபடுபவர்களுக்குத் தனது அனுபவத்தில் சில விஷேசமான சக்திகள் கிடைக்கப் பெற்றவுடன், அதனை வளர்ச்சிநிலை அடையச் செய்ய வேண்டுவது மிகவும் அவசியமான ஒன்று. அதற்குத் தடங்கல்கள் ஏற்பட்டு விட்டாலோ, அத்துடன் நின்று விடாமல் முயற்சியை மேலும் தொடர்ந்தால், பேரருட் செல்வமாகிய, நித்திய வஸ்துவாகிய பரம் பொருளை அடையும் மார்க்கம் உதயமாகி விடும். இது அனுபவம் பெற்றவர்களின் இறுதியான உண்மை என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஆஞ்சநேயர் செய்து வரும் தவம்  ஞானியர்களைக் களிப்பில் ஆழ்த்தியது. எந்தவிதமான கவலைகளோ, துக்கங்களோ அற்ற அவர்களின் திருப்பாதங்கள், ஆஞ்சநேயர் தவம் இருந்து வருகின்ற காட்சியைக் காண வந்ததால், அவ்விடத்தில்பட்டு அற்புதமான மகிமையை ஏற்படுத்தி விட்டது. இறைவன் சம்பந்தத்தால் அவர்கள் பெற்ற ஆனந்தம், அவர்களின் வரவால் ஆஞ்சநேயருக்கும் ஏற்பட்டு விட்டது. மனம், புத்தி, அறிவைக் கடந்த அவர்களின் ஆசியினால், அடக்கமும் பணிவும் கொண்டு விளங்கிய மகாதேவர் புத்திரர் ஆஞ்சநேயர், சத்திய தர்மத்தைக் கடைப்பிடித்து, அறிவின் மேலாம் குணங்களைத் தன்னகத்தே நிறைத்துக் கொண்டு, தவத்தினால் உண்மையை உணர்ந்து பெற்றார். 

 

சகல சித்திகளும் கைவரப் பெற்று, ஓர் உன்னதமான தெய்வீக நிலையை ஆஞ்சநேயர் அடையச் செய்திட எண்ணிய பகவான் மகாதேவர், வாயுதேவரை வரவழைத்தார். அவரிடம், “சக்தியின் அவதாரமாகிய அஞ்சனாதேவியின் தவத்திற்கு உதவிகள் செய்தது போன்றே, தனது அம்சமாகிய ஆஞ்சநேயருக்கு நீங்கள் நல்வழி காட்ட வேண்டும் ” எனக்கேட்டுக் கொண்டு. அப்படியே வாயுதேவரும் உடனிருந்து அனைத்து வித்தைகளையும் போதித்து வரலானார். திருவருளின் அருளாசி துணை கொண்டு தனது விடா முயற்சியினால் தர்மத்தை உணர்ந்து கொண்ட தவ ஆஞ்சநேயர் முழுமையான காரிய  சித்தி பெற்றார். இவர் ராம நாமத்தை உச்சரித்து சரியான முறையில் தவசித்தி பெற்றிட வாயுதேவர் வழிகாட்டினார்.  அது என்னவென்றால் பிராணாயாமம் செய்யும் போது மூச்சை நாசியினால் உள்ளே இழுத்து நிறுத்தும் உட்கும்பகம் செய்யும் போது, ராம நாமத்தை வேண்டிய மட்டு்ம், மனதினால் சப்தமாக உரத்து  ஜெபம் செய்து வரும்படி உபதேசித்ததால் பெற்ற பலனாகும். ஆஞ்சநேயரின் உட்கும்பகப் பிராணாயாம தவத்தால் ஏற்பட்டு விடும் சரீரத்தின் அதீத உஷ்ணத்தைக் குறைத்து, அவரது தவம் மேலும் தொடர அன்னை அஞ்சனாதேவி தகுந்த ஔஷாதிகள் தந்து உதவி செய்து வரலானாள். தவம் புரிபவர்கள் சரீரம் திடப்படத் தகுந்த அமுதம் போன்ற உணவுகளைத் தயார் செய்து உண்ணும்படி  அன்புடன் உபசரித்து வந்தாள். மேலும் யோகப் பயிற்சிகள் அவரை வஜ்ஜிர தேகம் உடையவராகப் பரிமளிக்கச் செய்திடவே, இளமை மிகுந்த  நைஷ்டியப் பிரம்மச்சரிய,  வாலிப தவ யோகியாகக் காட்சியளித்தார். 

ஆஞ்சநேயரும் தனது ஆசான் கற்றுத்தந்த சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

 

ராமாவதார நோக்கத்தை அறிந்திருந்த அநேக முனிவர்களும், ரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரைக் காண வந்தார்கள் எனக் கூறினோம் அல்லவா? அதில் மகாதவசிரேஷ்டர் அகத்தியப் பெருமானும் வந்திருந்தார். அவர் ஆஞ்சநேயருக்கு அநேக தவத்தின் உண்மைகளை எடுத்துக்கூறினார். ராம அவதார நோக்கத்தில் ஆஞ்சநேயர் செய்ய வேண்டிய  செயல்கள் என்னென்ன என்று விளக்கமாகப்  புரிய வைத்தார். மேலும் வேண்டும் போது தனது வடிவை வேறோர் உருவமாக மாற்றிக் கொள்ளும் வித்தைகளை நன்கு  போதித்தார். இதனைப் பயன்படுத்தி ராவணேஸ்வரன் சபையில் ஓர் ஆலோசகராக அமர்வதற்குப் பணித்தார். ராவணனின் உயிர் ரகசியத்தை அவன் அறிந்து கொள்ளாமல் கவனித்து வரவேண்டும் என்றும், அப்படி அனுமான் வெளிப்படும் பட்சத்தில் கிஷ்கிந்தை மலைக்கு ஏகி வாலியின் பாதுகாப்பில் இருந்து கொண்டு, ஶ்ரீராமன் அங்கு வந்து சேரும் வரை தவத்தில் இருக்கக் கேட்டுக் கொண்டார். பகவான் அப்பாவி மனிதனாக அவதாரம் எடுத்த காலகட்டத்தில் இச்சம்பவங்கள் நடந்தேறி விட்டன. அனுமானை எப்படி மகாதேவரும், அஞ்சனையும், வாயுதேவரும், லோககுரு அகத்தியப் பெருமானும் மகாகாவிய வரலாற்றிற்குத் தயார் செய்ததைப் போன்றே ராமபிரானை அவரது உத்தரவுப் படியே அநேக தெய்வங்கள் ராவணன் வதம் காண அவதாரம் எடுத்தனர். பரந்தாமனும் ரகுகுல சக்கரவர்த்தி தசரதனின் அப்பாவி மகனாக அவதரித்தார்.

 

குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button