எண்ணம் பலித்தது, சாபமும் பலித்தது!

571

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(30) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

எண்ணம் பலித்தது, சாபமும் பலித்தது! 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இறையருளால் ஜீவாத்ம ஐக்கியநிலை  பெற விளையும் ஒரு முனிவர் அதற்காக எத்தனை பிரயாசைகள் பெறவேண்டி இருக்கின்றது. உலகில் காண்கின்ற எல்லாப் பொருட்களும் நிலையற்றவை என எண்ணுகிறார். பிறகு சகலத்தையும் மறந்து சுகமான தியானத்தில், சங்கல்பம் செய்த அவர் இறைவன் சிந்தனையில் ஆழ்கின்றார். மற்ற எண்ணங்கள் அவரில் உருவாவதில்லை. சகல இன்பங்களையும் துறந்த அவர் சித்தம் இறைவனிடம் ஐக்கியநிலை பெற்றுவிடுகிறது. இப்போது இறைசக்தியை மட்டுமே உணர்வாகக் கொண்டு, தூங்காமல் தூங்குவது போல் காணப்படும் ஞானவான், தன்னுடைய அந்தரங்கத்தில் தீமை குணங்கள் அனைத்தும் நீங்கியவராகத் தன்னை வெளிப்படுத்திய இறைவனுக்கு நன்றி கூறுகின்றார். உலகத்தில் சகல காரியங்களையும் செய்து கொண்டே வாழ்ந்து வரும் அவர், தன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இத்தகைய தவம் புரியும் ஓர் பரிசுத்த முனிவர் , உலக அறிவு, கல்வி அறிவு, தேக அறிவு அனைத்தையும் இறைவன் திருவடியில் அர்ப்பணம் செய்து விட்டு, எண்ணங்களற்று இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இறைவன் அருளோடு வாழ விருப்பமுற்ற தவமுனிவர் தூங்காமல் தூங்கி இறைசுகம் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவர் தவத்திற்கு இடையூறு செய்தாள் கைகேயி. அதனால் முனிவரின் சாபமும் பெற்றாள்.

 

தண்டத்தை முனிவனின் முன்னால் வைத்துப் பணிவாக வணங்கி அழுது கொண்டிருந்த கைகேயினிடம், மந்தரை சாபவிமோசனம் கேட்கும்படி தூண்டினாள். தண்டத்தைக் கண்ட முனிவர் சந்தோஷம் உற்றார். அவள் கோரியபடியே விமோசனம் உரைத்தார். ” நீ இஷ்டப்படும் பொழுது உனது விரல்கள் இரும்புக் கம்பிகளாக மாறட்டும். மற்ற நேரங்களில் அவைகள் இயல்பு நிலையில் இருக்கும்” என்று கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று போனார். பழிபாவ சாபவிமோசனம் கிடைக்காமல் வருத்தம் கொண்ட கைகேயினிடம் மந்தரை, ” பழியும் பாவமும் மற்றவர்களுக்குத்தான். அது நமக்கு ஏற்பட்டு விடாது. காரணம் முனிவர் சமாதானம் அடைந்து விட்டார்  “என  ஆறுதல் பல கூறித்தேற்றினாள். அயோத்தி மன்னனின் பட்டத்தரசி கௌசல்யைக்குப் புத்திர பாக்கியம் சித்திக்காமல் இருந்த போது இரண்டாவது மனைவியாக வந்தவள் கைகேயி. வரும் போது தனது சேடியும், இணை பிரியாத கொடிய துன்பம் விளைவிக்கப்போகும், தீமை சக்தி மந்தரையையும் உடனழைத்து வந்தாள். வந்தவள் மெல்ல மெல்ல கைகேயியின் மனதைக் கெடுக்க நினைத்தாள். பட்ட மகிஷி கௌசல்யை மீது துவேஷ எண்ணங்களை சிறுகச்சிறுக விதைத்து வந்தாள். ராமன் பட்டத்திற்கு வந்து விட்டால் கைகேயி கைகட்டி சேவகம் செய்ய வேண்டியது வந்து விடும் என்ற பயத்தை உண்டு பண்ணினாள். உதட்டில் அன்பும், உள்ளத்தில் சூதும் நிரம்பிய கூனி மந்தரையோ, கைகேயியின் வாழ்விற்கு நன்மையைச் செய்வது போன்று , வார்த்தையில் ” சரிசரி”  எனப் பேச வைத்து சனியை உள்ளே வரவழைத்து விட்டாள். சனி சரியாக ஊடல் மாளிகையின் வாயில் கதவின் நிலைப்படியின் மீது அமர்ந்து கொண்டது. தசரதச் சக்கரவர்த்தியின் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது.

 

கூனி மந்தரை கைகேயினிடம், ” அரசியே ராமனுக்குப் பட்டம் சூடும் தீய செய்தியை நான் கேட்டதிலிருந்து உண்ணாமல், உறங்காமல் தவித்துக்  கொண்டிருந்தேன். இதனைப்பற்றி அறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொண்டேன். உனது மகன் பரதன் தான் அரசாள்வான் என்று உறுதிபடக் கூறினார்கள். இது சத்திய வாக்காகும். உனக்கு வெற்றி கிடைக்கும். காரணம் அரசன் உன்மீது மையல் கொண்டுள்ளான். எனது பேச்சைக் கேட்டால் அடுத்து நீ என்ன செய்ய வேண்டும் எனஆலோசனை சொல்வேன். இது சனீஸ்வரன் மீது ஆணை”  என்றாள். அதனைக் கேட்டு கைகேயி மனம் கனிந்து, “எனது வாழ்வினுக்கு வரவிருக்கின்ற மாளாத துன்பத்தை நீக்கிவிட்டு, பரதன் நாடாள வழிவகைகளைக் கூறுகின்ற உனக்கு நன்றி. உனது ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றாள். அதற்கு கூனி மந்தரை, ”அரசியே நீ முன்பு ஒருமுறை என்னிடம் அரசர் பற்றிய ஒரு ரகசியம் கூறினாய்! அது உங்களுக்கு நினைவில் வரவில்லையா? நானே நினைவு படுத்துகிறேன். அரசர் உங்களுக்குத் தருவதாக வாக்களித்த இரண்டு வரங்கள் இன்னும் அவரிடம் தாம் உள்ளன! ஒன்று பரதன் நாடாளவும் மற்றொன்று ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசியாக வாழவும், அவ்விரு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள். இதுதான் நல்ல தருணம். உனக்குக் கேடு நினைத்த மூத்தாளைப் பழிக்குப் பழிவாங்கு , நீ சுகப்படுவாய்” என்று ஆசி கூறினாள்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button