சனீஸ்வரனின் வாக்கு பலித்தே தீரும்!

595

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(29) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

சனீஸ்வரனின் வாக்கு பலித்தே தீரும்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குடும்பத்தைக் குலைப்பதில் பெயர் பெற்ற கூனி மந்தரை தனது பால்ய வயதில் இருந்தே சனீஸ்வரனைப் பிரியமுடன் ஜெபம் செய்து வந்தவள். சனியின் செயல் ரகசியத்தைத் தனது போதகராக விளங்கி வந்த ஆசானிடம் கற்றுக் கொண்டு, எதிர் மறையான எண்ணங்களுக்குச் ஜெபத்தில் வலுவூட்டி வந்தவள். எந்தவொரு தொழில் காரியம் நமக்கு நடைபெற வேண்டியது இருந்து, குடும்பத்தினர் அக்காரியம் பற்றிப் பேசும் பொழுது, பேச்சுக்குப் பேச்சு “சரி சரி” என்றே பேசிக் கொண்டிருந்தால், ஆரம்பிக்கப் போகும் தொழிலானது சரிவை அடைந்து விடும்; அல்லது வேறு காரியமாய் இருந்தாலும் அக்காரியம் பழுதாகிப் பலன் தராது போகும். சனிக்குப் பிரிய மந்திரமாகிய “சரி” என்ற சொல்லை உச்சரித்துக்  கொண்டே இருப்பவர்களைச் சனி மிகவும் நெருங்கியிருந்து, தீராத துன்பங்களுக்கு உள்ளாகும் வழிகளைக் காட்டிக் கொண்டிருப்பார். அவர்களுக்கு வெற்றி பெறும் வழிகள் அனைத்தும் அடைபட்டுப் போய், நஷ்டத்தின் வாயில் வழி அடிக்கடி புலப்பட்டுக் கொண்டிருக்கும்.  மனம் தெளிவற்றுக் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும். சிந்தனைகள் அனைத்தும் தனக்கு விரோதமாகவே இருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மேலோங்கி இருக்க நன்மைகள் விலகிச் செல்லும். எதிலும், எவர் மீதும் சந்தேகம் உண்டாகும். தீயோர் நல்லோராகவும், நல்லவர்கள் தீயவர்களாகவும் மனதில் உதயமாகும். வாழ்வில் வெறுப்பு ஏற்பட ஏற்பட தெய்வ நிந்தனை செய்து வருவார்கள். இவர்களது இந்த எண்ணத்தை சனீஸ்வரன் வலுப்பெறச் செய்து ஆசியருளிக் கொண்டே இருப்பார். இதனைக் கூனி மந்தரை தனது ஆசானிடம் இந்த ரகசியத்தை  நன்றாக அறிந்திருந்தாள். அத்துடன் தனக்கு வேண்டப்படாதவர்களை “சரி” என்ற மந்திரத்தினால் இன்னல்களை விளைவிக்கவும், எதிரியியை விலக்கவும், விலகிச் செல்லும் எதிரியின் அதிர்ஷ்டத்தைத் தான் அடைந்து விடவும் கூடிய வித்தையைக் கற்றறிந்திருந்தாள்.

 

ஶ்ரீராமர் மீது அளவற்ற அன்பையும், பாசத்தையும் ஒருங்கே கொண்டிருந்த  கைகேயினிடத்தில், சத்திய தர்மத்திற்குப் புறம்பாக  எண்ணிச் செயற்பட  வைத்திருக்க முடியுமென்றால், சனி உபாசனை செய்து வந்த, குடி கெடுக்கும் கூனி மந்தரையின் தீமை சக்தியின் ஆற்றலை, சாதாணமாக எண்ணிவிடல்  தகாது! இதனை வெற்றி கொள்ள ஒரே வழி இறை நம்பிக்கையுடன் கொண்ட நேர்மறையான பிரார்த்தனை மட்டுமே சாத்தியம். இதனைக் கைகேயி மறந்து போனதன் காரணம் அவள் ஒரு முனிவர் இடத்தினில் சாபத்தைப் பெற்றிருந்தாள். இனிய இன்பம் தரும் இல்லற வாழ்வைத் துறந்து, கடுந்தவம் புரியும்  தபஸ்விகளைக் கண்டால், அவளுக்குச் சொல்லி மாளாத வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ‘வனபோஜனம்’ என்ற விழா நடந்து கொண்டிருந்தது. அரச குலத்தவர்கள் இந்த விழாவினை விலங்குகளை வேட்டையாடி உண்டு மகிழப் பயன்படுத்தி வந்தனர். தசரதனை மணந்து கொள்வதற்கு முன்பு கைகேயி தனது பெற்றோருடனும், தனது தோழி மந்தரையுடனும் வனபோஜனம் அருந்தச் சென்றிருந்தாள். அங்கே வனத்தில்  தவம் முடிந்து நித்திரை வசப்பட்டிருந்த ஒர் முனிவனைக் கைகேயி காண நேர்ந்தது. அவளுக்கு முனிவனைப் பார்த்ததும் கோபம் ஏற்பட்டதும், அவரை அவமானப்படுத்த நினைத்தாள். அவர் அருகே வைத்திருந்த தண்டத்தை எடுத்து மறைத்து வைத்தாள். முகத்தில் கரியைப் பூசி முனிவனைக் கேலி செய்து கொண்டிருந்தாள். கண்விழித்து எழுந்த முனிவர் தமக்கு அடாதன செய்துவிட்ட  இளவரசி கைகேயியைப் பார்த்து, ” தமது தண்டம் எங்கே?” என வினாவினார். அப்போது தனது அருகே இருந்த ஓடையில் கரிபூசப்பட்ட தமது வதனம் பிரதிபலிப்பதை கண்டு கோபம் மேலிட அவளைச் சபித்து விட்டார்.

 

” மாபாதகி, எமது தண்டத்தை எடுத்து மறைத்து வைத்ததோடல்லாமல், முகத்தில்

கரி பூசி இகழ்ச்சியும் செய்திருக்கின்றாய். அடாதன செய்தஉனது கை விரல்கள் நீண்டு இரும்பாக மாறிவிடும். தீமையின் பிடியில் சிக்குண்டு சத்திய, தர்மத்தை உதாசீனம் செய்யப்புகும் உன்னை நாட்டு மக்கள்  வெறுத்து, இகழும்படி  உனது வாழ்வில் தீராத களங்கம் ஏற்பட்டு அல்லலுறுவாய் ” என்று  சினந்து கூறிவிட்டார். அவளின் கைவிரல்கள் நீண்டு உடனே இரும்புக் கம்பிகளாக மாறி விட்டன. அதனைக் கண்டு அச்சமுற்ற கைகேயி மறைத்து வைத்த தண்டத்தை எடுத்து வந்து, அவரது தாழ் பணிந்து, கண்ணீர் விட்டு அரற்றி சாபவிமோசனம் அருளும்படி கேட்டுக் கொண்டாள். அவரும் மனமிரங்கி அவளுக்கு சாபவிமோசன வழியைக் கூறினார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு  இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள், 

தவத்திரு நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button