தன்னைத்தானே உருவாக்குவது எது?

352

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(13)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

தன்னைத்தானே உருவாக்குவது எது?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆஞ்சநேயர் தவமிருந்து முனிவர்களைப் போல சக்தி அடைய விரும்பிய காரணம் கருதி, அவரது தாய் அஞ்சனாதேவி தான் அறிந்து கற்றுணர்ந்தவற்றைப் போதனை செய்து வந்தாள். அனுமானுடன் தானும் தவத்தில் ஈடுபட்டாள். ஆஞ்சநேயர் தனது தாயிடம், ” அன்னையே ஆத்மா நம்முள் அமைந்து செய்யும் செயல் என்ன? ” எனக் கேட்டார். அதற்கு அஞ்சனை, “மகனே, பகல் பொழுதினில் உழைத்த உடலுக்கும், மனதிற்கும் இரவினில் தன்னுள்  ஐக்கியம் செய்து , அருமருந்தாக ஓய்வைத் தந்து, உறங்க வைத்து, சக்தி பெறச் செய்வதும் ஆத்மாவேயாகும். பஞ்சேந்திரியங்களை இயங்கச் செய்வதும், புலன்களால் உணர  வைத்து, அனுபவங்களால் இன்ப, துன்பங்களைத் தருவதும் ஆன்மாவே தான். ஆனால் ஆன்மா எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. மற்றும் உடல் உறுப்புக்களின் குறைபாடுகளினாலும் ஆன்மா துன்பம் உறுவதில்லை. மனிதன் சந்தர்ப்பவசத்தால் கொலையுறும் போதும், ஆன்மா கொல்லப்படுவதில்லை. ஆழ்ந்து நிம்மதியாகக் கனவுகளின்றி உறங்கும் உற்ற உறு பொருள் ஒன்று உண்டு எனில் அதுவே ஆத்மாவாகும். எந்த விதமான பயமோ, அச்சமோ அந்தப் பரம்பொருளை நெருங்குவதில்லை.  அனைத்திற்கும் அப்பாற்பட்ட அமரநிலையில் அது ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது மகனே ” என்றாள். 

 

ஆஞ்சநேயர், ” தாயே, நாம் ஆழ்ந்து உறங்கும் போது எதையுமே அறிய இயலாது அல்லவா? அது வெறுமையான நிலைக்குள் இருப்பது போன்றதல்லவா? அங்கு எனக்கு  ஆத்மாவை விளங்கச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அஞ்சனாதேவி, ” சிரஞ்சீவி வரம் பெற்ற எனது அருமை மகனே எனது தந்தையிடம் நான் பெற்ற வேதத்தின் சாரத்தைத்தான் இப்போது உனக்குக் கூறுகின்றேன். நிலையற்ற உலக வாழ்வில் மனித உடலும் நிலையில்லாமல் அழியக்கூடியது என்ற உண்மையை உணர வேண்டும். பிறக்கும் போது நிழல் போல் தொடர்ந்து வரும் மரணம் என்னும் ஆற்றல் சக்திக்கு உட்பட்டது. இது மாற்றம் பெறாத உண்மை தான். ஆனால் ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வினைத் தந்திடும் ஓர் உயரிய உறுபொருளாய்  கூறப்படுன்றது. அது இதயத்தாமரையில் கோயில் கொண்டு பிரகாசிக்கின்றது. உடலானது ஆத்மா தங்கிடும் இல்லமாக உள்ளது. இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாய் விளங்கும் உடலால் ஒரு மனிதன் ஆளப்படுவதாக இருக்கும் பட்சத்தில், அவனுக்கு விடுதலை என்பது எப்போதும் கிடைக்கப் பெருவதில்லை. ஆத்மப் பேரின்பத்தில் திளைத்திருக்கத் தவம் செய்து, பரம் பொருள் இன்பத்தில் நிலையாக வீற்றிருக்கும் போதுதான், இன்ப துன்பங்களால் வரும் எல்லா அடிமைத் தளைகளினின்றும் விடுபட்டு விடுகின்றான். மோனதவத்தினால் ஏற்படும் மேலான அமைதியில் தான் ஆன்மா விழிப்படைந்து எழுகின்றது. அது ஒளியுடலடைந்து மரணத்திற்கு உட்பட்ட உடலுக்கும் அப்பால் ஏகி, ஆன்ம விடுதலையோடு, சுதந்திரமாக மகிழ்வுடன் இறைவனை அடைகின்றது. உலகினில் சிரஞ்சீவித்தன்மை அருள் பெற்றால் மட்டும் போதாது மகனே!  சிந்திப்பது அனைத்தும்  செய்து கொண்டிருப்பது ஆத்மாதான் என அறிய வேண்டும். நினைக்கின்ற ஓர் உறுப்பாய்  உள்ளது மனம் மட்டும்தான். ஆத்மாதரும் ஒளியால் தான் மனம் பார்க்கவும், சிந்தனை செய்யவும், இவ்வுலகில் சகலத்தையும் அனுபவித்து வாழவும் முடிகின்றது. இறைவனை தியானத்தின் மூலமாக வணங்குபவர்களுக்கு மட்டுமே சகல ஆசைகளும் தூய்மை பெறுகின்றன. அவர்களே இறைவனாகிய பரம் பொருளில் கலந்து மேலாம் இன்பத்தை அடைந்து விடுகின்றனர் ” என்று அன்னை உபதேசித்தாள்.

 

மேலும், “மகனே, நமது உடலினுள் இருந்து தான் ஆத்மாண்டவனாகிய சூத்திரதாரன் உடலில் உயிராகவும் விளங்கி, பேசுவது முதற் கொண்டு சகல காரியங்களையும்  செய்து கொண்டிருப்பதாக முதலிலேயே கூறினேன். நற்பயன்களும், தீமைகளும் அங்குதான் உண்டு. நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கு ஒப்பத்தான்  இவைகளை,  உடலினுள் குடிகொண்டுள்ள ஆத்மாவாகிய தேவன் செயற்படுத்துகிறார் என்பது ஞானம் பெற்றவர்களின் வாக்கு! உன்னைச் சுற்றிலும் மூடிக்கொண்டு இருக்கும் உடலை நீ என எண்ணி மயக்கம் உறாதே. நமது உடலில் அமைவு பெற்றிருக்கும் கர்மேந்திரியங்களை ஆத்மா என்று எண்ணாதே. ஒரு தொழில் செய்பவரிடம் தொழிலுக்கு உரிய உபகரண கருவிகள் இருப்பதைப் போலவே, நமது உடலில் இவை வெறும் கருவிகள்தான். உடலிலேயே சேர்த்து அமைக்கப்பட்டு இருப்பதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை. உடலுக்குள் நின்று இவைகளைச் செலுத்தியும், அடக்கி ஆட்சி செய்து வரும் ஆத்மாவை மறந்து விட்டு இந்தக் கருவிகளையே நன்மை தருவதாக எண்ணாதே. தொழிலாளி வைத்து இருக்கும் உபகரணங்கள் போல் இவைகள் ஆன்மாவின் கருவிகளாம்.” 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை ®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button