பகவானின் அப்பாவி மனித அவதாரம்!

385

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(5)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ  செல்வ ஆஞ்சநேயர் பரிகார  ஸ்தல வரலாறு.

 

பகவானின் அப்பாவி மனித அவதாரம்!    

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இறைவனை தரிசிக்க வைகுண்டம் வந்த சனகாதி முனிவர்கள் நால்வரையும், அங்கு  வாயில் காவலர்களாக விளங்கி வந்த ஜயன், விஜயர் இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ” பகவானின் ஏகாந்த வேளையில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது”  எனத் தடை விதித்தனர். பகவானை எந்த நேரத்திலும் சென்று தரிசனம் பெற அனுமதி பெற்றிருந்த அவர்கள், அதற்குத்தடை ஏற்பட்டதும் ஜயன், விஜயர்களை வைகுண்டத்தை  விட்டகன்று பூவுலகில் பிறந்து உழல்பவர்களாக சபித்து விட்டனர். தங்களுடைய குற்றத்தை உணர்ந்து கொண்ட  ஜயவிஜயர்கள் சாப விமோசனம் அடையும் வழியை சனகாதி முனிவர்களின் பாதம் பணிந்து வேண்டி நின்றனர். இறைவனே அங்கு தோன்றி ஜயவிஜயர் செய்த பிழையை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  இறைவனைக் கண்டு மகிழ்ந்த முனி புங்கவர்கள், விமோசமாக இரண்டு வழிகளைக் கூறினர். “முதலாவது, ஏழு பிறவிகளில் இறைவன் பக்தனாகவே பிறந்து  இன்ப துன்பங்களை அனுபவித்து பரமபதம் சேர்வது; மற்றொன்று, மூன்று பிறவிகளில் இறைவனை நிந்தனை செய்து,  வேதனை மிகுந்த அகாலமரணம் அடைந்த பிறகு

மீண்டும் வைகுந்தம் சேர்வது ” என்ற சாப விமோசனத்தைக் கூறினர்.

 

ஜயன், விஜயர் இருவரும் முதற்பிறவியில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற  அசுரர்களாகப் பிறப்பெடுத்து மாண்டனர். இரண்டாவது பிறவியில் ஜயன், விஜயன் இருவருமே ராவணன், கும்பகர்ணனாகப் பிறந்து மற்றோரு சகோதரன் விபீஷணன் மூவரும் பிரம்மதேவரை  எண்ணி தவம் புரிந்தனர். இறையருள் பெறவேண்டி அருமை மிகு தவத்தினை  கடுமையாக  அனுஷ்டித்தான் ராவணேஸ்வரன். தவத்திற்கு மெச்சி மனம் இரங்கிய இறைவன் காட்சி தந்து, “வேண்டுவன கேள்” என மொழிந்தார். மரணமே இல்லாத வாழ்வு வேண்டும் என எண்ணிய ராவணேஸ்வரன், ” ஈரேழு பதினான்கு உலகத்திலும்  யாராலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாத வரம் வேண்டும், அருள்வீர் ” என யாசித்தான். அதற்கு இறைவனோ, “மரணமில்லாப் பெருவாழ்வு என்பது உலகப் பற்றுகளைத் துறந்து, இறைப்பற்றை மட்டுமே கொண்டு, அன்புநெறியில் நின்று, உலகினில் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எண்ணித் தனக்கென வாழா இறை நேசர்கள் அதனை(மரணத்தை வெல்ல) உபாசனை செய்கின்றார்கள். ராவணா, பிறப்பெடுத்த  எல்லா உயிர்களையும் பின் தொடர்ந்து வரும் மரணம் இயற்கையின் இயல்பு; அதுவே இறைசக்தியின் படைப்பு.  வேறு வரம் கேட்பாய்”  என ஆணையிட்டார்.

 

சகாவரம் பெற்று அகிலலோகங்களையும் அதிகார உச்சத்தில் ஆட்டிப்படைக்க வேண்டும், என்ற மமதை கொண்ட ராவணன் இறைவனாரது ஆணை கேட்டு கலங்கி விடவில்லை. மாறாக வேறோரு வரத்தைக் கேட்டுப் பெற்றான். தனக்கு ஆபத்து நேருமெனில் வானுறையும் தெய்வங்களால் மட்டுமே ஏற்படும் என எண்ணினான். பூவுலக மக்களோ அரசனின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, பயந்து அடங்கி நடப்பவர்கள். அவர்களால் தனக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்பட்டு விடாது என எண்ணி இறைவனைப் பார்த்து, ” ஐயனே எனக்கு மரணம் நேரிட வேண்டுமெனில் பூவுலகில், அப்பாவியாகவும், அரசனாகவும் பிறப்பெடுத்த மனிதன் ஒருவனால் மட்டுமே ஏற்பட வேண்டுமே தவிர, வேறு யாராலும் எனக்கு மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்கின்ற வரத்தையே கோருகிறேன்” எனக் கேட்டான். தன் மீது அச்சம் கொண்ட மனிதர்கள் தன்னை எதிர்க்கத் துணிய மாட்டார்கள் என்ற எண்ணமும், மற்றும் அரசனாக வருபவன், கோழையாக, அப்பாவியாக இருக்க மாட்டான் என நினைத்துத்தான் அவன் அத்தகைய வரத்தைக் கேட்டுப் பெற்றான். அங்குதான் ராவணனை ஊழ்வினையாக நிழல் போன்று தொடரும் மரணம் பற்றிக் கொண்டு விட்டதை இறைவான் மட்டுமேமட்டுமேப அறிந்த உண்மையானது. இறையருளானது  மனித வடிவில் சூரிய  குலத்தில் வந்து உதித்தே விட்டது.

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாசி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button